Saturday, February 12, 2011

காதலர் தினம்!

காதலர் தினம்!

அன்பே என்றும் அவனியிலே
அடிப்படை என்றே ஆதரித்தே
நாளும் மகிழ்ந்து கொண்டாடி
நலத்தொடு சிறப்புற வாழ்ந்திடவே
வாழ்வின் வசந்தக் கணங்களுக்கு
வந்திடும் நேசத் திருநாளில்
காதல் மிளிரும் இதயங்களே
காதலர் தினத்து வாழ்த்துக்களே!

நினைவோ கனவோ நிஜமோ
நெஞ்சில் காதல் நிறைந்திடவும்
மகிழ்பவர் கண்டு மனமாற
மகிழ்வே கொண்டு சிறப்புறவும்
பாசக் கிளிகள் என்னாளும்
பாரில் காதல்பண் பாடிடவும்
வாசமலராய் மனங்கள் எல்லாம்
நேசம் பேசுமோர் நினைவுநாளே!

அன்பை உளங்கள் பகிர்ந்திடவும்
அன்பை உதடுகள் பகர்ந்திடவும்
பிளவுகள் விலகி வாழ்ந்திடவும்
பிரிவினை அகலச் சேர்ந்திடவும்
பேதங்கள் துறந்து பேசிடவும்
வாதங்கள் மறந்து கூடிடவும்
மனங்கள் ஒன்றி மகிழ்ந்திடவும்
மனிதம் போற்றும் நன்னாளே...

காதலைச் சொல்லும் தருணமோ?
கருணையும் கனிவும் பொழியுமோ?
கோபமும் மோதலும் ஊடலும்
கொள்ளை போகாத் திருநாளாம்
வாய்ப்பினை நல்கும் நன்நாளே
வளரட்டும் காதலும் என்னாளும்
வாழ்த்தியே மகிழ்வோம் பொன்னாளை
வாழிய காதலர் நன்னாளே!

***

No comments:

Post a Comment