Tuesday, June 7, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

அன்னையர் அந்தாதி (பகுதி: 3)

2. திருமகள் அந்தாதி



இறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி
யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன்
திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும்
பெருநிதியப் பொருளாய்ப் பொழி. 
அந்தாதிக் கட்டளை:
செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய்
செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய்
பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன்
சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே!

உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய்
கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய்
நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய்
இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே!
 
அந்தாதி: 

1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!

செங்கமல(ச்) செழுமலரில் சீர்மல்கி
          வாசஞ்செய் செம்பொருட்
தங்கமலர் தாரணியாய் தாயுமாய்
          தாரகையாய் தாமரைக்கண்
அங்கமுடை அம்போதி அத்தனவன்
          அகமலராய் அமர்ந்தேகி
அங்கையில் அகமிளகி பெரும்பேறு
          அருள்நல்கும் அலர்மேலே!


2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!

அலர்மேல் அமர்அருள் அலைமகள்
          அன்னையாய் அகிலத்து
மலர்மேல் எலாம்வள நலம்பொலி
          நாயகியாய் வையத்து
நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ்
          பாச்சூடியாய் நித்திலத்து
சிலம்பால் சிந்தாமணி நகையேநின்
          திருவாய்ச் செவ்விதழே!


3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!

செவ்விதழ் சேயிழையாய் பாலாழி
          திரளமுதச் செல்வியுனை
செவ்வியத் தனபதிபால் கடனாகித்
          திருமணித்த செவ்வாயன்
அவ்விதமே காத்துநின்றே காலமெலாங்
          கழிப்பதுவோ அக்கடன்?
நவ்விநினது நாரணன்பால் நற்கருணை
          நவில்வாயே நறுமலரே!


4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!

நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள்
          ஐம்பொறி நடைக்கூட
மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள்
          அகப்பை மனமடலாய்
உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை
          ஐவுடம்பு உடனுறைச்
செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர்
          பதிநாடிச் செங்கண்ணே!


5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!

செங்கண் இயற்கை செயற்கை
          மாயையாய் செழுமதியாய்
எங்கண் அஞ்ஞான அகத்துணர்
          இன்பதுன்ப பிரமையாய்
அங்கண் விளையும் அறிவொளி
          விளக்கத்து அகிலமாய்
வங்கண் யாங்கிலும் இலங்கும்
          இலக்குமி மாலரங்கமே!


6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!

மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து
          மாற்றா மாற்றமாய்
பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை
          நறுநெய் பாங்குறை
வாலரங்கப் பருவவிதி வளமுடை
          மாற்றாய் வளர்நிறை
சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய்
          செழிக்குஞ் செம்மனமே!


7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!

செம்மனத் துரமொடு செழுநல்
          இலக்கொடு செய்வினை
எம்மனங் கருத்தொடு இயங்குமோ
          ஆங்கண் இலங்கியும்
கம்மனத் திறத்தொடு நற்கருமம்
          ஆற்றுமக் கடமையவர்
தம்மனத் திருவாய் வருவாய்
          தருவாய் திருமடந்தே!


8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார்
          ஆழ்ந்தமனத் திருவிடத்துக்
கருமடந்தாய் கரவாதே கருமவினை
          ஆன்றவர்பால் கருணைவளம்
தருமடந்தாய் இரவாதே இருந்தாலும்
          இரங்கிநலம் தந்தவர்பால்
பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில்
          ஈந்தருளும் பிங்கலனே!


9. உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!

பிங்கலக் கருணையே! பொருளன்றி
          பெருநிலத்தே பயனில்லையால்
நங்கலப் பொருளிலாரை இல்லாரும்
          ஈந்தாருமே நயந்திலார்போல்
மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே
          நம்பிக்கை மனவளத்தால்
கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப்
          பரிமாறும் கைமாறே!


10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!

கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய்
          நிலைநலக் களமீயும்
வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப்
          பெருக்காகி வளமீயும்
மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு
          நஞ்சாகும் நலந்தேயும்
பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும்
          பஞ்சமும் பெருஞ்சிகையே!


11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!

பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம்
          பெறுனர்பால் பெரும்பலந்
தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி
          முனைவர்பால் தனமளக்கும்
அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும்
          அனைவர்பால் அமுதளிக்கும்
நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின்
          நெஞ்சின்பால் நெடியோனே!


12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!

நெடியோன் பெருமால் நெடுநல்
          அணங்காய் நின்மலர்
மடிமேல் இருத்தியும் வறுமையில்
          உழலவும் உன்பதம்
படியோர் வருந்தாமற் பல்வளம்
          கொழுகவும் பொருந்தாத்
துடியிடை பொருந்தலும் அவரவர்
          தொல்வினைச் சங்கமமே!


13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!

சங்கமத் திரட்டும் தாபரமும்
          நங்கையிற் சார்மையும்
வெங்கம் கையறவு களையுங்
          கொடைதரு வினைக்கே
பொங்கும் வல்நிதியம் நற்பணியும்
          எளிமையும் புரிவர்பால்
தங்கமுதப் பெருநிதியே தளைக்கும்
          புண்ணியத் தாய்வைத்தே!


14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!

தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ்
          நல்வாய்ப்பும் தன்னுள்ளக
மாய்வைத்த மாயையும் தேவையும்
          மிகுதேடலும் மனநிறைவுக்
காய்வைத்த எதிர்பாராநல் யோகமும்
          ஞானமும் கைவளமும்
சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும்
          நற்பெருஞ் செல்வத்திருவே!


15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!

செல்வத்திரு நற்செழுமை அல்லலறு
          மிகுவின்பம் சேர்ந்திலங்கி
இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும்
          அகற்றும்நல் இயல்பாயின்
அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும்
          அகந்தையும் அதன்விளை
மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே
          வித்தாகும் உறுபொருளே!


16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும்
          மற்றார்க்கும் உய்வுதரும்
நறுபொருளே! வையகத்தின் வளத்தையும்
          வைப்பார்க்கு நலத்தையும்
இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும்
          பற்றகற்றும் இறுதிக்கும்
வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே
          வயமாகும் உலகியலே!


17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! 

உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும்
          இன்பதுன்பம் உய்த்துணரும்
நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும்
          நேசந்தரும் நுகர்பொருளும்
அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும்
          அனுபவமாய் அன்றிலறும்
விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய்
          விளங்குநல் உலகப்பருவே!


18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!

உலகப்பருப் பொருளாய் பொய்மெய்
          மாயத்திலும் உணர்விலும்
கலகத்திரு காதலிலும் காமநிறைக்
          களிப்பிலும் கலப்பிலும்
நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச்
          செழிப்பிலும் நேசத்திலும்
புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும்
          பொழிந்திடும் பொருண்மையே!


19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! 

பொருண்மை ஒருங்கடை இலக்கால்
          வெல்மடி போற்றலும்
அருண்மை வினையிடை திண்மை
          துணிவொடு ஆற்றலும்
மருண்மை தூக்கொடு இருண்மை
          போக்கலும் மாற்றுமை
வெருண்மை நீக்கலும் அன்னை
          வீரலக்குமி உடைமையே!


20. ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!

உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய்
          வளம்பொழிவல் ஊட்டமுமாய்
நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய்
          நலந்தழைக்கும் நோட்டமுமாய்
படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய்
          பருவகால ஆட்டமுமாய்
கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய்
          கடைத்தேற்றுவாய் கலவியலாலே!


21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!

கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக்
          கருவுயிராய்க் கனிவதுமாய்
உலவியலால் மூவாசைக் கடலலைப்
          பெருமுகிலாய் உவப்பதுமாய்
நிலவியலால் மும்மலத்து மும்மையுறு
          காரணியாய் நெஞ்சகத்துக்
குலவியலால் சொட்டுமது போகரசங்
          கொட்டுங்கவி காதற்காமமே!


22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!

காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம்
          களைநுதலும் காமதேனாய்
மாதர்காமம் மடைமாறும் மனையறமும்
          மயக்கமறும் மங்கலமுமாய்
நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து
          நோன்மைநிறை நிலைப்பேறாய்
கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக்
          கொடைவழிக் களிக்குமுயரே!


23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!

களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப்
          பெட்டகமாய் கையிருப்பாய்
அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப்
          பகப்பண்பாய் அன்பளிப்பாய்
தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத்
          தாண்டிப்பின் திருவிளக்காய்
நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய்
          நலமளிக்கும் நனியுணர்வே!


24. ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய்
          நன்நிலைமை நல்வாய்ப்புக்
கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய்
          செய்வினைக் களப்பொலிவுத்
தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய்
          தகைசால் திரவியத்திரு
நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும்
          நற்பேறாய் நலமிகுக்குமே!


25. காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!

நலமிகுக்கும் இயற்கை நிலமாகி
          மலையாகி நாடாகி
வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி
          கடலாகி வானாகி
தலமிகுக்கும் மழையாகி தளிராகி
          வளமாகி தனமாகி
சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய்
          சான்றாகும் சம்பத்துமே!


26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!

சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து
          நன்மக்களுந் தனவளமாய்
தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய்
          வாழ்வியல் சந்தையுமாய்
பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல்
          பெருகுநிலைப் பங்குமதாய்
நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய்
          விளங்குமெழில் நற்கதியே!


27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!

நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி
          முன்வினை நற்பலனும்
முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா
          மயல்வித்து மறுமையும்
கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு
          கைவண்ணங் கிட்டுதலும்
சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை
          செய்தவமே சந்ததியுமே!


28. சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!

சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ்
          சொந்தமுமாய் சம்பத்தாய்
வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய்
          மாற்றாநல் வரம்பிலாச்
சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு
          சௌபாக்கியத் தாயுமாய்
எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய்
          இலக்குமியே இலக்காயே!


29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!

இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல்
          தூண்டலுமாய் இலங்கியும்
கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி
          கல்லாமையால் கிடப்பாயும்
துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல்
          பேராசையால் தொடராயும்
நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில்
          தொழிற்படும் நல்வரத்தே!


30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!

நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து
          நல்வித்தாய் நாயகியாய்
பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து
          பணிவித்தாய் பார்கவியாய்
நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து
          நினைவித்தாய் நிம்மதியாய்
இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து
          இருதயத்தாய் இலங்குமின்பமே!


31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!

இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை
          எண்ணியாங்கு இயல்பவளாய்
நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே
          நலந்தரும் நிறைகுடமாய்
விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும்
          வினைவாணருக்கு மாத்திரமாய்
துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத்
          துணைநல்கும் திருமகளே!


32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 

திருமகளே! எண்மகளாய் மாயமும்
          மயக்கமும் தெளிவிக்கும்
பெருமகளே! பொன்மகளாய் யோகமும்
          பெருநெறியும் பொலிவிக்கும்
குருமகளே! செம்மகளாய் கருவிலுந்
          திருவாய்க் குபேரவருளைத்
தருமகளே! எம்மகத்தே யாண்டுமே
          தகைத்திருவே செங்கமலமே!
 
* திருமகள் அந்தாதி முற்றும் *
திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்!
ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!

உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்!
உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!

ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்!

காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! 


திருமகள் போற்றி போற்றி போற்றியே!
*** திருமகள் அகவல் முற்றும் ***
 
***

Tuesday, May 17, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

1. கலைமகள் அந்தாதி



இறை வணக்கம்:
கருத்துட் கனன்ற கலைமகட் பொருண்மை
அருட்பா நிறைத்த அந்தாதியால் - உரைக்க
வயப்படு வாணிநீயே வனப்புடை வாக்காய்
நயத்தொடு நல்குவாய் நயந்து.
அந்தாதிக் கட்டளை:
காயத்துரு வடிவமுமாய் கண்மலரும் வண்ணமுமாய்
நேயர்செவி மடுக்குமொலி நெஞ்சுருகும் பண்ணமுதாய்
தூயவெண் தாமரைக்கண் துலங்குமெழில் நான்முகியாய்
தாயறிவாய் பேதித்துத் தரங்காட்டும் நறுமுகையே!

முகவெழிலும் முறுவலிதழும் முத்தென்னும் பல்லொளியில்
அகவிருள்தம் முனைவரிடம் அகல்வித்தும் எழுத்துவித்தும்
பகுத்துணரும் மதிநலனாய் பருப்பொருளின் உருப்பொருளாய்
தொகுத்துணர விதித்தருளும் தொகைஞானக் கலைவாணியே!
 
அந்தாதி: 

1. அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!

காயத்துரு வாகிவெண் கமலாசனத்(து)
          அமர்மலர்க் கருணையாய்
ஆயகலை அகிலத்து அருளிடும்
          அன்னையாய் அயனகத்து
நாயகியாய் வீணைதரும் நாதமுடன்
          விளம்பிமிகு நல்லிசை
வாயமுதாய் ஞானமெழில் வள்ளலாய்
          வழங்குநல் வடிவமுமே!


2. அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!

வடிவமுமாய் வளமைசொல் வனப்புமாய்
          வளர்நிலை வரம்பிலியாய்
விடியலுமாய் வித்தைதரும் போதகியாய்
          விதிவகுக்கும் வேதகியாய்
படிகநிறமாய் பனிமலராய் பதம்மிகுத்த
          பைந்தமிழ்ப் பாவையாய்
கடிமலராய் மனமலரில் கருதுபொருட்
          கமழ்ந்திடுங் கண்மலரே!


3. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!

கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்
          வண்ணமுமாய் கனிமொழித்
திண்ணமுமாய் திசையெங்குந் திறல்பவளோ?
          தெளிர்பவளோ?  தண்மதியால்
பண்புவளர்ப் பைங்கிளியோ? பால்பிரிக்கும்
          அன்னமோ பயில்நடையில்?
வண்ணமயில் தோகையோ? வல்லெழிலாய்நீ
          விளையாடும் வண்ணமுமே!


4. ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!

வண்ணமுமாய் இன்பமுமாய் வானிலொளி
          நடம்புரியும் வான்கொடியாய்
விண்ணகமாய் தத்துவமாய் வெளிச்சந்தரு
          விளக்கமுமாய் வித்தைமிகும்
மண்ணகமாய் பிண்டமுமாய் வியங்குகோள்
          அண்டமுமாய் மனவெழிலாய்
நுண்மதியால் பண்மிகுத்து நுகர்பொருளாய்
          பரிணமிக்கும் நேயர்செவியே!


5. இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!

நேயர்செவி விருந்தாய் நெஞ்சிளக்கி
          மருந்ததுவாய் நினைவறமாய்
நயனமொழி பொழியுமதி நடனமெனும்
          கலையருவி நதிமழையாய்
இயம்புவழி தேன்மொழி யாலிசைக்கும்
          நல்லறமாய் ஏந்திழையாள்
முயங்குமது நரம்புவழி முகக்குமிசை
          வருடுமழை மடுக்குமொலியே!


6. இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!

மடுக்குமொலி இசைமிகுத்து வையத்துயிர்
          இன்பதுன்பம் வாழ்ந்துயர
முடுக்குவித்து நிலத்துமிசை முனைந்தேற
          அனல்புனல் வான்படராய்
எடுத்தியம்பி இயன்றவுயிர் முயன்றவரை
          முக்திநலம் இயல்பவளை
நெடும்புகழ் நிறைதரும் நித்திலத்தை
          நினைந்திருக்க நெஞ்சுருகுமே!


7. ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்! 

நெஞ்சுருகும் ஏழையர்க்கும் நினைவறமும்
          ஏழிசையும் நிலைநிறுத்தும்
வஞ்சமிலா நெஞ்சினர்பால் வாஞ்சையுடன்
          கல்விஞானம் வரமளிக்கும்
கொஞ்சுமொழி ஏடேந்துங் கோலமயில்
          செங்கரத்துக் கலைவாணிநின்
பஞ்சணைய பதமலர்த்தாள் பணிந்துருகப்
          பரிமளிக்கும் பண்ணமுதே!


8. ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

பண்ணமுதாய் புதுமைகளைப் படைப்பிக்கும்
          பொன்னமுதப் பூங்குழலி;
எண்ணமதில் செழுங்கலையும் ஏற்றநலமும்
          முழுமையும் இயலுங்கிளி;
கண்ணியத்து நெஞ்சகத்தே கருமவினை
          திறமுயர்த்துங் கலைக்கிழத்தி;
துண்ணியகச் சுடர்பெருக்கி துறையெலாம்
          அறிவுநல்குந் தூயவளே!


9. உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!

தூயவெண் சங்கத்துத் தொடரொலியாய்
          ஓங்காரஞ் சங்கமித்து
நாயகியாய் இரவுபகல் நாளுருளக்
          கனவும்நனவு நடப்புமாகி
மாயப்பிறப் பிடரால் துயருழலும்
          வாழ்வை மானுடத்தை
சாயத்தால் சதுராடிச் சீராக்குஞ்
          சதுர்மகள் தாமரையே!


10. உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!

தாமரைக்கண் அகத்தேவுயர் தமியளாய்
          தாயாய் தாரமாய்
தோமத்தில் சோதரியாய் தோழியாய்
          சேயாய் தரணிவுயிர்
வாமத்தில் வகையறிவு வடிவுநிற
          இயலுறழ்ந்து மாற்றகலத்
தூமதியால் சோதித்து போதித்து
          சாதித்தன்பு துலங்குமெழிலே!


11. ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!

துலங்குமெழில் காரணியாய் தூயன்புத்
          தாரணியாய் துன்பநிலை
கலங்குமனம் தெளிந்தறிய அறம்பொருள்
          இன்பம்வீடாய் கலைநெறி
இலங்குமயில்; இதந்தருநல் கடையவருங்
          கடைந்தேற இனிமைநிறை
நலங்குவித்து நடைவிளம்பி தெளிஞானத்
          துணைநல்கும் நான்முகியே!


12. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!

நான்முகியாய் நல்லறத்து வாழ்வளிக்கும்
          அருங்கலையே; நானிலத்து
வான்முகிலாய் இடபிங்கலை மையநிலை
          பிரணவாணவ ஒடுங்கலை
ஊன்பொதிக்கு உறுத்தியும் நடுங்கலை
          தடங்கலை ஒறுங்கலையாய்
தேன்மதிக்குத் தேவையெனுந் திகட்டொணாத்
          தேறுங்கலை தாயறிவே!


13. எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!

தாயறிவாய் ஒருமனத் திருகண்
          முக்குணச் சதுர்மறை
நாயகியாய் ஐம்பொறி அறுசுவை
          ஏழிசை நல்லறச்
சேயகமாய் எண்திசை நவரசப்
          பற்றாகித் தீதெனும்
பேயகலப் பிணியகலப் பேணுவித்து
          வாலறிவாய் பேதித்தவளே!


14. எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!

பேதித்து வகையாகி பிணக்கொழி
          ஞானவருட் பொருளாகி
வாதித்து இயல்விதி போதித்து
          வாய்மை உணர்வித்து
சோதித்து மெய்நீதி ஓதுவித்து
          சுழற்சிதன் சூட்சுமமும்
சாதித்து சலித்து சகலகலை
          சமைக்கிறாய் தரங்காட்டியே!


15. ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!

தரங்காட்டும் அருங்கலைத் துலாக்கோலாய்
          தரணிமிசைத் தையலாய்
உரங்காட்டும் உள்ளறிவாய் உணர்வாய்
          உதயமிக்கும் உத்தமியாய்
சிரங்காட்டும் சிந்தனைத் தெளிவுமாய்
          நற்கலை தீக்கலையாய்
நரங்காட்டும் செய்வினைக் காரணியாய்
          நலங்காட்டும் நறுமுகையே!


16. ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

நறுமுகையே நயக்கும் நலவுறுதி;
          நளினவழி நேர்மறை
குறுநகையே பயக்கும் கோலயிசை;
          நடுநிலை குளிர்மதி
பொறுமையே செயக்கும் பெருமை;
          இன்சொல் பொருந்து
மறுமொழியே இயக்கும் வாக்கும்
          முயக்கும் முகவெழிலே!


17. ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!

முகவெழிலும் எழில்நடையும் முழுவயிர
          உடற்பொலிவும் முழுமதியின்
தகவொளியும் இளங்கதிரின் தகுவெயிலும்
          இளஞ்சுவடில் தருபொருளும்
அகவெழிலும் அறப்பொருளாய் அனுபவத்து
          விழுப்பொருளாய் அறிவுநிலை
முகத்தெரியும் முதற்றறிவாய் மூதறிவாய்ப்
          பரிமளிக்கும் முறுவலிதழே!


18. அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!

முறுவலிதழும் மோகமும் முத்தமும்
          காமமும் முனைந்தேறி
செறுபகையும் போகமும் செற்றறுக்கும்
          யோகமும் சேர்ந்தேகி
உறுபசியும் ஓவாப்பிணியும் உதறுஞ்சுக
          அறிஞானம் உணர்ந்தாகி
வறுமையும் வல்வினையுங் களையுங்கலை
          வாக்காகும் முத்தென்னே!


19. ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!

முத்தென்னும் கற்பனை சிற்பமாய்
          சித்திரமாய் மொழியியலாய்
சித்தென்னும் அகம்நாடி செயல்வித்தாய்
          ஒழுங்கியல் சொத்துமாய்
அத்தென்னும் அலகில்லா அடிவிதியாய்
          அகிலத்து அருள்ஞானப்
பித்தென்னும் பேரருளில் பிணைந்தாடும்
          பரம்பொருட் பல்லொளியே!


20. ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!

பல்லொளியில் ஒன்றாய்மிகு பொருளாய்
          பரவசப் பிரிவொப்பாய்
வல்லெழிலில் இலைதளிரில் மலரிதழில்
          இயல்புதரு வடிவழகில்
நல்லறத்தில் செஞ்சொல் நனிமொழியில்
          கனிந்துருகி நுவலுதலில்
அல்பகலென்? அகற்றுவாய் அரற்றும்
          அறியாமை அகவிருளையே!


21. ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்! 

அகவிருள்தம் அகல்விக்கும் அறிவொளி
          அருள்விக்கும் அன்னையாய்
தகவல்மொழி தளைத்துவளர் தரணிவசம்
          தகைத்துயருஞ் சாத்திரமாய்
அகரமுதலும் விளங்கலை அன்னார்க்கும்
          விளங்குகலை அனுபவமாய்
முகவருளாய் விழுமியத்தால் அன்னாய்
          விளக்கிடுவாய் முனைவரிடமே!


22. ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்! 

முனைவரிடம் ஊக்கமும் ஆக்கமும்
          உரங்கூட்டும் வளர்மதியால்
சினைபெருகும் எழிலின்பச் சிந்தனையின்
          வளங்கூட்டி செய்தொழிலால்
வினையகலும் நன்னெறியும் வழிமுறையும்
          தகைக்கும் விளக்கமதாய்
அனைவருளும் இருளகற்றும் அகத்துறை
          ஆன்மவொளி அகல்வித்தே!


23. ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்! 

அகல்வித்தும் அருள்வித்தும் அகவழுக்கைத்
          தெளிவித்தும் ஔடதமாய்
நுகர்வித்தும் நுண்கலையைப் பகர்வித்தும்
          நுழைபுலத்தை நேர்மறையாய்
புகல்வித்தும் உணர்வித்தும் புணர்வித்தும்
          உண்ணுவித்தும் புன்மைதனை
இகல்வித்தும் கல்வித்தாய் இலங்குகிறாய்
          எண்ணுவித்தும் எழுத்துவித்தே!


24. அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்! 

எழுத்துவித்தும் உறங்குவித்தும் நச்சினார்க்கு
          இனியவளாய் இரங்குவித்தும்
வழுத்துவித்தும் பரம்பொருளை மெச்சினார்க்கு
          வணக்குவித்தும் வழங்குவித்தும்
செழுத்துவித்தும் செம்பொருளால் செயல்வித்தும்
          சேகரத்துவளர் செழுஞானம்
பழுத்துவித்தும் சூத்திரமாய் பண்பாடாய்
          பரிணமிப்பாய் பகுத்துணரவே!


25. கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்! 

பகுத்துணரும் அறிவுதரும் பண்புநலம்
          மிகுத்துவரப் பற்றறுக்கும்
தகுத்துணரும் முக்குற்றைத் தகர்த்தெறிய
          தானதருமம் தாமந்தரும்
நகுத்துணரும் நல்லறிவால் நாணயத்தால்
          நாநயத்தால் நயம்பயக்கும்
வகுத்துணரும் யாக்கையும் வளர்ந்தேகும்
          வாழ்கலை மதிநலனே!


26. கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!

மதிநலனாய் மூவாசை மும்மலமழிய
          முக்திதரும் மருங்கினில்
கதியருளாய் யோகத்துயில் யாகந்தரும்
          மோனமுயர் கருத்ததனில்
நதிவழிவாய் அருவியலாய் ஞாலந்தரும்
          அறிவொளி ஞானப்பிழிவாய்
பதியறிவாய் பாரதியாய் பரம்பொருளாய்
          பதமாகும் பருப்பொருளே!


27. சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!

பருப்பொருளின் பரணிமிகும் படைப்பருளால்
          படருந்துயர் பற்றறுத்து
கருப்பொருளின் திரள்பொருளை கூர்மதியால்
          சீர்செய்து கவனமீர்
திருப்பொருளாய் திருவமுதத்து திடப்பொருளாய்
          திரட்டியாய் திருவுளத்து
விருப்பொருளாய் எண்ணெண் கலைப்பொருளாய்
          விளங்கும் உருப்பொருளே!


28. சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!

உருப்பொருளாய் நல்லறத்தால் உள்ளுணர்வில்
          மெய்யுணர்வை உய்த்துணர
பருப்பொருளாய் விரியுமுடல் பண்கூட்டிப்
          பக்குவமாகிப்பின் பராபரமறிய
கருப்பொருளாய் இருத்திமனங் கைகூட்டி
          நல்வினையைக் கைக்கொள்ள
தரும்பொருளாய் முக்திஞானந் தழைக்குஞ்
          சித்தியாகுவாய் தொகுத்துணரவே!


29. நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்! 

தொகுத்துணர வையத்துயிர் துகளெலாம்
          அன்புநிறைச் செம்பொருளாய்
செகுத்துணர மதிநலத்துள் செறிவாகும்,
          நிலையாமைத் தன்மையுமாய்
பகுத்துணர பொழிஞாலம் பரிணமிக்கும்
          மெய்ஞானப் பாங்குமதுவாய்
வகுத்துணர நிலைவாழ்வு மன்னுபுகழ்
          ஒன்றென்றே விதித்தருளுமே!


30. நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்! 

விதித்தருளும் நறுங்கலையும் வழிமுறையும்
          வினையறமும் விழுப்பொருளும்
கதித்தருளும் மொழிவளமும் கல்வியறிவும்
          உளநலமும் கருதுபொருளும்
மதித்தருளும் அறக்குருபரரும் ஐம்பூதங்களும்
          மறுக்கடவுளரும் உன்னகத்தில்
துதித்தருளும் படிக்களித்துத் திறமனைத்தும்
          வலிந்தளிக்கும் தொகைஞானமே!


31. மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்! 

தொகைஞானக் கலைமாதே கண்ணகத்தே
          தெளிஞானம் துலக்கியபின்
பகையேது? புகையேது? பாவந்தரும்
          வினையேது? பற்றுமகன்றின்
நகைநாண வகையேது? கையறு
          வதையுமேது? நள்ளிருளுமேயேது?
குகையெனும் அகமாடத்துட் குலையா
          அறிவொளிக் கலைவாணியே!


32. மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

கலைவாணியே! களங்கமிலா மனமலரில்
          களிமிகுத்துக் கவிநிறைக்குங்
கலைஞானமே! உளங்குவித்துக் கரங்குவிப்பார்
          நலங்குவிக்கக் கசிந்துருகி
கலைபொழியும் நாமகளே! கவிமழையே!
          நற்பெருஞ்சீர் கனிந்தருளும்
கலையமுதே! நின்பதமலர் சரணடைந்தேன்!
          நிறைநின்றன் காயத்துருவே!

* கலைமகள் அந்தாதி முற்றும் *
கலைமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!
அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!
ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!
ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!
இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!
இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!
ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்!
ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!
உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!
ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!
ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!
எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!
எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!
ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!
ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!
அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!
ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!
ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!
ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்!
ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்!
ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்!
அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்!

கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்!
கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!
சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!
சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!
நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்!
நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்!
மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்!
மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

 
கலைமகள் போற்றி போற்றி போற்றியே!
*** கலைமகள் அகவல் முற்றும் ***
 
***

அன்னையர் அந்தாதி (பகுதி: 1)

அன்னையர் அந்தாதி


காப்பு: 
கன்னியர் தேவியர் கடவுட் பாகத்துறை
அன்னையர் அந்தாதி முனைந்திட - முன்னவா
கற்பகப் பிள்ளாயுன் கழலடி தொழுதேன்
நற்றமிட் சொல்லாய் நிறை!
 
பாயிர அகவல்:
கேண்மிர் கேண்மீர் கேளிர் கேண்மீர்
செப்பலைக் கொஞ்சம் செவிமடு கேண்மீர்
முக்கண் தேற்றிய முழுமதி ஈண்டு
அக்கண் தோற்றிய அருளொளி எழுத்தை
அகத்தில் விளைத்த அணங்கியர் கருத்தை
இடக்கண் உருவகம் இலங்குதிரு மகளாய்
வலக்கண் என்பதும் வளர்கலை மகளாய்
முதற்கண் ஆவதும் மூத்தவள் பொருளாய்
8
சடையோன் தரிக்கும் முப்புறச் சடையாய்
சபையோர் தைக்கும் முப்பொருள் விடையாய்
பசுபதியார் தரும் பரம்பொருள் அறிந்து
பாவையார் இறும் நறும்பொருள் உணர்ந்து
உருப்பொருள் ஆகிய கலைமகள் தமையும்
பருப்பொருள் ஆகிய திருமகள் தனையும்
கருப்பொருள் ஆகிய பெருமகள் உமையும்
திருப்பொருள் ஏகிய கருப்பொருள் ஆக்கி
16
அத்தன் இயம்பும் அருமை உணர்ந்து
சித்தம் பயின்று செழுமை பயின்று
அவனவள் காட்டும் அற்புதப் பொருளை
அரவரவர் தீட்டும் அகப்பொருள் நலனை
அம்மையர் ஆகிய மும்மகள் என்றும்
மும்மகள் ஆகிய அன்னையர் என்றும்
முன்னையர் உள்ளும் முந்தை வினையை
அன்னையர் மெய்மை அந்தாதிப் பாவாய்
 

24
கலைமகள் ஊட்டிட தமிழ்ப்பால் உண்டு
கருத்தவள் காட்டிட காதற்பால் கொண்டு
அந்தாதி அருளிட கட்டளைப் படிவம்
ஆதிகள் விரியும் கட்டளைப் படியும்
அமையுங் கவிதை அற்புதந் தீட்டி
அணையா மனதுள் நற்பதம் மூட்டி
அடுத்தோர் புதுமையும் அகத்தே இயம்பி
அடுக்கும் முதலிலும் அகவல் விளம்பி
 


32
வடகலை தென்கலை கீழ்க்கலை மேற்கலை
வாழ்கலை என்றுமே வகைதொகை உணரா
இன்னமுந் தமிழின் இலக்கணந் தெரியா
இதுவரை எதுவுமே நலத்தினைப் புரியா
யாவுமே அறியா இளையோன் என்பால்
மேவிடுங் கலையா மனந்தனை வழங்கி
தன்னை உணர்த்தி தமிழும் உணர்த்தி
என்னில் முழுதுற எண்ணம் ஆகியே
  40
அன்னை அந்தாதி ஆக்கிடப் பணிக்க
பிள்ளைத் தமிழால் பேசிடத் துணிந்து
குருவருள் கனிய உளமுற வணங்கி
பரமனின் அடிமலர் பாதம் பணிந்தே
பக்தியில் மலரைப் பிணைந்து தொடுக்க
முத்தமிழ் அன்னை முனைந்து கொடுக்க
உத்தம புத்திரன் உரைப்பதும் ஈங்கே
சத்திய மொழியால் அன்னை அந்தாதி!
48
மறைபொருள் இஃதை மனனம் செய்தே
மனத்தால் உணர்ந்து தியானம் புரிகின்
இறைநலங் கனியும் இனிமை பெருகும்
குறைகள் அகலும் தடைகள் விலகும்!
புரியாப் பொருளும் புலப்படக் கூடும்!
தெரியாத் திறமும் வெளிவரக் கூடும்!
நிறைகள் நிறைத்து வளம்பல சேரும்
இறையின் அருளே! இறைவா அருளே!
56
வையகம் உய்க! வாழ்க்கை உய்க!
தாயகம் உய்க! தமிழும் உய்க!
கேண்மீர் உய்க! கேண்மை உய்க!
அண்டம் எங்கும் அன்பே உய்க!
பசுபதி ஆகினன் பாதம் போற்றி!
பாகம் பிரியாப் பகவதி போற்றி!
தம்முள் விரியும் தமிழே போற்றி!
எம்முள் நிறைகும் மும்மகள்
அம்மையரே போற்றி! போற்றி! போற்றியே!
64
*** பாயிர அகவல் முற்றும் ***
காணிக்கை: (சமர்ப்பணம்)
தமக்கைக்கு தாரத்திற்கு தாயாருக்கு சீர்முறையிலும்
சமர்த்துப் புத்திரனுக்கு முழுமையிலும் - தமக்குள்
அரும்பிய அருட்பாவை அன்னையர் அந்தாதியாய்
விரும்பிப் படைத்தோம் விருந்து!
அர்ப்பணம்:
ஆச்சி கலைவாணிக்கு கலைமகள் அந்தாதியும் - மனையாள்
ஆச்சி உண்ணாமலைக்கு அலைமகள் அந்தாதியும் - அன்னை
ஆச்சி மீனாட்சிக்கு மலைமகள் அந்தாதியும் - எங்களாருயிர்
அன்புப் புத்திரன் ஹரிராகவனிற்கு அனைத்துமாயும் ஆகுமே
அன்னையர் அந்தாதி அர்ப்பணம்.
அன்னையர் அந்தாதி
நூல்:
இறை வணக்கம்:
சென்னியுட் செறிந்து சிந்தையுட் சொரியும்
அன்னையர் மும்மகள் அந்தாதி நன்னெறி
விரிவருட் பொருளாய் விளைந்திடப் பணிவாம்
கரிமுகன் பதமலர்த் தாழ்!
என்றும் மும்மகளே துணை!
1. கலைமகள் அந்தாதி:
http://thamilkavithaikal.blogspot.com/2011/05/2.html
2. திருமகள் அந்தாதி (அலைமகள் அந்தாதி): 
http://thamilkavithaikal.blogspot.in/2011/06/3.html
3. அம்பிகை அந்தாதி (மலைமகள் அந்தாதி) : 
http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html
அன்னையர் அந்தாதி விளக்கம்: (பொழிப்புரை) Album
https://www.facebook.com/media/set/?set= a.1400954103470841.1
*** அன்னையர் அந்தாதி முற்றும் ***

Monday, February 14, 2011

வாழ்க்கை ஏதுக்கடா?

வாழ்க்கை ஏதுக்கடா?

1

நல்லதை நினைக்காமல் - உனக்கு
      நாசமும் ஏதுக்கடா? - மனிதா
அல்லதை மறுக்காமல் - உனக்கு
      ஆசையும் ஏதுக்கடா?

2 அன்பினை வழங்காமல் - உனக்கு
     அண்டமும் ஏதுக்கடா? - மனிதா
அறத்தினை ஒழுகாமல் - உனக்கு
     ஆக்கங்கள் ஏதுக்கடா?

3 பண்பினை வளர்க்காமல் - உனக்கு
     பாசங்கள் ஏதுக்கடா? - மனிதா
பகைமை களையாமல் - உனக்கு
     படிப்பினை ஏதுக்கடா?

4 நேர்மை நில்லாமல் - உனக்கு
     நெஞ்சம் ஏதுக்கடா? - மனிதா
கூர்மை இல்லாமல் - உனக்கு
     குழப்பம் ஏதுக்கடா?

5 தாய்மை போற்றாமல் - உனக்கு
     தாயகம் ஏதுக்கடா? - மனிதா
வாய்மை காக்காமல் - உனக்கு
     வாய்ப்பும் ஏதுக்கடா?

6 பாதியில் பெண்ணின்றேல் - உனக்கு
     பயணம் ஏதுக்கடா? - மனிதா
நீதியில் கண்ணின்றேல் - உனக்கு
     ஞானம் ஏதுக்கடா?

7 களவுகள் எளிதாயின் - உனக்கு
      காவலன் ஏதுக்கடா? - மனிதா
இலவசம் வலிதாயின் - உனக்கு
      யாதுமே ஏதுக்கடா?

8 கடமையும் இலதாயின் - உனக்கு
      கவலை ஏதுக்கடா? - மனிதா
குடிசையும் இலதாயின் - உனக்கு
      குடும்பம் ஏதுக்கடா?

9 சாதிகள் ஏதுக்கடா? - உனக்கு
      சண்டைகள் ஏதுக்கடா? - மனிதா
சமரசம் காணாமல் - உனக்கு
      சமயங்கள் ஏதுக்கடா?

10 பேதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      பேதமை ஏதுக்கடா? - மனிதா
வாதங்கள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்மங்கள் ஏதுக்கடா?

11 மோதல்கள் ஏதுக்கடா? - உனக்கு
      மோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
காதலே இல்லாமல் - உனக்கு
      காமம் ஏதுக்கடா?

12 சோதனை செய்யாமல் - உனக்கு
      சோகங்கள் ஏதுக்கடா? - மனிதா
சாதனை இல்லாமல் - உனக்கு
      சரித்திரம் ஏதுக்கடா?

13 வல்லினம் ஏதுக்கடா? - உனக்கு
      மெல்லினம் ஏதுக்கடா? - மனிதா
இடையினம் நாடாமல் - உனக்கு
      இன்பம் ஏதுக்கடா?

14 வம்புகள் ஏதுக்கடா? - உனக்கு
      வன்முறை ஏதுக்கடா? - மனிதா
இன்பத்தை நாடாமல் - உனக்கு
      துன்பங்கள் ஏதுக்கடா?

15 மதவெறி ஏதுக்கடா? - உனக்கு
      மொழிவெறி ஏதுக்கடா? - மனிதா
இனவெறி ஏதுக்கடா? - உனக்கு
      பணவெறி ஏதுக்கடா?

16 ஆதியை அறியாமல் - உனக்கு
      ஆன்மா ஏதுக்கடா? - மனிதா
சோதியைக் காணாமல் - உனக்கு
      சுயமும் ஏதுக்கடா?

17 தேடலும் இல்லாமல் - உனக்கு
      தெய்வம் ஏதுக்கடா? - மனிதா
தேம்பலும் நில்லாமல் - உனக்கு
      தேசம் ஏதுக்கடா?

18 தீமைகள் விலகாமல் - உனக்கு
      தேர்ச்சியும் ஏதுக்கடா? - மனிதா
தீட்டுகள் அகலாமல் - உனக்கு
      தேசியம் ஏதுக்கடா?

19 பொருளே அறியாமல் - உனக்கு
      போதனை ஏதுக்கடா? - மனிதா
இருளே அகலமால் - உனக்கு
      இதயம் ஏதுக்கடா?

20 பொன்னகை ஏதுக்கடா? - உனக்கு
      பொய்மை ஏதுக்கடா? - மனிதா
புன்னகை புரியாமல் - உனக்கு
      புதுமையும் ஏதுக்கடா?

21 எளிமை கொள்ளாமல் - உனக்கு
      ஏளனம் ஏதுக்கடா? - மனிதா
ஏழ்மை கொல்லாமல் - உனக்கு
      ஏற்றம் ஏதுக்கடா?

22 அச்சம் ஏதுக்கடா? - உனக்கு
      ஆண்மை ஏதுக்கடா? - மனிதா
பிச்சைப் பொருளாலே - உனக்கு
      பிழைப்பும் ஏதுக்கடா?

23 உழைப்பே இல்லாமல் - உனக்கு
      உணவும் ஏதுக்கடா? - மனிதா
பிழைப்பே இல்லாமல் - உனக்கு
      பேச்சும் ஏதுக்கடா?

24 புனிதம் ஏதுக்கடா? - உனக்கு
      புத்தியும் ஏதுக்கடா? - மனிதா
மனிதம் மதிக்காமல் - உனக்கு
      மாண்பும் ஏதுக்கடா?

25 மயக்கம் ஏதுக்கடா? - உனக்கு
      மவுனம் ஏதுக்கடா? - மனிதா
தயக்கம் ஏதுக்கடா - உனக்கு
      தைரியம் ஏதுக்கடா?

26 உயிரினை மதிக்காமல் - உனக்கு
      உணர்வுகள் ஏதுக்கடா? - மனிதா
உரிமையை மதிக்காமல் - உனக்கு
      விடுதலை* ஏதுக்கடா?
* சுதந்திரம்

27 பெருமையை துதிக்காமல் - உனக்கு
      பிறப்பும் ஏதுக்கடா? - மனிதா
உறவினை மதிக்காமல் - உனக்கு
      சிறப்பும் ஏதுக்கடா?

28 பிரிவுகள் ஏதுக்கடா? - உனக்கு
      பிளவுகள் ஏதுக்கடா? - மனிதா
விருப்புகள் குறையாமல் - உனக்கு
      வெறுப்புகள் ஏதுக்கடா?

29 சிறகுகள் இல்லாமல் - உனக்கு
      சிறைகள் ஏதுக்கடா? - மனிதா
வரையறை இல்லாமல் - உனக்கு
      வேட்கை ஏதுக்கடா?

30 உதவிகள் செய்யாமல் - உனக்கு
      உடலும் ஏதுக்கடா? - மனிதா
உயர்வினை அடையாமல் - உனக்கு
      உளமும் ஏதுக்கடா?

31 சீர்மை படையாமல் - உனக்குச்
      சிந்தனை ஏதுக்கடா? - மனிதா
மூர்க்கம் உடையாமல் - உனக்கு
      வந்தனை ஏதுக்கடா?

32 மேன்மை அடையாமல் - உனக்கு
      மெத்தனம் ஏதுக்கடா? - மனிதா
மேதமை அடையாமல் - உனக்கு
      தத்துவம் ஏதுக்கடா?

33 கேண்மை பிடிக்காமல் - உனக்கு
     கேள்வி ஏதுக்கடா? - மனிதா
கீழ்மை தடுக்காமல் - உனக்கு
     கேளிக்கை ஏதுக்கடா?

34 ஆட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      அகந்தை ஏதுக்கடா? - மனிதா
பாட்டம் ஏதுக்கடா? - உனக்கு
      பற்றும் ஏதுக்கடா?

35 வாக்கே தெளியாமல் - உனக்கு
      வாட்டம் ஏதுக்கடா? - மனிதா
வஞ்சகம் ஒழியாமல் - உனக்கு
      ஓட்டும் ஏதுக்கடா?

36 ஆக்கம் புரியாமல் - உனக்கு
      ஆத்திரம் ஏதுக்கடா? - மனிதா
நோக்கே தெரியாமல் - உனக்கு
      வாழ்க்கை ஏதுக்கடா?

***