Saturday, September 19, 2015

Karpaga Ahaval Explained - கற்பக விநாயகர் அகவல் – மூலமும் உரையும்


முன்னுரை

 கற்பக விநாயகர் அகவல்எளிதாகவே இருப்பினும் அதற்கு ஏன் உரையும் எழுதினேன் என்று நீங்கள் கேட்கலாம். பல குறிப்புக்களையும், சொல்ல விடுபட்டதையும் சொல்ல இது இன்னொரு வாய்ப்பென்று பயன் படுத்திக் கொண்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  சில சமயங்களில் தமிழ் உரைநடை விளக்கம் சிலருக்கு அவசியமாகவும் இருக்கலாம் என்பதையும் உணர்ந்தேன்.  ஆதலின் இது நிச்சயம் அனைவருக்கும் நன்மையே பயக்கும் என்றும் நம்புகின்றேன்.  நன்றி.

-       உத்தமபுத்திரா புருஷோத்தம்




கற்பக விநாயகர் அகவல்
(பொழிப்புரை)

 

 

கற்பக விநாயகர் அகவல்:  (ஆசிரியப்பா)




சீர்பெறு வையகச் செழுஞ் சேகரமாய்


நேர்மறை வைகலில் நெடுஞ் சாகரமாய்


ஞாலம் ஏத்தும் ஞானக் கூத்தென


மூலம் போற்றும் மூத்த பொருளாய்


களிற்று முகமும் கனிவுறு அகமும்


ஒளிர்தரு உடலும் உயர்திரு வடிவும்
6

சீர்மை பெறும் வையகத்தின் செழுமைத் திரட்டாக,  நேர்மறை எண்ணங்களை நிலையாக நிறைக்கும் சிறந்து விரிந்த பெருங்கடலாக; உலகம் புகழ்ந்து துதிக்கின்ற அறிவின் களிப்பு நிலை எனும்படி, இறையெனும் ஆதார மூலத்தினைப் போற்றுகின்ற, முதல் தொன்மைப் பொருளாக; யானை முகமும்,  இனிய இளகிய இதயமும்,  மின்னுகின்ற உடலும், மேன்மை பொருந்திய தெய்வீக அருள்வளம் மிக்க உருவத்தோடும்


படர்ந்த நுதலொடு பரமன் கண்ணும்


அடர்ந்த புருவமும் அழகிரு விழியும்


சிப்பியுள் முத்தெனச் சிரிக்கும் பாவையும்


ஒப்பிலித் துதிக்கையின் ஓங்கார உருவும்


ஒற்றைத் தந்தமும் ஒருப்படு சிந்தையும்


நெற்றியில் தவழும் கற்றைக் குழலும்
12



படர்ந்து அகன்ற நெற்றியோடு, அதில் சிவனின்  வாரிசு என்பதற்கான மூன்றாவது கண்ணோடும், அடர்ந்து நிறைந்து காணப்படும் கரிய புருவங்களும், அதில் அழகு, நிறைந்து இருக்கும் / இரு, விழிகளோடும்;  சிப்பிக்குள் முத்துப் போல், சிரிக்கின்ற வெண்மை விழித்திரையில், மின்னும் கருமைக் கண்மணிப் பாவைகளோடும்,  ஒப்பே இல்லாத அரிய துதிக்கையும், அதனால் அபிநயமாய் அமைந்த  தமிழ் ஓங்காரத்தின் எழுத்து வடிவமும்; இரட்டையில் ஒன்றான வெண்மைத் தந்தத்தோடும், ஒருமுனைப் படுத்தி ஒன்றுபட்ட சிந்தையோடும், நெற்றியில் தவழ்ந்து புரள்கின்ற திரண்ட கரிய தலைக் கூந்தலோடும




சீலஞ் செப்பும் சிவகுலக் குறியென


சூலத் திலகமும் சுடர்திரு நீறும்


மலர் சிரமேவிய மணிமுடி மதியும்


அலர் வாயிதழும் அசையியல் காதும்


அருக மாலை அணிதிகழ் கழுத்தும்


பரந்த மார்பும் பருத்த தொந்தியும்
18



மெய்யறிவு மற்றும் நல் ஒழுக்கத் தன்மையினைப் பறை சாற்றுகின்ற, சிவ குலமாகிய சைவத்தின் குறியீடுகளான, திரிசூலத்தைக் குறிக்கும் நெற்றியில் இட்டுள்ள பொட்டும், நெற்றியில் அணிந்துள்ள ஒளி பிரகாசிக்கின்ற திருநீற்றுப் பட்டையும்;  மலரணிந்த / மலர் போன்ற, தலைமேல், ஏறி அமைந்துள்ள / சூடிய,  மணிமுடி எனும் மகுடமும், அதன் மீது இலங்கும் வளர்பிறையும், மலர்ந்து இருக்கின்ற வாயின் கீழ் உதடும்,  அசைவினை இயக்க வல்ல முறம் போன்ற காதுகளும்; அருகம் புல்லால் செய்த மாலை, அணியாக அலங்கரிக்கின்ற கழுத்தும்,  அகன்று விரிந்த மார்பும், பருத்த பெரிய தொந்தி வயிறும்




இடையில் உடுத்திய இளந்துகில் ஆடையும்


நடையில் மிடுக்கை நவிலும் சிலம்பும்


வாஞ்சனை சொரியும் வாகன மூஞ்சூறும்


பூஞ்சிகை சரியும் பொலிவுறு புறமும்


விரிந்த தோளும் வியத்தகு புயமும்


பிரிந்த கரத்திரு பெருமைப் பிடியும்
24



உடலின் அரை/இடைப் பகுதியில் உடுத்தியுள்ள  மெல்லிய ஆடையும்,  காலால் நடக்கையில்  இனிய ஒலியை ஏற்படுத்தி கம்பீரத்தை அறிவிக்கும் நயம் மிக்க தண்டைச் சிலம்பும், வாசல் நடையில் வாஞ்சையைக் கொட்டுகின்ற, வாகனமாக நிற்கின்ற மூஞ்சூறும்,  பூப்போன்ற/ பூ அணிந்த தலைமுடி தாழ்ந்து வீழுகின்ற,  அழகு மிகு முதுகுப் புறமும்,  விரிந்து பரந்து அகன்ற தோள்களும், பலத்தால் ஆச்சரியப்பட வைக்கும் தோற்றம் தரும் புஜங்களும், தனித்தனியாகப் பிரிந்து இருக்கின்ற இரு கரங்களின் பெருமைப் பிடிகளும்… (இடக்கரம் பெருமைப் பட இடுப்பிலும் வலக்கரம்  சிவலிங்கத்தை ஏந்திய படியும்) …




திருக்கை விளங்கு திருவீசர் இலிங்கமொடு்


இருக்கை இலங்கிய அரைக் கமலாசனமும்


வலம்புரிச் சின்னமும் வடதிசைத் தவமும்


நலம்புரி யோகமாய் நயமுறு நேர்த்தியுள்


குடைவரைக் குடிலுறை குணமுயர் குன்றாய்


தடைகளைப் பொடிபட தகர்த்திடு கன்றாய்
30



வலத் திருக்கரத்தில் விளங்குகின்ற திருவீசராகிய சிவனின் இலிங்கத்தோடு, இருக்கையில் அமர்ந்து திகழ்கின்ற, அரை/ பாதிக் கமலாசன (அர்த்த-பத்மாசன) அமைப்பிலான யோக அமர்வும்; துதிக்கையை வலப் புறமாகச் சுழித்திருக்கும்  அடையாளக்குறியும், வட திசையை நோக்கி அமர்ந்து செய்கின்ற தவ நிலையும்,  நலத்தைப் புரிகின்ற, புண்ணிய நற்பயனாக/ அதிருட்டமாக,  நயம் மிகுத்த, ஒழுங்குறு நுணுக்கச் செம்மை நிறைவுடன்,  குன்றைக் குடைந்து அமைத்த  குடைவரைக் கோயிலில் உறைந்து அருளுகின்ற, சிறந்த மேன்மைக் குணம், உயர்ந்த மலையின் குன்றாக / உயர்வு என்றைக்கும் தாழ்ந்து குறைவுறாததாக; தடையெனும் தடங்கல்களையும்,  இடர்களையும் பொடி என்று சொல்லும்படி, தூளாக்கித்  தகர்த்து எரிந்து விடுகின்ற இளம் களபக் கன்றாக




மருதீசர் உடனுறை வாடா மலர்மங்கை


மருதங்குடி அமர் விநாயக மூர்த்தியே!


பற்றிலி வரத்தாய் பணிபுரி தக்கார்


நற்குடி நகரத்தார் கற்பகத் திருவே!


காட்டைத் திருத்தி வீட்டை நிறுவிய


நாட்டுக் கோட்டை நாயகப் பிள்ளாய்!
36



மருதீசரும், அவரோடு வாடாமலர் மங்கை அம்மனும் சேர்ந்து இருக்கின்ற தலமான மருதங்குடிப் பிள்ளையார்பட்டியில், தானும் அமர்ந்து அருள் பாலிக்கின்ற விநாயக மூர்த்தியே!; பற்றின்றி பெரு வருகையாய்/ பற்றில்லா வரமாய்/ தொழில் வாணிபத்தில் கடனில்லாத வரவிலும், பணியினைப் புரிந்து ஒழுகும், நடுநிலை தவறாத நற்பண்பும் நாணயமும் மிகுத்து உயர்ந்தோர்;  பொருத்தமான சான்றோர்; தகுந்தோர்/ கோயில் நிருவாகப் பொறுப்புக்களைக் கவனிப்போராகிய, நாட்டுக் கோட்டை நகரத்தார் பெருமக்களின், கற்பகத் திருவே! / நினைத்ததை அருளும் கற்பகத்தில் இருப்பாயாக!; காடுகளை ஒழுங்குபட அழகுறத் திருத்தி, வசிக்கும் வீடுபேறு என்பதே போன்று வீடுகளைக் கட்டி அமைத்துக் கொண்டுள்ள நாட்டுக் கோட்டைச் செட்டி நாட்டுப் பகுதியில், நாயகம் எனத் திகழுகின்ற விநாயகப் பிள்ளையாரே! 




தலைச்சன் குட்டியெம் தமையன் தமது


தலைமைப் பீடம் தரணியில் ஈதென


அண்மைப் பொய்கையும் அரச மரமும்


தண்மை ததும்பும் தவமிரு கரையில்


சாலவும் அணிதிரள் துதிசெய் மண்டபம்


ஆலயம் கோபுரம் அருளொளி துலங்க
42



பரம்பொருளாகிய சிவ பார்வதி தம்பதிக்கு தலைப் பிள்ளையாகிய விநாயகனே, பரம்பொருளின் ஏனையப் பிள்ளைகளாகிய எமக்கு மூத்த அண்ணனே, இந்த வையகத்தின்பால் நினது அருள்பாலிக்கும் திருத்தலங்களில் தலைமைப் பீடம் இதுவே என்று சொல்லும்படி, அருகில் மிகச் சிறிய குளமும், அரச மரமும், அதன் குளிர் காற்றுத் தவழும் அற்புதக் கரையில், பெரும் கூட்டமாக மக்கள் நின்று தரிசிக்கத் தகுந்த பெரிய மண்டபத்தோடு கூடிய நினது திருக்கோயிலும், கோயிலின் அழகுமிக்க இரு ராஜ கோபுரங்களும் அருளொளி பிரகாசிக்க ...

 (பிள்ளையார்பட்டி திருமூர்த்திக்கு வலப்புறத்தில் மடைப்பள்ளியின் இடது புறத்தை ஒட்டி உள்ள வாயிலின் வழியாகச் சென்று உள்ளே பார்த்தால் இந்தச் சிறு குளமும் அரசமரமும் தெரியும்.  இஃது பழைய அல்லது முதற் கட்டுமானத்தில் இருந்த திருக்குளமாக இருக்கலாம்.  அதன் கரையில் இருக்கும் ஒரே அரசமரத்தின் ஓரத்தில் அல்லது அடியிலிருந்து தான் இந்த மலைக் குகை வளர்ந்தது போல் இருக்கும்.  அரச மரத்தின் அடியில் ஒரு நாகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இவை அனைத்திற்குமான ஒரே பாதை தற்சமயம் தடுக்கப்பட்டு இருப்பதால் பொது மக்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு அரிது. அடியேனுக்கு கற்பக அண்ணலின் அருளால் இவற்றைப் பார்க்கின்ற பாக்கியம் முன்னர் பல முறை கிட்டியது.)




வாகை விளக்காய் உயர் கொடிமரமும்


தோகை நிழல்தரு சூழமர் கூடமும்


தென்றல் தவழும் திருப்பெருங் குளமும்


நன்றெனக் கமழும் நறுமணப் பொழிலும்


வாயிலில் கொழிக்கும் வனப்புறு செழிப்பென


இயற்கை தொடுக்கும் இனிமைகள் இலங்க
48



ஆலயத்தில் ஐயனின் வெற்றி விளக்கமாக உயர்ந்த கொடிமரமும், பிள்ளையாருக்கு எதிரே இருக்கும் வாயில் புறத்தே, இறைவனை வணங்கிய பின்னர் பக்தர்கள் அமருவதற்காக, கூரை வேய்ந்த நிழலோடு குளிர்தரும் ரம்மியமான அழகுக் கூடமும், தென்றல் வீசுகின்ற தென்னை சூழ்ந்து அமைந்த பெரிய திருக்குளமும், அவற்றோடு திகழுகின்ற மணம் பரப்பும் மற்றைய மரங்களும், செடி கொடிகள் பூக்கள் நிறைந்த சோலைச் சூழலும், கோயிலின் வாயிலில் பொழிகின்ற அழகுமிக்க செழிப்பு என்பதாக, இயற்கை அன்னை தொடுக்கின்ற அனைத்து இனிமைகளும் திகழ விளங்கியும்

(இத்தலத்தில் உண்மையில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. ஒன்று பிள்ளையாருக்கு, மற்றொன்று மருதீசருக்கு! எனவேதான் இங்கு இரண்டு ராஜ கோபுரங்களும் இவ்விரு மூர்த்திகளின் கர்ப்பக் கிரகங்களுக்கும் உரிய முதற்பெரு வாயில்களாக அவ்வவற்றின் திசைகளான முறையே வடக்கிலும், கிழக்கிலும் சிறப்பிக்கின்றன.)




அங்கம் மிளிர்க்கும் தங்கக் கவசமும்


அங்கியும் வைரத்து ஆரமும் சுட்டியும்


வல்லமை குறிக்கும் வளமொடு நலமென


இல்லகம் தனத்திரு எழிலினை முழங்க


அவல்பொரி கடலை அப்பம் கொழுக்கட்டை 


உவப்பொடு படைத்த மோதக உண்டி
54



பொன் மேனி மேலும் ஒளிர்ந்து பிரகாசிக்கும் படி தங்கத்தால் ஆன கவசமும், உடல் முழுவதும் மறைக்கும் ஆடையும், வைரத்தினால் ஆன கழுத்தணியும், நெற்றிச் சுட்டியும், செழுமை வளங்களின் வலிமையைக் குறிப்பிடும் நலம் என்பதாக, கோயில், தன் வயத்திரு / தனம் எனும் செல்வ வளத்தின் வசம் இருக்கின்ற, அழகை உரக்க ஒலித்து முழங்க!; மகிழ்ச்சியோடு படைத்த அவல், பொரி, கடலை, அப்பம், கொழுக்கட்டை, மோதகம் எனும் உணவுப் பதார்த்தங்களின்




அருஞ்சுவை இயற்றும் ஆற்றலை நுகர்ந்து


அருட்கண் புகற்றும் அறச்சுவை விரும்பி


ஐம்பெரும் பூதமும் ஐம்புல மெய்மையும்


ஐம்பொறி உணர்வென ஐங்கரத்து அடக்கி


முதலைந் தெழுத்தும் முழுதுறப் பொருந்த


இதமுறு அமைதியை அதிர்வுற இயம்பி
60



அரும் சுவையால் உருவான சாத்வீக உடற்  சக்தியினைப் பெற்று,  உளச் சக்திக்காக,  அருளின் கண்/அறிவின் கண், தூண்டப்படும் நல் அறச் சுவையை விரும்பி; அண்டத்து  ஐம்பெரும் பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, வான்)  பிண்டத்தில்  ஐம்புலன்கள்  (கண், காது, மூக்கு, வாய், உடல்)  எனும் மெய்மை / மெய்/உடல் உணர்வுகளையும், ஐம்பொறி உணர்வுகள் (பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவையறிதல், தொட்டறிதல்)  என்பனவற்றை; தமது ஐங்கரத்துள் சுருக்கி; முதல் ஐந்தெழுத்து சிவ மந்திரம் (நமசிவாய) அதில் முழுமையுறப் பொருந்தும் படி நம்மைச் செய்யப் பணித்து; அதனால்  இசைவு மிக்க பெரு அமைதியை உடலும் உளமும் நுண் அதிர்வுகளாக உணரும்படி நமக்குச் சொல்லி



(சைவ உணவுகளால் உண்டாகும் சாத்வீகச் சக்தியால் அருட் கண் திறக்க அறச் சுவையே ஏற்படும் என்பதும், மனம் ஒன்றி ஐம்பொறி ஒடுங்கச் செய்யும் தியானத்தால் அமைதியும் நுண் அதிர்வலைகளையும் உணரப் பெறலாம் என்பதும் இங்கு ஈண்டு பெறத்தக்க மறை பொருட்கள்)




முற்படு யாவிலும் மக்களே முதற்றென


கற்பகப் பிள்ளாய் கருத்தினை இருத்தி


நண்ணித் தொழுது நலமுற நின்னை


எண்ணித் துணிந்த காரியம் யாதிலும்


முன்வினைப் பலனை முழுதறக் களைந்து


முனைப்படு எதிலும் முந்துற விளைந்து
66



முயற்சி செய்து துவக்குகின்ற அனைத்திலும்  மக்களாகிய, கள்ளங் கபடமற்ற, பிள்ளைகளே/ குழந்தைகளே, முதன்மைக்கு உரியவர்கள் என்பதனை, கற்பக விநாயக, பிள்ளையாராக, முதன்மைப் படுத்தியுள்ள முக்கியத்துவக் கருத்தினை, எமக்குத் தெளிவுற,  தியானத்தால் பெற்ற பெரும் பேறாக உணர்த்தி,  நின்னை அணுகி வணங்கித் துதி செய்து, நின்னையே கருதி, உறுதி பூண்டு துவக்கிய காரியம் யாவற்றிலும், வணங்கியவரின் முன்வினைப் பலன்களின் தாக்கத்தை முற்றிலுமாக அகற்றி, செயல் ஊக்கத்துடன் முயற்சிக்கும் எதிலும் முன்னிலை பெற, விஞ்சி நின்று,  வெற்றி பெறும்படி விளைவித்து




உகரச் சுழிப்பிலும் ஊழினை ஒடுக்கி


பகருநற் செய்கையும் பாங்குற நிறைவுற


பிள்ளையர் ஊக்கமும் பெருக்கிய நோக்கமும்


கொள்சீர் ஆக்கமும் கொடுக்கும் சித்தியாய்


தாகமும் பணிவும் தளரா வினவலும்


வேகமும் துணிவும் விவேகமும் புத்தியாய்
72



துவக்கும் எழுத்துப் பணிகளில் முதலில் இடும், பிள்ளையார் சுழி எனும் உகரச் சுழிப்பின் வாயிலாகவும், முன்வினைப் பயனாகிய ஊழினை தடுத்துக் கட்டுப்படுத்திக் கட்டிமுடித்து நிறுத்தி, பூஜ்ஜிய மீதி என ஆக்கி, செயற்படும் செயலை, துவக்க முன்னிருப்பு ஏதுமற்ற புதுக் கணக்காக வரவு வைத்து, சொல்லிய அதாவது நடப்பில் செய்யப் படுகின்ற நன்மை பயக்கும் செயலானது, முறைப்பட, அழகான சாதனைச் செயலாக முழுமையுற நிறைவேற்றி முடிக்க; குழந்தைகளைப் போன்ற உற்சாகத் துள்ளலுடனான,  செயல் ஈடுபாட்டோடு கொண்ட ஊக்கமும்,  உயர்வுடைய நல் நோக்கமும்,  பொருந்திச் செயல் விளைவினைக் கைக் கொள்ளும் நேர்த்தியுடனான, மேன்மை மிக்க செயல்புரி ஆக்கமும், இவை போன்றவை அனைத்தும் கொடுப்பவையே கை கூடும் சித்தி என்பதாக; ஆர்வமெனும் நாட்டமும்,  அடக்கமும், சோர்விலாத கேள்வி ஆய்வும், அக்கறையும்,  விரைவுத் தன்மையும்,  துணிச்சலும், சூழ்நிலைக்கு ஏற்பத் தக்கவாறு செயலாக்கும் சூட்டிகை எனும் கூர்மையுடைய கெட்டிக்காரத் தன்மையும், இவை போன்றவை  அனைத்தும்  புத்தி எனும் அறிவென்பதாக




குறிப்பறி துரிதக் கொள்கைச் சிறப்பை


முறித்த தந்தம் மொழியும் அறிவென


கவனக் கூர்மை கனிந்துறக் குட்டியும்


தவமெனத் தோப்புக் கரணமும் இடவே


நினைவொடு நல்லறம் நேர்மை ஒழுக்கம்


நனவொடு புரிசெயல் ஞானமும் நல்கி
78



குறிப்பறிந்து விரைவோடு செயல்பட வேண்டிய கோட்பாட்டையும் அதன் சிறப்பையும், உடைக்கப் பட்டிருக்கும் தந்தம் பகருகின்ற, உறுதியான கண்கூடான, அறிவாக; சிந்தனைக் கருத்தும் விழிப்புணர்வும் நன்கு உன்னிப்புக் கூர்மை அடைய தலைக்குக் குட்டிக் கொண்டும்,  செய் தவம் போலும்  தோப்புக் கரணம் செய்வதாலும் கிடைக்கும் நன்மைகள் என்று; நினைவுத் திறமும்,  நன்னெறி அறமும், நேர்மையும், ஒழுக்கமும், நனவையும்/ எதையும் மெய்மை உணர்வுநிலை எனும் நனவோடு, புரிந்து செயல் செயல்படுத்தும், அறிவையும் வழங்கி  




கலையும் எழிலும் கைப்படு பொருளென


நிலைதரு கல்வியும் நிறைவும் பல்கி


தெளிவுறு நோக்கும் திடம்படு திறமையும்


ஆளுமை அனுபவம் அனைத்தும் மல்கி


அகந்தை இருளை ஆசை மருளை


உகந்து விலக்கி உருப்பட அருளி
84



கலை எனும் சாத்திர ஆய்வு அறிவுகளும்,  அழகுப் படைப்புக்களும், முயன்றால் கைவசம் ஆகக் கூடிய  மெய்மை அறமென,  உறுதியோடு நீடித்து நிலை பெறக்கூடிய எழுத்து, படிப்பு அறிவினையும்,  பூரண முழுமையாகிய நிறைவினையும் பெருக்கி; குழப்பம் யாதுமற்ற தூய உள் அறிவுத் தெளிவு கொண்ட,  திடப் பார்வையும், நோக்கமும், உறுதி உரம் பெற்ற திறமை ஆற்றலும், மேலாண்மை அதிகாரம் நுகர்வுப் பட்டறிவும், மற்றையவை அனைத்தையும் பெரிய  அளவில் அளித்து; அகங்கார ஆணவச் செறுக்கெனும் இறுமாப்பு இருளையும்/ அகந்தை மற்றும் அறியாமை எனும் அஞ்ஞான இருளையும், வேட்கை எனும்/ மற்றும் மயக்கத்தினையும், விருப்போடு விலக்கி, சீர்மை எனும் நல்ல நிலையினை அடைய அருளி




எளியவர் வறியவர் யாவர்க்கும் இரங்கி


களிப்புற உதவிடக் கருணையும் வழங்கி


இயலுறு நலமுடன் இசையுறு வளமும்


வயப்படு செல்வமும் வாழ்வும் கூட்டி


தன்னுள் தேடும் தியானம் யோகம்


தன்னில் ஆழ்ந்து தன்னை வெல்ல
90



ஆதரவற்ற ஏழை, எளியோர் யாவருக்கும் கருணையும் அனுதாபமும் காட்டி, மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உதவுவதற்காக எமக்குக் கருணையையும் வழங்கி,  நற்பண்பு மிக்க, உள உடல் ஆரோக்கிய நலங்களோடு,  இணக்கம் நிறைந்த / புகழ் மிகுந்த, வளத்தினையும், வெற்றியினை வசப்படுத்தும் செல்வத்தினையும், வாழும் வாழ்க்கையையும் பெருக்கி, நீட்டித்து, தனது உள் முகமாகத் தேடுகின்ற, தியானம், யோகம் போன்ற ஒருமுகமாக ஒன்றுதல் எனும் வழிமுறை உபாயங்கள்,  தன்னில்/ தன்னகத்தில், ஆழ்ந்து தன்னைத் தானே வெல்லுவதற்கு




போக்கும் வரத்தும் பூரகக் கும்பமும்


காக்கும் வளிமுறை கவனப் படுத்தி


துரிய கலையும் தொடர்பெரு நிலையும்


அரிதுறு கற்பக அடைவென அளித்து


வாயிரு போவெனும் வையத்து இருக்கை


ஆயிடை வாழ்வெனும் அறநெறி துலக்கி
96



மூச்சுக் காற்றை வரத்தாகஉள்ளிழுத்தும் (இடகலை, பிங்கலை), உள் நிறுத்தும் பூரகமும், பூரிப்பை அடக்கி வெளியிடும் வரை நீடிக்கின்ற கும்பமும்,  போக்கெனவெளியிடும் (இரேசகம்) பிராண வாயுவாகிய உயிர் காக்கும் சுவாசத்தினை, பிராணயாம யோகத்தின் மூலம் கவனம் கொள்ள வைத்து,   துரியம் எனப்படும் ஆன்மா உந்தியில் பிராணனோடு ஒன்றி நிற்கத் தன்னுணர்வு பெறும் நிலையாகிய, கலையினையும், மேலும் தொடருகின்ற ஐந்தவத்தையின் இறுதிப் பெரு  நிலையாகிய துரியாதீதத்தையும், அரிதும் உறுதியுமான, கற்பக வரம் எனும் விரும்பியதைப் பெறுகின்ற ஆற்றல் என்பதன் மூலம் அடையும் அடைதல் என்பதாகப் பெற அளித்து; வா, இரு, போ என்னும் வையகத்தில் வாழும் ஓர் இருப்பு என்பது,  ஆன்ம நெடும் பயணத்தில், இடைப்பட்ட வாழ்வே எனும், நிரந்தரமற்று எந்த இடத்திலும், எந்தக் கணத்திலும், நிச்சயமாக விடுபட்டுச் செல்ல வேண்டியுள்ள தன்மையில், பற்றற்று வாழ வேண்டிய அவசிய, அற ஒழுக்கத்தினைத் தெளிவு பட, உள் முகமாய்ச் சிந்திக்க வைத்து, விளக்கி




அகத்தும் புறத்தும் அன்பே உறையும்


அகிலப் பொருளின் அருமை உரைத்து


ஓமெனும் நாத விந்துவில் ஒடுங்கும்


ஆமெனும் இசைவு அகநிலை தீட்டி


தம்முள் இலங்கும் சிவத்தைக் காட்டி


மும்மை அமுதம் முழுமையும் ஊட்டி
102



அணுக்கள், அணுத் துகள்கள் என உயிர் உள்ளவை, அற்றவை  என அனைத்திலும் அன்பே உள்ளிருப்பாக, ஈர்ப்பாகப் பிணைத்து நிற்கிறது என்னும் அகிலத்தின் அர்த்தப் பொருளாகிய, அருமை மெய்யறிவினை உணர்த்தி; ஓமெனும் பிரணவ நாத ஒலியில் ஒருங்குகின்ற பிராணன் எனும்  உயிர் ஆன்மாவானது, ஆமென்று இணக்கமுற்று ஒன்று படும், இசை, இசைவு எனும் அக நிலைகளை இன்னும் கூர் பெறச் செய்து; அவரவர்க்கு அவர் தம்முள்ளே திகழுகின்ற சிவத்தினை உணரச் செய்து, மூன்று காலங்கள் எனும் இறப்பு, நடப்பு, எதிர்வு என்பதனோடு, உம்மை, இம்மை, மறுமை ஆகிய மூவகை நிலைப்பேறு எனும் அமுதத்தினை முழுமையாக உள் அறிவிற்கு ஊட்டி




செம்மைக் குருவென சிந்தை தெளிய


எம்மை எமக்கே இனிதுற விளம்பி


அள்ளி வழங்கும் ஆளும் பரமாய்


உள்ளத்து ஏகி உணர்வென ஆகி


நற்கதி அருளும் கற்பகத் திருவே!


அற்புதப் பிள்ளாய் பொற்பதம் சரணே!
108

மேன்மை பொருந்திய உயர் ஆசான் என்று, சிந்தையினை, குழப்பங்களற்றுத் தெளிய, நம்மை நமக்கே உள்ளும் புறமும் இனிமையோடு உணரும்படி,  வெளிப்படுத்தி விளக்கி; வாரி வழங்கி நம்மை என்றும் ஆளுகின்ற பரம் பொருளாக, உள்ளத்துட் சென்று,  அடிப்படை உணர்வும் என்றே ஆகி,  நல் நிலை எனும் பேரின்பமாகிய, வீடு பேற்றினை அருளுகின்ற, எண்ணியதை நல்கும் கற்பகத் திருவே! விநாயகா! அற்புதமான பிள்ளையாரே! நின்றன் கழலடிப் பொற் பாதங்களுக்கே எமது சரணங்கள் உரித்தாகுக!

ஓம் ஸ்ரீ கற்பக விநாயகா போற்றி! போற்றி!

•••  முற்றும்  •••