|
அன்னையர் அந்தாதி
(பகுதி: 3)
|
|---|
|
2. திருமகள் அந்தாதி
|
|
இறை வணக்கம்:
மாதவன் மனத்திரு மங்கையேநின தருளன்றி யாதவம் வளமீயும் பூதலத்தே? - ஆதலுமாயுன் திருவடிக்கே சரணானோம் திருமகளே எமக்கென்றும் பெருநிதியப் பொருளாய்ப் பொழி. |
| அந்தாதிக் கட்டளை: செங்கமல அலர்மேல் செவ்விதழ் நறுமலராய் செங்கண் மாலரங்கச் செம்மனத் திருமடந்தாய் பிங்கலக் கைமாற்றில் பெருஞ்சிகை நெடியோன் சங்கமத் தாய்வைத்த செல்வத்திரு உறுபொருளே! உலகியலாய் உலகப்பருப் பொருண்மை உடைமையுமாய் கலவியலால் காதற்காமம் களிக்குமுயர் நனியுணர்வாய் நலமிகுக்கும் சம்பத்துமாய் நற்கதிதருஞ் சந்ததியுமாய் இலக்காயுறு நல்வரத்தாய் இலங்குமின்பத் திருமகளே! |
|
அந்தாதி:
1. அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்!
செங்கமல(ச்)
செழுமலரில் சீர்மல்கி
வாசஞ்செய் செம்பொருட் தங்கமலர் தாரணியாய் தாயுமாய் தாரகையாய் தாமரைக்கண் அங்கமுடை அம்போதி அத்தனவன் அகமலராய் அமர்ந்தேகி அங்கையில் அகமிளகி பெரும்பேறு அருள்நல்கும் அலர்மேலே! (தாரணி = நிலமகள்; தாரகை = நட்சத்திரம்; அம்போதி = கடல்; அத்தன் = தந்தை, உயர்ந்தோன்; அங்கை = உள்ளங்கை) 2. அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! அலர்மேல் அமர்அருள் அலைமகள் அன்னையாய் அகிலத்து மலர்மேல் எலாம்வள நலம்பொலி நாயாகியாய் வையத்து நிலம்பால் வைதேகியாய் பைந்தமிழ் பாச்சூடியாய் நித்திலத்து சிலம்பால் சிந்தாமணி நகையேநின் திருவாய்ச் செவ்விதழே! (பொலி = பொலிகின்ற; நித்திலம் = முத்து; சிலம்பு = ஒலி, எதிரொலி)
3. ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்!
செவ்விதழ் சேயிழையாய் பாலாழி திரளமுதச் செல்வியுனை செவ்வியத் தனபதிபால் கடனாகித் திருமணித்த செவ்வாயன் அவ்விதமே காத்துநின்றே காலமெலாங் கழிப்பதுவோ அக்கடன்? நவ்விநினது நாரணன்பால் நற்கருணை நவில்வாயே நறுமலரே! (சேயிழை = அழகான அணிகளுடைய பெண்; பாலாழி = பால் ஆழி, செவ்விய = சிறந்த, உயர்ந்த, முறையான, நேர்மையான; தனபதி = குபேரன், செவ்வாயன் = திருமால், நவ்வி = பெண்மான், அழகு, மான்குட்டி; நவில் = சொல், செய், மிகு, கருது, எண்ணு;)
4. ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்!
நறுமலராய் ஐம்பூதத்து பருப்பொருள் ஐம்பொறி நடைக்கூட மறுமலராய் அந்தரங்கக் கருப்பொருள் அகப்பை மனமடலாய் உறுமலராய் ஐயிந்திரிய தன்மாத்திரை ஐவுடம்பு உடனுறைச் செறுமலராய் ஏழ்தாது பிரபஞ்சவளர் பதிநாடிச் செங்கண்ணே! (ஐம்பூதம் = பஞ்சபூதம் = நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்; ஐம்பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி; அகப்பை = அகமாகிய பை = அகப்பசுமை, அகக் கொள்கலன் ; நடைக்கூடம் = உடல்; மனமடல் = மனக்கலம்; ஐயிந்திரியம் = பஞ்சகர்மேந்திரியங்கள் = வாய், கை, கால், மலவாய்(குதம்), கருவாய் (சொல்லல், நடத்தல், ஏற்றல், கொடுத்தல், விடுதல்); தன்மாத்திரை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; ஐங்கோசம் = ஐவுடம்புகள் = பஞ்சகோசங்கள் = உணவுடம்பு/பருவுடம்பு, காற்றுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்ப உடம்பு (அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள்); ஏழ்தாது = இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், மச்சை, வெண்ணீர். (உதிரம்./குருதி, ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, இன்பச் சுரப்பு); பதிநாடி = தசநாடி = உடலில் உயிர்க்காற்று இயங்கும் பத்து நாடிகள்; செங்கண் = அக்னி கண்கள்;)
5. இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்!
செங்கண் இயற்கை செயற்கை மாயையாய் செழுமதியாய் எங்கண் அஞ்ஞான அகத்துணர் இன்பதுன்ப பிரமையாய் அங்கண் விளையும் அறிவொளி விளக்கத்து அகிலமாய் வங்கண் யாங்கிலும் இலங்கும் இலக்குமி மாலரங்கமே! (வங்கு = வளை, துவாரம், குகை)
6. இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்!
மாலரங்கச் சீதனமே! மண்ணகத்து மாற்றா மாற்றமாய் பாலரங்கத் தயிர்மோர் வெண்ணை நறுநெய் பாங்குறை வாலரங்கப் பருவவிதி வளமுடை மாற்றாய் வளர்நிறை சாலரங்கப் பெருநிதியச் சாதனமாய் செழிக்குஞ் செம்மனமே! (பாங்குறை = பாங்கிலுறை; வால் = தூய்மை, உயர்வு; சால் = நிறைவு, ஏற்றம்)
7. ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்!
செம்மனத் துறமொடு செழுநல் இலக்கொடு செய்வினை எம்மனங் கருத்தொடு இயங்குமோ ஆங்கண் இலங்கியும் கம்மனத் திறத்தொடு நற்கருமம் ஆற்றுமக் கடமையவர் தம்மனத் திருவாய் வருவாய் தருவாய் திருமடந்தே! (கம் = செயல், பணி, தொழில்; வருவாய் = வரத்து; மடந்தை = பெண்)
8. ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்!
திருமடந்தாய் அரவாதே அறிவாழ்வார் ஆழ்ந்தமனத் திருவிடத்துக் கருமடந்தாய் கரவாதே கருமவினை ஆன்றவர்பால் கருணைவளம் தருமடந்தாய் இரவாதே இருந்தாலும் இரங்கிநலம் தந்தவர்பால் பெருமடந்தாய் குறையாதே பன்மடங்கில் ஈந்தருளும் பிங்கலனே! (அரவு = ஓசை; கரவு = மறை, பொய், வஞ்சனை; இரவு = யாசித்தல்; இரங்கு = இரக்கப்படு, கருணைகொள்; பின் கலனே = பின்புலப் பாத்திரமே)
9. உலகத்தின் திருவாகி
உள்ளமதில் உறைமகள்!
பிங்கலக் கருணையே! பொருளன்றி பெருநிலத்தே பயனில்லையால் நங்கலப் பொருளிலாரை இல்லாரும் ஈந்தாருமே நயந்திலார்போல் மங்கலப் பொருளுயிரை மாய்க்காதே நம்பிக்கை மனவளத்தால் கங்கனங் கொண்டிலங்கி உலகூட்டிப் பரிமாறும் கைமாறே! (பிங்கலன் = குபேரன்; பெருநிலம் = பூமி, நங்கலம் = நன் கலம்; இல்லாரும் = மனையவரும்; ஈந்தாரும் = பெற்றவரும்; கங்கு = தணல், நெருப்பு; கனம் = உறுதி; பரிமாறும் = பரிமாற்றமாகும்; கைமாறு = பரிவர்த்தனை, நன்றி)
10. உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்!
கைமாற்றில் அறனீட்டம் கைவளமாய் நிலைநலக் களமீயும் வைமாற்றில் அதனீட்டங் கைத்துதவப் பெருக்காகி வளமீயும் மைமாற்றில் அதனாட்டம் வைத்தவுறு நஞ்சாகும் நலந்தேயும் பைமாற்றில் பலனீட்டம் கைமாற்றும் பஞ்சமும் பெருஞ்சிகையே! (கைமாற்றில் = பொருள் மாற்றில், கைவளம் = செழிப்பு; நன்றியில்; வைமாற்றில் = இடுநிலையில், வைப்பில்; கைத்து = செல்வம்; மைமாற்றில் = (உதவா) வண்ணம் மாற்றிவிடில்; நைத்த = இற்று, வருத்தி; பை = பசுமை, இளமை; கைமாற்று = கடன்; பஞ்சம் = வறட்சி; சிகை = கடனுக்கான வட்டி)
11. ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்!
பெருஞ்சிகை(ப்) பெய்வளையே! பெருநிதியம் பெறுனர்பால் பெரும்பலந் தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி முனைவர்பால் தனமளக்கும் அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும் அனைவர்பால் அமுதளிக்கும் நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின் நெஞ்சின்பால் நெடியோனே! (பெருஞ்சிகை = நீள் தலைமுடி; பெய்வளை = பெண்; தருஞ்சிகை = தரும் தீக்கொழுந்து; நெய்வார் = நெய்தல், வார்த்தல், வளர்த்தல்; தகை = திரண்டு, அணுகி ; பேணு = போற்று, கவனி, ஆதரி, பராமரி, மதி; அருஞ்சிகை = அரிதாய் மிஞ்சியதை; நெருஞ்சிகை = நெருக்கமான முடி, நெருங்கிய பந்தம், நெருக்கமான பிணைப்பு; நறுமதி = இனிய மதி; நெடியோன் = நெடி நின்ற மால்; நெடி = காலம் நீட்டி)
12. ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்!
நெடியோன் பெருமால் நெடுநல் அணங்காய் நின்மலர் மடிமேல் இருத்தியும் வறுமையில் உழலவும் உன்பதம் படியோர் வருந்தாமற் பல்வளம் கொழுகவும் பொருந்தாத் துடியிடை பொருந்தலும் அவரவர் தொல்வினைச் சங்கமமே! (அணங்கு = தெய்வப்பெண்; துடி= விரைவு, கணம், காலநுட்பம்; இடை = இடையில், நேரம்; துடியிடை = நொடிப்போழ்தில் ; தொல்வினை = பழவினை; சங்கமம் = கலத்தல்)
13. எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்!
சங்கமத் திரட்டும் தாபரமும் நங்கையிற் சார்மையும் வெங்கம் கையறவு களையுங் கொடைதரு வினைக்கே பொங்கும் வல்நிதியம் நற்பணியும் எளிமையும் புரிவர்பால் தங்கமுதப் பெருநிதியே தளைக்கும் புண்ணியத் தாய்வைத்தே! (சங்கமம் = அசையும் சொத்து; தாபரம் = நிலைப்பேறு, அசையாச் சொத்து; நங்கையிற் = நற் கையில்; சார்மையும் = சார்தலும்; வெங்கம் = மிகுந்த வறுமை; கையறவு = வருந்திச் செயலற்ற நிலை, ஏழ்மை; புண்ணியத் தாய்வைத்தே = புண்ணியத்தால் வைத்தே (வைப்பு நிதியாய்), புண்ணியத் தாய் வைற்றிலே, புண்ணியக் காரணத்திற்காகவே;)
14. எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்!
தாய்வைத்த பெருநிதியம் தரணிவாழ் நல்வாய்ப்பும் தன்னுள்ளக மாய்வைத்த மாயையும் தேவையும் மிகுதேடலும் மனநிறைவுக் காய்வைத்த எதிர்பாராநல் யோகமும் ஞானமும் கைவளமும் சேய்வைத்த பேரின்பமும் இசைவாகும் நற்பெருஞ் செல்வத்திருவே! (சாய் = கிடத்திவைத்த, நிரூபி, மிகுதியாகக் கொடு, புகழ், நிறம்; கைவளம் = கைவண்ணம், கைராசி, கைப்பொருள்; சேய் = பெருமை, தலைவன்; இசைவு = வசதி, சௌகரியம், வாய்ப்புநலம்;)
15. ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்!
செல்வத்திரு நற்செழுமை அல்லலறு மிகுவின்பம் சேர்ந்திலங்கி இல்லத்திரு இன்மையும் இகழ்ச்சியும் அகற்றும்நல் இயல்பாயின் அல்லல்தரு மதிமயக்கும் அழுக்காறும் அகந்தையும் அதன்விளை மெல்லத்தரு பேராசையும் மறுமைக்கே வித்தாகும் உறுபொருளே! (மறுமை = மறுபிறவி)
16. ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்!
உறுபொருளே! கற்றார்க்கும் உற்றார்க்கும் மற்றார்க்கும் உய்வுதரும் நறுபொருளே! வையகத்தின் வளத்தையும் வைப்பார்க்கு நலத்தையும் இறுபொருளே! பகுத்தறிவாய் அனைத்திலும் பற்றகற்றும் இறுதிக்கும் வறுபொருளே! உளத்தாசை ஒறுத்தார்க்கே வயமாகும் உலகியலே! (உற்றார் = சிறப்படைந்தோர்; உய்வு = நற்கதி; வைப்பு = வைப்புநிதியம்; வறுபொருள் = வதக்கும், துன்புறுத்தும்; ஒறுத்தல் = அழித்தல்; வயம் = வசம், ஆளுமை, வலிமை, வெற்றி; உலகியல் = உலகநீதி )
17. ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்!
உலகியலாய் ஐம்புலமும் அகப்புறமும் இன்பதுன்பம் உய்த்துணரும் நிலவியலாய் தேவையிறும் பகர்பொருளும் நேசந்தரும் நுகர்பொருளும் அலகியலாய் இலக்கதிலும் அடைதலிலும் அனுபவமாய் அன்றிலறும் விலகியலாய் பெருஞ்சுனைக் களஞ்சியமாய் விளங்குநல் உலகப்பருவே! (அகப்புறமும் = அகமும் புறமும்; நிலவு = வழங்கு, நடப்பு; நேசம் = ஆர்வம், ஆசை; அலகு = அளவுக் கூறு, அடிவிதி; அன்றிலறும் = அன்றில் அறும்; விலகு = ஒதுங்கு, அகலு, நீங்கு; விலகியல் = பற்றற்றவியல்; பரு= உருண்டு திரண்டிரு; திண்ணியது;)
18. ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்!
உலகப்பருப் பொருளாய் பொய்மெய் மாயத்திலும் உணர்விலும் கலகத்திருக் காதலிலும் காமநிறைக் களிப்பிலும் கலப்பிலும் நிலவசத்திரு வனப்பிலும் செல்வநலச் செழிப்பிலும் நேசத்திலும் புலவசத்திரு பற்றலிலும் அற்றலிலும் பொழிந்திடும் பொருண்மையே! (பொய்மெய் = பொய்யும் மெய்யுமான, பொய்யான உடலிலும்; நிலவசத்திரு = நிலத்தின் வசத்திலிருக்கும்; புலவசத்திரு = புலன் வசத்திலிருக்கும்; )
19. ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்!
பொருண்மை ஒருங்கடை இலக்கால் வெல்மடி போற்றலும் அருண்மை வினையிடை திண்மை துணிவொடு ஆற்றலும் மருண்மை தூக்கொடு இருண்மை போக்கலும் மாற்றுமை வெருண்மை நீக்கலும் அன்னை வீரலக்குமி உடைமையே! (பொருண்மை = கருத்துப்பொருள், பருப்பொருள் தன்மை; ஒருங்கடை = ஒருங்கி அடையும் அடைதல்; வெல்மடி = வெற்றி மடியில் அமர்த்துதல்; அருண்மை = கருணை, ஆன்மீகக் கொடை, வழங்குதல், சொல்லுதல், கனிவு; மருண்மை = மயக்கம், கலக்கம், மிரட்சி, வெருவு, வியப்படை; தூக்கொடு = அப்புறப்படுத்தலோடு; மாற்றுமை = மாறுபாடு, அன்னியம்; வெருண்மை = அஞ்சல், மிரளல், கலங்கல்; )
20. ஒருமை
பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்!
உடைமையுமாய் உயிரெழும் ஈட்டமுமாய் வளம்பொழிவல் ஊட்டமுமாய் நடைமையுமாய் நல்வினை நாட்டமுமாய் நலந்தழைக்கும் நோட்டமுமாய் படைமையுமாய் மாற்றத்தொடர் ஓட்டமுமாய் பருவகால ஆட்டமுமாய் கடைமையுமாய் பெருக்குநல் கூட்டமுமாய் கடைத்தேற்றுவாய் கலவியலாலே! (ஈட்டம் = ஈட்டுதல், சம்பாதித்தல்; நடைமை = நடத்தை; நாட்டம் = விருப்பம்; நோட்டம் = மதிப்பிடுதல்; படைமை = படைத்தல்; ஆட்டமுமாய் = பருவகால (விளை) ஆடல்களாய்; கடைமை = மத்தால் சுழட்டுதல், கடைதல், மிகுதியாக்குதல், சொரிதல், தொடருதல்; கூட்டமுமாய் = கூட்டுதலுமாய், கூடலுமாய், கடைத்தேற்று = ஈடேற்று)
21. ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்!
கலவியலால் களிப்பாகிக் கசிந்துருகிக் கருவுயிராய்க் கனிவதுமாய் உலவியலால் மூவாசைக் கடலலைப் பெருமுகிலாய் உவப்பதுமாய் நிலவியலால் மும்மலத்து மும்மையுறு காரணியாய் நெஞ்சகத்துக் குலவியலால் சொட்டுமது போகரசங் கொட்டுங்கவி காதற்காமமே! (கலவியல் = கலத்தல், இணைதல், கூடுதல்; உலவியல் = மகிழ்ச்சிநடை, வழங்குநடை; மூவாசை = மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை; உவப்பு = விருப்பு, மகிழ்ச்சி; நிலவியல் = வழக்கியல், நடப்பியல், நிலைத்தலால், விளங்கலில்; மும்மலம் = ஆணவம், கன்மம், மாயைக் கட்டுகள்; மும்மை = உம்மை, இம்மை, மறுமை ஆகிய மூவகை நிலைப்பேறு; குலவியல் = குலவு இயல், குலவு = நெருங்கி உறவாடு, சிறப்படை; சொட்டுமது = சொட்டும் அது; போகம் = இன்பம், செல்வம், விளைச்சல்; ரசம் = சாறு, சுவை, மெய்ப்பாட்டுணர்வு; கவி = விரிந்து பரவு, கருத்தூன்று;)
22. ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்!
காதற்காமம் கடைந்தேறக் கருணைவளம் களைநுதலும் காமதேனாய் மாதர்காமம் மடைமாறும் மனையறமும் மயக்கமறும் மங்கலமுமாய் நோதற்காமம் நல்குரவின் இடர்களைந்து நோன்மைநிறை நிலைப்பேறாய் கோதற்காமம் கொழிவிளைக் கோதனத்துக் கொடைவழிக் களிக்குமுயரே! (ஓராதே = ஆராயாதே, கருதாதே, நினையாதே; காமம் = விருப்பம், ஆசை; மாதர் = பெண்கள், காதல், அழகு; களைநுதல் = களை + நுதல், களை = பொலிவு, கலகலப்பு, நுதல் = தலை, கூறு, தோற்றுவி; காமதேனு = கேட்டவற்றை நல்கும் தேவலோகப் பசு; மடை = மதகு, கண்மாய், நீரணை; மங்கலம் = சுபம்; நோதல் = நோவுதல்; நோவு = வலி, நோய், பிணி, வியாதி; நல்குரவு = வறுமை, கோது = நீவு, வருடு, தடவு, உவகை, களிப்பு; நோன்மை = தவம், பொறுமை, வலிமை, மேன்மை; கொழிவிளை = கொழியும் விளைச்சலால்; கோதனம் = பசுச்செல்வம், ராஜவளம்;)
23. ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்!
களிக்குமுயர் பேரின்பத்து ஊற்றருவிப் பெட்டகமாய் கையிருப்பாய் அளிக்குமுயர் வாருதியில் பசுமனத்துப் பகப்பண்பாய் அன்பளிப்பாய் தளிக்குமுயர் தன்னலத்து அகவிருளைத் தாண்டிப்பின் திருவிளக்காய் நளிக்குமுயர் நல்மனத்து நற்பேறாய் நலமளிக்கும் நனியுணர்வே! (ஔவியம் = பொறாமை, அழுக்காறு; மருள் = மனக்குழப்பம், கலக்கம், மனத்தடுமாற்றம்; கையிருப்பு = தன்வசத்து இருப்பது; வாருதி = பொங்கி ஒழுகலில்; பசுமனம் = சாதுமனம், இனியமனம், நிலைத்தமனம்; பகப்பண்பு = ஆறு பண்புகள் = புகழ், செல்வம், ஞானம், வீரம், திரு, உறுதி; தளி = துளி, கோயில், இடம், மேகம்; தாண்டு = குதித்தாடு, தாவு, விஞ்சு, மேம்படு; நளி = அடர்ந்திரு, செறிவாகு, விரிந்திரு, படர்ந்திரு, ஒத்திரு; உயர்வு, பெருமை, பரப்பு; நனி = மிகுதியாக, அதிகமாக;)
24. ஆக்கும் பொருளுமாகி
உலவவிடுந் திருமகள்!
நனியுணர்வாய் கருமவினைக் கருவறையாய் நன்நிலைமை நல்வாய்ப்புக் கனியுணர்வாய் கவனம்நிறை வினையறமாய் செய்வினைக் களப்பொலிவுத் தனியுணர்வாய் திருந்துவினை விழுமியமாய் தகைசால் திரவியத்திரு நுனியுணர்வாய் நாற்பொருள் நுண்ணுணரும் நற்பேறாய் நலமிகுக்குமே! (நனி = மிகுதியாக, அதிகமாக; கருமவினை = செய்வினை; நன்நிலைமை = வீடுபேறு; களம் = இடம்; விழுமியம் = சிறந்த, உயர்வான; திருவினை = நல்வினை, புனிதவினை; திருந்து = சீர்படு, செம்மையாகு; திரவியம் = செல்வம், சொத்து; தகை = பொருத்தம், உயர்வு, அழகு, இயல்பு, பொலிவு; சால் = ,மிகு, நிறைவு, பெருமை, முற்றுப்பெறு ; நுனி = கூர், முனை, உச்சம்; நுண் = நுணுக்கமான, நுட்பமான, மிகச்சிறியதான, கூரிய; நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும்; நற்பேறு = அதிட்டம், பாக்கியம்; )
25. காடாகி
மலையாகிக் கடலாகும் பொழிலவள்!
நலமிகுக்கும் இயற்கை நிலமாகி மலையாகி நாடாகி வலமிகுக்கும் ஊற்றாகி ஆற்றாகி கடலாகி வானாகி தலமிகுக்கும் மழையாகி தளிராகி வளமாகி தனமாகி சலமிகுக்கும் சங்கமத்து வித்தாய் சான்றாகும் சம்பத்துமே! (வலம் = வலிமை, வெற்றி ; தலம் = இடம், உலகம், வீடு ; சலம் = இயக்கம், சுழற்சி; சங்கமத்து = தாவரம், நிலம், நிலத்துயிர்; சம்பத்து = பொருள் வளம், வாழ்க்கை நலம்; )
26. காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்!
சம்பத்துமாய் மனைவாசல் நிலபுலத்து நன்மக்களுந் தனவளமாய் தம்பத்துமாய் மந்தைநிறை சமூகத்தாய் வாழ்வியல் சந்தையுமாய் பிம்பத்துமாய் வணிகவியல் பொருளியல் பெருகுநிலைப் பங்குமதாய் நம்பத்துமாய் இலங்குவழி நாணயமாய் விளங்குமெழில் நற்கதியே! (சம்பத்து = வாழ்க்கை நலம்; தம்பம் = பற்றுகோடு, ஆதரவு; பிம்பம் = உருவம், படிமம், எதிர் வடிவம், பிரதிபலிக்கும்; பெருகுநிலை = வளர்நிலை; நம்பத்து = நம்பகத்து, நம்பிக்கைக்குரிய; நாணயம் = செலாவணி, உலோகப் பணம், வாய்மை; நற்கதி = வீடுபேறு, பேரின்பம்;)
27. சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்!
நற்கதிதருஞ் செழுபயன் இகக்காரணி முன்வினை நற்பலனும் முற்பதிதரும் சுழல்விளை முற்றாஅவா மயல்வித்து மறுமையும் கற்பகந்தருங் கொழுநலங் கருதியாங்கு கைவண்ணங் கிட்டுதலும் சிற்சுகமருள் நிலைத்தலும் ஊழ்வினை செய்தவமே சந்ததியுமே! (நற்கதி = வீடுபேறு, பேரின்பம்; இகக்காரணி = இக வாழ்விற்க்கான காரணம்; முற் = பழம்; பதி = மனத்தில் நிலைத்த, ஊன்றிய, முற்றா = முடியாத; அவா = ஆசை; மயல் = மாயை, வெறி, வேட்கை; வித்து = விதை; சுழல் = சுழற்சி; விளை = விளைக்கும்; மறுமை = மறுமைப் பிறவி; கற்பகம் = கற்பகத் தரு = விரும்பியதைத் தரும் மரம்; கொழுநலம் = கொழுத்த நலம்; நலம் = சுகம்; கருதியாங்கு = நினைத்த வண்ணம்; கைவண்ணம் = கைத்திறன், நேர்த்தி; கிட்டுதல் = கிடைத்தல், நெருங்குதல், அடைதல்; சிற்சுகம் = ஆன்ம இன்பம்; ஊழ்வினை = பழவினை; செய்தவமே = புனிதமே, தவப்பயனே, நற்செயலே; சந்ததியுமே = வமிசம், பரம்பரை, தலைமுறை, வழித்தோன்றல்;)
28. சகமாகி
மாற்றாகிச் சகலமாகும் மாயவள்!
சந்ததியுமாய் பந்தமுமாய் சமமாகுஞ் சொந்தமுமாய் சம்பத்தாய் வந்ததுமாய் வருவதுமாய் மாற்றுமாய் மாற்றாநல் வரம்பிலாச் சிந்தையுமாய் நல்லறமாய் சீர்மைமிகு சௌபாக்கியத் தாயுமாய் எந்தையுமாய் இருக்கிறாய் மாயமுமாய் இலக்குமியே இலக்காயே! (சீர்மை = பெருமை, சிறப்பு; சௌபாக்கியம் = வளமும் செழிப்புக் கொண்ட நிலை)
29. தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்!
இலக்காயுறு உளப்பொருளாய் இயங்குநல் தூண்டலுமாய் இலங்கியும் கலக்காயுறு அகத்திருளாய் உழற்றுமதி கல்லாமையால் கிடப்பாயும் துலக்காயுறு துய்ப்பொருளாய் விளங்கிவல் பேராசையால் தொடராயும் நலக்காயுறு மறுமையாய்மீள் நன்னிலத்தில் தொழிற்படும் நல்வரத்தே! (உறு = உறுதியாக, மிகுதியாக; கலக்கம் = குழப்பம்; உழற்றுமதி = உழற்றும் அதி; கல்லாமை = கற்காமை, அறியாமை; துலக்கம் = தெளிவு, பொலிவு, ஒளிர்வு, பிரகாசம்; நலக்காய் = நலத்துக்காய்; மீள் = மீண்டும்; நன்னிலம் = நல் நிலம்; தொழிற்படும் = செயல்படும்; வரத்து = வருகை, வரும்படி; )
30. தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்!
நல்வரத்தாய் நடைமுறை நடுவறத்து நல்வித்தாய் நாயகியாய் பல்வரத்தாய் பணிமுறை பண்பறத்து பணிவித்தாய் பார்கவியாய் நில்வரத்தாய் நேர்மறை நல்லறத்து நினைவித்தாய் நிம்மதியாய் இல்வரத்தாய் வாழ்வகை உயர்வித்து இருதயத்தாய் இலங்குமின்பமே! (நடுவறம் = நடுநிலைமை; பார்கவி = இலக்குமி; நில்வரத்து = நின்றிலங்கும் வரத்தாய்; இல்வரத்து = இல்லற வரத்தாய்; வாழ்வகை = வாழும்வகை;)
31. நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்!
இலங்குமின்பத் திருமதியாய் எண்ணியவை எண்ணியாங்கு இயல்பவளாய் நிலங்குமின்பத் திருநிறையாய் நண்ணுவர்க்கே நலந்தரும் நிறைகுடமாய் விலங்குமின்பத் தவநெறியாய் பற்றறுக்கும் வினைவாணருக்கு மாத்திரமாய் துலங்குமின்பத் திருப்பொருளாய் முத்திநலத் துணைநல்கும் திருமகளே! (திருமதி = மனைவி, திரு மதி = மதிப்பிற்குரிய அறிவாய்; இயல் = நிகழ், தங்கு; திருநிறை = இலக்குமி நற்பார்வையாய்; நண்ணு = அணுகு; விலங்கு = விலகு, நீங்கு; வினைவாணர் = வினை மேன்மையர், சிறந்தவர்;) 32. நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகளே! எண்மகளாய் மாயமும் மயக்கமும் தெளிவிக்கும் பெருமகளே! பொன்மகளாய் யோகமும் பெருநெறியும் பொலிவிக்கும் கருமகளே! செம்மகளாய் கருவிலுந் திருவாய்க் குபேரவருளைத் தருமகளே! எம்மகத்தே யாண்டுமே தகைத்திருவே செங்கமலமே! (எண்மகள் = அஷ்ட இலக்குமி; யோகம் = நற்பேறு, நற்சேர்க்கை, கூடல்; பெருநெறி = முக்தி; முத்தி = வீடுபேறு, மோட்சம்; பொலிவிக்கும் = சிறப்பிக்கும்; செம்மகள் = இலக்குமி; குபேரவருள் = குபேரசம்பத்து, பெருஞ்செல்வம்; கருமகளே = கருப்பொருளே; யாண்டுமே = எப்பொழுதுமே, எவ்விடத்துமே; தகைத்திரு = திரண்டிரு, இயைந்திரு, இயல்பாயிரு, உண்மையாயிரு; செழுத்திருமே = செழுத்து இருப்பாயே; செங்கமலமே = செந்தாமரையே;) |
|
* திருமகள் அந்தாதி முற்றும் *
|
| திருமகள் அகவல்: (தலைப்புக் கவிதை) |
|
அலர்மேல் மங்கையே அழகுநல் புவிமகள்! அலைமகள் நங்கையே அன்னைத் திருமகள்! ஆழியிலே வந்துதித்த அற்புதமே அலைமகள்! ஆவினம் பால்சொரிய அமுதமாகுந் தலைமகள்! இலக்குமித் தாயேநல் இதயத்திரு பெருமகள்! இலங்கிடும் யாதிலும் இன்பநிலை தருமகள்! ஈட்டமாய் வளநலத்தை ஈண்டுதரும் நிறைமகள்! ஈன்றவற்கே யாங்கனமும் மீண்டுவரும் மறைமகள்! உலகத்தின் திருவாகி உள்ளமதில் உறைமகள்! உணர்வாகி மலராகி உயர்வாகும் இறைமகள்! ஊனாகித் தேனாகி ஊஞ்சலாடும் நறுமகள்! ஊழ்வினைப் பொருளாகி ஊடலாகும் உறுமகள்! எளிமையும் வலிமையென எழுச்சிதருந் தாயவள்! எதிர்பாரா யோகமாகி இன்பந்தரும் மாயவள்! ஏழ்மை இல்லாமை நீக்கிவிடும் நல்லவள்! ஏக்கத்தை இகவாழ்வில் போக்கிவிடும் வல்லவள்! ஐம்புலனும் துய்த்துணரும் இன்பதுன்ப நலமவள்! ஐசுவரியம் தனமாகும் அனைத்தான வளமவள்! ஒன்றிய இலக்குமாகி வெற்றிதரும் இனியவள்! ஒருமை பலவாக்கிப் பெற்றுத்தருங் கனியவள்! ஓயாத அலையாகி ஆசைதரும் அலைமகள்! ஓராதே நிலையாகி உய்விக்குந் தலைமகள்! ஔவிய மருளுமாகி அலையவிடும் பெருமகள்! ஆக்கும் பொருளுமாகி உலவவிடுந் திருமகள்! காடாகி மலையாகிக் கடலாகும் பொழிலவள்! காயாகிக் கனியாகிக் களிப்பாகும் எழிலவள்! சக்கரச் சுழற்சியாய் சதுராடுஞ் சேயவள்! சகமாகி மாற்றாகிச் சகலமாகும் மாயவள்! தொடராகி மறுமைதனைத் துலக்குந் தூயவள்! தொழிலாகி வறுமையினை விலக்குந் தாயவள்! நண்ணிய வகையெலாம் நலந்தரும் புவிமகள்! நுண்ணிய யோகமுயர் வீடுந்தருந் திருமகள்! திருமகள் போற்றி போற்றி போற்றியே! |
|
*** திருமகள் அகவல் முற்றும் ***
|
|
***
|
Tuesday, June 7, 2011
அன்னையர் அந்தாதி (பகுதி: 3)
Subscribe to:
Post Comments (Atom)


மலை மகள் உங்கள் மனதில்
ReplyDeleteகலைமகள் உங்கள் மதியில்
அலைமகள் உங்கள் அருகில்!
மிக அருமையாக இருக்கு..
ஒலிப்பதிவாகவும் கிடைத்தால்
எங்களை போன்ற சொம்பேறிகளுக்கு
ப்யன்படும்.... நன்றி!!!