Tuesday, May 17, 2011

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

அன்னையர் அந்தாதி (பகுதி: 2)

1. கலைமகள் அந்தாதி



இறை வணக்கம்:
கருத்துட் கனன்ற கலைமகட் பொருண்மை
அருட்பா நிறைத்த அந்தாதியால் - உரைக்க
வயப்படு வாணிநீயே வனப்புடை வாக்காய்
நயத்தொடு நல்குவாய் நயந்து.
அந்தாதிக் கட்டளை:
காயத்துரு வடிவமுமாய் கண்மலரும் வண்ணமுமாய்
நேயர்செவி மடுக்குமொலி நெஞ்சுருகும் பண்ணமுதாய்
தூயவெண் தாமரைக்கண் துலங்குமெழில் நான்முகியாய்
தாயறிவாய் பேதித்துத் தரங்காட்டும் நறுமுகையே!

முகவெழிலும் முறுவலிதழும் முத்தென்னும் பல்லொளியில்
அகவிருள்தம் முனைவரிடம் அகல்வித்தும் எழுத்துவித்தும்
பகுத்துணரும் மதிநலனாய் பருப்பொருளின் உருப்பொருளாய்
தொகுத்துணர விதித்தருளும் தொகைஞானக் கலைவாணியே!
 
அந்தாதி: 

1. அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!

காயத்துரு வாகிவெண் கமலாசனத்(து)
          அமர்மலர்க் கருணையாய்
ஆயகலை அகிலத்து அருளிடும்
          அன்னையாய் அயனகத்து
நாயகியாய் வீணைதரும் நாதமுடன்
          விளம்பிமிகு நல்லிசை
வாயமுதாய் ஞானமெழில் வள்ளலாய்
          வழங்குநல் வடிவமுமே!


2. அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!

வடிவமுமாய் வளமைசொல் வனப்புமாய்
          வளர்நிலை வரம்பிலியாய்
விடியலுமாய் வித்தைதரும் போதகியாய்
          விதிவகுக்கும் வேதகியாய்
படிகநிறமாய் பனிமலராய் பதம்மிகுத்த
          பைந்தமிழ்ப் பாவையாய்
கடிமலராய் மனமலரில் கருதுபொருட்
          கமழ்ந்திடுங் கண்மலரே!


3. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!

கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்
          வண்ணமுமாய் கனிமொழித்
திண்ணமுமாய் திசையெங்குந் திறல்பவளோ?
          தெளிர்பவளோ?  தண்மதியால்
பண்புவளர்ப் பைங்கிளியோ? பால்பிரிக்கும்
          அன்னமோ பயில்நடையில்?
வண்ணமயில் தோகையோ? வல்லெழிலாய்நீ
          விளையாடும் வண்ணமுமே!


4. ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!

வண்ணமுமாய் இன்பமுமாய் வானிலொளி
          நடம்புரியும் வான்கொடியாய்
விண்ணகமாய் தத்துவமாய் வெளிச்சந்தரு
          விளக்கமுமாய் வித்தைமிகும்
மண்ணகமாய் பிண்டமுமாய் வியங்குகோள்
          அண்டமுமாய் மனவெழிலாய்
நுண்மதியால் பண்மிகுத்து நுகர்பொருளாய்
          பரிணமிக்கும் நேயர்செவியே!


5. இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!

நேயர்செவி விருந்தாய் நெஞ்சிளக்கி
          மருந்ததுவாய் நினைவறமாய்
நயனமொழி பொழியுமதி நடனமெனும்
          கலையருவி நதிமழையாய்
இயம்புவழி தேன்மொழி யாலிசைக்கும்
          நல்லறமாய் ஏந்திழையாள்
முயங்குமது நரம்புவழி முகக்குமிசை
          வருடுமழை மடுக்குமொலியே!


6. இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!

மடுக்குமொலி இசைமிகுத்து வையத்துயிர்
          இன்பதுன்பம் வாழ்ந்துயர
முடுக்குவித்து நிலத்துமிசை முனைந்தேற
          அனல்புனல் வான்படராய்
எடுத்தியம்பி இயன்றவுயிர் முயன்றவரை
          முக்திநலம் இயல்பவளை
நெடும்புகழ் நிறைதரும் நித்திலத்தை
          நினைந்திருக்க நெஞ்சுருகுமே!


7. ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்! 

நெஞ்சுருகும் ஏழையர்க்கும் நினைவறமும்
          ஏழிசையும் நிலைநிறுத்தும்
வஞ்சமிலா நெஞ்சினர்பால் வாஞ்சையுடன்
          கல்விஞானம் வரமளிக்கும்
கொஞ்சுமொழி ஏடேந்துங் கோலமயில்
          செங்கரத்துக் கலைவாணிநின்
பஞ்சணைய பதமலர்த்தாள் பணிந்துருகப்
          பரிமளிக்கும் பண்ணமுதே!


8. ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

பண்ணமுதாய் புதுமைகளைப் படைப்பிக்கும்
          பொன்னமுதப் பூங்குழலி;
எண்ணமதில் செழுங்கலையும் ஏற்றநலமும்
          முழுமையும் இயலுங்கிளி;
கண்ணியத்து நெஞ்சகத்தே கருமவினை
          திறமுயர்த்துங் கலைக்கிழத்தி;
துண்ணியகச் சுடர்பெருக்கி துறையெலாம்
          அறிவுநல்குந் தூயவளே!


9. உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!

தூயவெண் சங்கத்துத் தொடரொலியாய்
          ஓங்காரஞ் சங்கமித்து
நாயகியாய் இரவுபகல் நாளுருளக்
          கனவும்நனவு நடப்புமாகி
மாயப்பிறப் பிடரால் துயருழலும்
          வாழ்வை மானுடத்தை
சாயத்தால் சதுராடிச் சீராக்குஞ்
          சதுர்மகள் தாமரையே!


10. உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!

தாமரைக்கண் அகத்தேவுயர் தமியளாய்
          தாயாய் தாரமாய்
தோமத்தில் சோதரியாய் தோழியாய்
          சேயாய் தரணிவுயிர்
வாமத்தில் வகையறிவு வடிவுநிற
          இயலுறழ்ந்து மாற்றகலத்
தூமதியால் சோதித்து போதித்து
          சாதித்தன்பு துலங்குமெழிலே!


11. ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!

துலங்குமெழில் காரணியாய் தூயன்புத்
          தாரணியாய் துன்பநிலை
கலங்குமனம் தெளிந்தறிய அறம்பொருள்
          இன்பம்வீடாய் கலைநெறி
இலங்குமயில்; இதந்தருநல் கடையவருங்
          கடைந்தேற இனிமைநிறை
நலங்குவித்து நடைவிளம்பி தெளிஞானத்
          துணைநல்கும் நான்முகியே!


12. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!

நான்முகியாய் நல்லறத்து வாழ்வளிக்கும்
          அருங்கலையே; நானிலத்து
வான்முகிலாய் இடபிங்கலை மையநிலை
          பிரணவாணவ ஒடுங்கலை
ஊன்பொதிக்கு உறுத்தியும் நடுங்கலை
          தடங்கலை ஒறுங்கலையாய்
தேன்மதிக்குத் தேவையெனுந் திகட்டொணாத்
          தேறுங்கலை தாயறிவே!


13. எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!

தாயறிவாய் ஒருமனத் திருகண்
          முக்குணச் சதுர்மறை
நாயகியாய் ஐம்பொறி அறுசுவை
          ஏழிசை நல்லறச்
சேயகமாய் எண்திசை நவரசப்
          பற்றாகித் தீதெனும்
பேயகலப் பிணியகலப் பேணுவித்து
          வாலறிவாய் பேதித்தவளே!


14. எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!

பேதித்து வகையாகி பிணக்கொழி
          ஞானவருட் பொருளாகி
வாதித்து இயல்விதி போதித்து
          வாய்மை உணர்வித்து
சோதித்து மெய்நீதி ஓதுவித்து
          சுழற்சிதன் சூட்சுமமும்
சாதித்து சலித்து சகலகலை
          சமைக்கிறாய் தரங்காட்டியே!


15. ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!

தரங்காட்டும் அருங்கலைத் துலாக்கோலாய்
          தரணிமிசைத் தையலாய்
உரங்காட்டும் உள்ளறிவாய் உணர்வாய்
          உதயமிக்கும் உத்தமியாய்
சிரங்காட்டும் சிந்தனைத் தெளிவுமாய்
          நற்கலை தீக்கலையாய்
நரங்காட்டும் செய்வினைக் காரணியாய்
          நலங்காட்டும் நறுமுகையே!


16. ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

நறுமுகையே நயக்கும் நலவுறுதி;
          நளினவழி நேர்மறை
குறுநகையே பயக்கும் கோலயிசை;
          நடுநிலை குளிர்மதி
பொறுமையே செயக்கும் பெருமை;
          இன்சொல் பொருந்து
மறுமொழியே இயக்கும் வாக்கும்
          முயக்கும் முகவெழிலே!


17. ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!

முகவெழிலும் எழில்நடையும் முழுவயிர
          உடற்பொலிவும் முழுமதியின்
தகவொளியும் இளங்கதிரின் தகுவெயிலும்
          இளஞ்சுவடில் தருபொருளும்
அகவெழிலும் அறப்பொருளாய் அனுபவத்து
          விழுப்பொருளாய் அறிவுநிலை
முகத்தெரியும் முதற்றறிவாய் மூதறிவாய்ப்
          பரிமளிக்கும் முறுவலிதழே!


18. அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!

முறுவலிதழும் மோகமும் முத்தமும்
          காமமும் முனைந்தேறி
செறுபகையும் போகமும் செற்றறுக்கும்
          யோகமும் சேர்ந்தேகி
உறுபசியும் ஓவாப்பிணியும் உதறுஞ்சுக
          அறிஞானம் உணர்ந்தாகி
வறுமையும் வல்வினையுங் களையுங்கலை
          வாக்காகும் முத்தென்னே!


19. ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!

முத்தென்னும் கற்பனை சிற்பமாய்
          சித்திரமாய் மொழியியலாய்
சித்தென்னும் அகம்நாடி செயல்வித்தாய்
          ஒழுங்கியல் சொத்துமாய்
அத்தென்னும் அலகில்லா அடிவிதியாய்
          அகிலத்து அருள்ஞானப்
பித்தென்னும் பேரருளில் பிணைந்தாடும்
          பரம்பொருட் பல்லொளியே!


20. ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!

பல்லொளியில் ஒன்றாய்மிகு பொருளாய்
          பரவசப் பிரிவொப்பாய்
வல்லெழிலில் இலைதளிரில் மலரிதழில்
          இயல்புதரு வடிவழகில்
நல்லறத்தில் செஞ்சொல் நனிமொழியில்
          கனிந்துருகி நுவலுதலில்
அல்பகலென்? அகற்றுவாய் அரற்றும்
          அறியாமை அகவிருளையே!


21. ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்! 

அகவிருள்தம் அகல்விக்கும் அறிவொளி
          அருள்விக்கும் அன்னையாய்
தகவல்மொழி தளைத்துவளர் தரணிவசம்
          தகைத்துயருஞ் சாத்திரமாய்
அகரமுதலும் விளங்கலை அன்னார்க்கும்
          விளங்குகலை அனுபவமாய்
முகவருளாய் விழுமியத்தால் அன்னாய்
          விளக்கிடுவாய் முனைவரிடமே!


22. ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்! 

முனைவரிடம் ஊக்கமும் ஆக்கமும்
          உரங்கூட்டும் வளர்மதியால்
சினைபெருகும் எழிலின்பச் சிந்தனையின்
          வளங்கூட்டி செய்தொழிலால்
வினையகலும் நன்னெறியும் வழிமுறையும்
          தகைக்கும் விளக்கமதாய்
அனைவருளும் இருளகற்றும் அகத்துறை
          ஆன்மவொளி அகல்வித்தே!


23. ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்! 

அகல்வித்தும் அருள்வித்தும் அகவழுக்கைத்
          தெளிவித்தும் ஔடதமாய்
நுகர்வித்தும் நுண்கலையைப் பகர்வித்தும்
          நுழைபுலத்தை நேர்மறையாய்
புகல்வித்தும் உணர்வித்தும் புணர்வித்தும்
          உண்ணுவித்தும் புன்மைதனை
இகல்வித்தும் கல்வித்தாய் இலங்குகிறாய்
          எண்ணுவித்தும் எழுத்துவித்தே!


24. அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்! 

எழுத்துவித்தும் உறங்குவித்தும் நச்சினார்க்கு
          இனியவளாய் இரங்குவித்தும்
வழுத்துவித்தும் பரம்பொருளை மெச்சினார்க்கு
          வணக்குவித்தும் வழங்குவித்தும்
செழுத்துவித்தும் செம்பொருளால் செயல்வித்தும்
          சேகரத்துவளர் செழுஞானம்
பழுத்துவித்தும் சூத்திரமாய் பண்பாடாய்
          பரிணமிப்பாய் பகுத்துணரவே!


25. கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்! 

பகுத்துணரும் அறிவுதரும் பண்புநலம்
          மிகுத்துவரப் பற்றறுக்கும்
தகுத்துணரும் முக்குற்றைத் தகர்த்தெறிய
          தானதருமம் தாமந்தரும்
நகுத்துணரும் நல்லறிவால் நாணயத்தால்
          நாநயத்தால் நயம்பயக்கும்
வகுத்துணரும் யாக்கையும் வளர்ந்தேகும்
          வாழ்கலை மதிநலனே!


26. கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!

மதிநலனாய் மூவாசை மும்மலமழிய
          முக்திதரும் மருங்கினில்
கதியருளாய் யோகத்துயில் யாகந்தரும்
          மோனமுயர் கருத்ததனில்
நதிவழிவாய் அருவியலாய் ஞாலந்தரும்
          அறிவொளி ஞானப்பிழிவாய்
பதியறிவாய் பாரதியாய் பரம்பொருளாய்
          பதமாகும் பருப்பொருளே!


27. சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!

பருப்பொருளின் பரணிமிகும் படைப்பருளால்
          படருந்துயர் பற்றறுத்து
கருப்பொருளின் திரள்பொருளை கூர்மதியால்
          சீர்செய்து கவனமீர்
திருப்பொருளாய் திருவமுதத்து திடப்பொருளாய்
          திரட்டியாய் திருவுளத்து
விருப்பொருளாய் எண்ணெண் கலைப்பொருளாய்
          விளங்கும் உருப்பொருளே!


28. சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!

உருப்பொருளாய் நல்லறத்தால் உள்ளுணர்வில்
          மெய்யுணர்வை உய்த்துணர
பருப்பொருளாய் விரியுமுடல் பண்கூட்டிப்
          பக்குவமாகிப்பின் பராபரமறிய
கருப்பொருளாய் இருத்திமனங் கைகூட்டி
          நல்வினையைக் கைக்கொள்ள
தரும்பொருளாய் முக்திஞானந் தழைக்குஞ்
          சித்தியாகுவாய் தொகுத்துணரவே!


29. நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்! 

தொகுத்துணர வையத்துயிர் துகளெலாம்
          அன்புநிறைச் செம்பொருளாய்
செகுத்துணர மதிநலத்துள் செறிவாகும்,
          நிலையாமைத் தன்மையுமாய்
பகுத்துணர பொழிஞாலம் பரிணமிக்கும்
          மெய்ஞானப் பாங்குமதுவாய்
வகுத்துணர நிலைவாழ்வு மன்னுபுகழ்
          ஒன்றென்றே விதித்தருளுமே!


30. நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்! 

விதித்தருளும் நறுங்கலையும் வழிமுறையும்
          வினையறமும் விழுப்பொருளும்
கதித்தருளும் மொழிவளமும் கல்வியறிவும்
          உளநலமும் கருதுபொருளும்
மதித்தருளும் அறக்குருபரரும் ஐம்பூதங்களும்
          மறுக்கடவுளரும் உன்னகத்தில்
துதித்தருளும் படிக்களித்துத் திறமனைத்தும்
          வலிந்தளிக்கும் தொகைஞானமே!


31. மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்! 

தொகைஞானக் கலைமாதே கண்ணகத்தே
          தெளிஞானம் துலக்கியபின்
பகையேது? புகையேது? பாவந்தரும்
          வினையேது? பற்றுமகன்றின்
நகைநாண வகையேது? கையறு
          வதையுமேது? நள்ளிருளுமேயேது?
குகையெனும் அகமாடத்துட் குலையா
          அறிவொளிக் கலைவாணியே!


32. மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

கலைவாணியே! களங்கமிலா மனமலரில்
          களிமிகுத்துக் கவிநிறைக்குங்
கலைஞானமே! உளங்குவித்துக் கரங்குவிப்பார்
          நலங்குவிக்கக் கசிந்துருகி
கலைபொழியும் நாமகளே! கவிமழையே!
          நற்பெருஞ்சீர் கனிந்தருளும்
கலையமுதே! நின்பதமலர் சரணடைந்தேன்!
          நிறைநின்றன் காயத்துருவே!

* கலைமகள் அந்தாதி முற்றும் *
கலைமகள் அகவல்: (தலைப்புக் கவிதை)
அன்பினழகு வடிவமே அன்னைக் கலைமகள்!
அறிவுநெறித் தெய்வமே அமுதஞானத் தலைமகள்!
ஆயகலை அனைத்தையும் அருளும்வாணி அம்மையள்!
ஆடல்பாடல் ஆனந்தம் அறிநிலையின் செம்மையள்!
இயலிசை நாடகமாய் இனிமையாகும் நயத்தினள்!
இன்பதுன்பம் யாதிலும் இயல்புமாகும் வயத்தினள்!
ஈகைகருணை உள்ளமதில் ஈண்டுதருந் தாயவள்!
ஈரமுள்ள நெஞ்சினுள் என்றுமேயிளச் சேயவள்!

உதயமதியம் இரவுயென உலகினில் இலங்குவள்!
உயர்வுதாழ்வு நிலையென உணர்வினில் துலங்குவள்!
ஊழியையுங் காலத்தையும் உருவகிக்குந் தலைமகள்!
ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நிருவகிக்குங் கலைமகள்!
எழிலொழுங்கு நேர்மையில் இலங்கிடும் இனியவள்!
எண்ணம்நினைவு வாய்மையில் துலங்கிடுங் கனியவள்!
ஏற்றமிறக்கம் பண்ணென எழுச்சிநல்கும் பாமகள்!
ஏற்றுவாக்கில் பண்பென இசைமிகுக்கும் நாமகள்!

ஐயம்விளக்கம் உபாயம் அனைத்தையுங் கொடுப்பவள்!
அச்சந்துக்கம் அபாயம் அனைத்தையுங் கெடுப்பவள்!
ஒப்பனை கற்பனை உருவுமாகும் எழிலவள்!
ஒப்புமை பேதமாகி ஒயிலுமாகுங் கலையவள்!
ஓவியம் காவியம் உறைந்திடும் நுண்ணியள்!
ஓதலில் வாதுவில் ஒளிர்ந்திடும் திண்ணியள்!
ஔடதம் விடமுமாய் யாதுமாகுங் கன்னியள்!
அன்னம் அமுதமாய் ஆர்த்திடும் அன்னையள்!

கல்விகேள்வி ஞானந்தரும் கலைவாணி வேணியள்!
கருத்திலொளி யோகந்தரும் வண்ணமயில் மேனியள்!
சங்கடங் களையுமதிச் சகலகலா வல்லியள்!
சத்தியத் துள்பொதிந்து சாதிக்கும் மெல்லியள்!
நறுமணத்துள் நாதத்துள் நடனமிடுந் தேவியள்!
நல்மனத்துள் நளினத்துள் நலந்தரும் மாதவள்!
மலரிதழில் இலைதளிரில் மணங்கமழுங் கலையவள்!
மனமலரில் கவிதையென மடல்விரிக்குங் கலைமகள்! 

 
கலைமகள் போற்றி போற்றி போற்றியே!
*** கலைமகள் அகவல் முற்றும் ***
 
***

15 comments:

  1. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு".
    என்பதை இங்கும் அ முதல் ம வரை
    மிக அருமை படித்து ஆனந்தம்
    புலவரை நேரில் பார்த்து புகழலாமா

    ReplyDelete
  2. சிறு சிறு மழையாக கோடிட்ட இடத்தில் இருப்பதை இணைத்து இனிய தென்றலாக ஒரு துணை கவிதை
    கலைவாணிக்கு ஆசிரியரின் அழகிய கவிநடை

    ReplyDelete
  3. @krshi

    தங்களின் வருகைக்கும் பதிவுகளுக்கும் நன்றிகள் தோழி.

    புகழ்வதா? அதெல்லாம் வேண்டாம். மற்றபடி நிச்சயமாக நேரில் சந்திக்கலாம், தயக்கங்கள் ஏதுமில்லை.

    ///சிறு சிறு மழையாக கோடிட்ட இடத்தில் இருப்பதை இணைத்து இனிய தென்றலாக ஒரு துணை கவிதை
    கலைவாணிக்கு ஆசிரியரின் அழகிய கவிநடை ///

    நல்லது. முதலில் அந்தாதியுலுள்ள “ஆதியான” முதல் வார்த்தைகளை இணைத்தால் வருவதே அந்தாதிக் கட்டளைச் செய்யுள்கள். இரண்டாவது அந்தங்களை இணைத்தால் பெரும்பாலும் வெறும் போற்றிகளாய் அமையும். மூன்றாவது, this is just mere incidental, ஒவ்வொரு செய்யுளிலும் மடக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இறுதி இரண்டு வார்த்தைகளை இணைத்தாலும் கிட்டத்தட்ட அவையும் சில இடங்கள் தவிர்த்து முழுமை தருகின்றன. இதை உண்மையிலேயே நெடிலடியாக (ஐந்து வார்த்தை) எழுதப்பட்ட இந்த செய்யுட்களை (விருத்தங்களை), இங்கே அவை நீண்டு விடுவதால், மடக்கி எழுதினேன். அப்போதுதான் இஃதும் கண்ணில் பட்டது. பிறகு கடைசியாக, சில சமயங்களில், ஆதி வார்த்தையே இல்லாமல் படித்தால் கூட ஒவ்வொரு விருத்தமும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது.

    அந்தாதியின் அழகை “அபிராமி அந்தாதி” யிலும் கம்பனின் “சரஸ்வதி அந்தாதி” யிலும், கலைமகள் அழகை குமரகுருபர சுவாமிகளின் “சகலகலாவல்லி மாலையிலும்” காணக் கிடைக்கும்.

    கலைமகள் அருளால் அஃதே வழியில் இஃதும் தோன்றும் என்றே நினைக்கிறேன். இலக்கணம் அறிந்தோரின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  4. ஆதிவார்த்தை என்பது நெடிலடியின் ஒவ்வொருவரியிலும் முதல் வார்த்தையை விட்டுவிட்டு என்று திருத்திப் படிக்கவும்.

    ReplyDelete
  5. மீண்டும் படித்தேன் முதல் வார்த்தையை விட்டு விட்டு இன்னும் புரிந்தது நன்றி!

    ReplyDelete
  6. ஆயகலை அனைத்தையும் அருளும்வாணிஅம்மையே!
    இதில்
    ஏன் கேள்வி போல இருக்கு?
    தொடர்பவளே என ஆச்சரிய குறி போல குறிப்பிட கூடாதா?
    கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்
    உ ம்:-தொடர்பவளோ?....தொடர்பவளே!

    ReplyDelete
  7. அந்த இடத்தில் ஏகாரம் இன்னும் அழகாகவே இருக்கும். ஆனால் கேள்வியும் கேட்டால் சந்தேகத்தோடு கூடிய ஆச்சரியம் அஃது என்பதால், அவ்வண்ணம் செய்தேன்.

    பால்பிரிக்கும் அன்னமோ பயில்நடையில்? என்றால், உண்மையில் கல்வியில் நல்லவற்றை மட்டும் பிரித்துப் பயில்கின்ற நடையில் கொடுக்கும் திறம்படைத்தவளோ என்று இனிமை நிறைக்கவே அவ்விதம் செய்யப்பட்டது.

    ஆச்சரியத் தொனி உண்மையில் செய்யுளின் ஓட்டத்திற்கு ஒத்துப் போகும் என்பதை அறிவேன், ஆனால் கேள்வி கேட்டும் சொல்ல வேண்டும் என்று கொண்டதாலேயே இவ்விதமாக.

    ஆனால் கடைசியில் 31வது செய்யுளில் கேட்கப்படும் ”பகையேது? பொறையேது? பாவந்தரும் வினையேது? பற்றுமகன்றின் நகைநாண வகையேது? கையறு வதையுமேது? நள்ளிருளுமேயேது?” என்பது இவ்விதமாக நெருடாமல் உள்ளது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. உண்மையில் முதலில் அதை ஏகாரத்தில் தான் கீழ்வருவது போல் எழுதினேன், அதில் வல்லெலிழாள் என்று இருந்ததை வல்லெளியாய்நீ என்றும் சேர்த்து எழுதினேன்.

    கண்மலரும் எண்ணமுமாய் கருப்பொருளின்
    வண்ணமுமாய் கனிமொழித்
    திண்ணமுமாய் திசையெங்குந் தொடர்பவளே!
    தொன்மையளே! தண்மதியாள்
    பண்புவளர்ப் பைங்கிளியே! பால்பிரிக்கும்
    அன்னமே பயில்நடையில்!
    வண்ணமயில் தோகையே! வல்லெழிலாள்
    விளையாடும் வண்ணமுமே!

    என்றுதான் இருந்தது. ஆனால் இஃது மிகவும் போற்றியாகத் தோன்றியதால்தான் அவ்விதம் மாற்ற வேண்டி வந்தது.

    பழையதே நன்றாக இருந்தால் திரும்பவும் மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete
  9. பயில்நடையில் பால்பிரிக்கும் அன்னமே! என்று எழுதலாம்தான், அதில் இந்த மயக்கம் வராது.

    ReplyDelete
  10. புரிந்து விட்டது நண்பரே!
    மாற்றவேண்டாம்!

    ReplyDelete
  11. ஆமாம். கவி நயத்திற்கும் ஓசை நயத்திற்கும் உள்ள trade offல் கவி நயமே சிறக்கிறது.

    ReplyDelete
  12. கலைமகளை பாடி[ட]
    அணில் பெற்ற பெருமை
    செவி சாய்த்த செவிக்கு
    தாயின்பம் கண்ட சேயாக
    பாஇன்பம் பெற்றேன் சிறப்பாக
    அனுதினமும் வரம் பெற
    காலங்கள் என்ன கைக்குள்ளா?
    ஆரம்பமும் முற்றும் இல்லா
    இணைத்தும் இணைந்தும்
    புள்ளிகள் இல்லா கோலங்கள்..

    ReplyDelete
  13. Malaimagal andhaadhi eppo post seivinga?

    ReplyDelete
  14. எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை என் மனம் கவர்ந்த தங்கள் பதிவுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
    http://vannathuli.blogspot.in/2012/02/blog-post_18.html

    ReplyDelete
  15. @அகிலா

    நன்றிகள் தோழி. நட்பு வட்டத்தைப் பெருக்கும் அங்கீகார விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மேலும் புதிய திறமையாளர்களை நட்பு வட்டத்தில் இணைக்க உதவும் இந்த விருதிற்கும் உள்ளார்ந்த நன்றிகள்.

    பகிர்ந்து கொள்ளும் அளவில் தங்களின் கவனத்தைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி.

    இறை அருளோடு தங்கள் வாழ்வும் வளமும் சிறக்கவும், உங்களின் பதிவுகள் மேலும் சிறக்கவும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete