Thursday, December 31, 2009

2010 புத்தாண்டே வா...!

2010 புத்தாண்டே வா...!


புதிய ஆண்டே வா...!
புதுமைகள் அனைத்தும் தா...!

ஆலம் விருட்சமாய்
        அன்னைத் தமிழகம்
திசைகளில் எல்லாம்
        கிளைகள் பரப்ப...
கலைகள் வளர்ந்து
        கணினிகள் பெருகி
முத்தமிழ் இன்னும்
       முன்னிலை செல்ல
                                                                (புதிய)
வாய்ப்புக்கள் குவிந்து
        வறுமைகள் அழிந்திட
வல்லுனர் மிகுந்து
        வளம்பல கொளிக்க
வள்ளுவம் வகுத்த
        நல்லறம் பேண
சுற்றும் புறமும்
        சுகநலம் காண
                                                                (புதிய)
மக்களின் நெஞ்சில்
        மகிழ்வே பிறக்க
மானில மானிடர்
        மானுடம் பெருக்க
அறிவும் திறனும்
        அன்பும் பெருக
வேற்றுமை நீங்க
        ஒற்றுமை ஓங்க
                                                                (புதிய)
சான்றோர் நிறைந்த
        சமுதாயம் சமைக்க
வந்திடும் சந்ததி
        சிந்தையில் செறுக்க
சாத்தியம் படைக்க
        சரித்திரம் உரைக்க
மூத்த குடிமகன்
        முன்னிலும் சிறக்க
                                                                (புதிய)
உயர்ந்த உளமும்
        ஓங்கிய பார்வையும்
தெளிந்த செயலும்
        நாமாய் இருக்க
ஊனில் உணர்வில்
        தமிழே நிறைந்து
உலகம் என்றும்
        நமதாய் இருக்க...
                                                                (புதிய)

***

Tuesday, December 29, 2009

பொருட் சுவை

பொருட் சுவை


உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது

என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன்
பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன்
மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன்
ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன்
பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன்
உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன்
போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன்
துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன்
இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன்
இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது
ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன்
தியானம் வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல
ஒளி வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல
மோனம் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம்
ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும்
பேரின்பம் என்றது

***

Monday, December 21, 2009

ஆசை

ஆசை


வெயிலின் அருமை நிழலில் தெரியும்
         வீணரே ஏன் வாதம்?
விதியின் வழிதான் பயணம் தொடரும்
         மனிதரே ஏன் கோபம்?

அண்ணன் தம்பி அனைத்தும் வேடம்
         அளவு மீறிப் பழகாதே...
அடிப்பார் நெஞ்சில் துடிப்பாய் நொடியில்
         அன்பு மனது கேளாதே...
கொண்ட மனைவி கொடுத்த பிள்ளை
         கூட வருவோர் யாருமில்லை...
பந்த பாசம் அறுத்து நின்றாலே
         பாவி மனதில் துயரமில்லை...
                                                                               (வெயிலின்...)
கூட்டம் போடும் உறவுகள் எல்லாம்
         இருக்கிற வரைதான் சொந்தமடா...
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
         கோபம் கொள்ளுதல் பாவமடா...
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது
         கண்களில் தெரிகிற மாயமடா...
இரவும் பகலும் மாறும் என்பது
         இயற்கை தருகிற பாடமடா...
                                                                               (வெயிலின்...)
சுவரே இல்லாச் சிறைதான் ’உலகம்’
         சூட்சும உண்மை தெரிகிறதா?
சுற்றம்; சூழல்; வாழும் காலம்;
         பெற்ற தண்டனை புரிகிறதா?
போன வினைக்குக் கிடைக்கும் பலனை
         புரியாது இங்கே மயங்குகிறாய்...
புதிய வினையால் தொடரும் விளைவைப்
         புரிந்து கொள்ளத் தயங்குகிறாய்...
                                                                               (வெயிலின்...)
இருப்பினில் வந்ததும் எடுத்துச் செல்வதும்
         பாவ புண்ணியச் சுமைதானே...
இன்பம் துன்பம் என்பது எல்லாம்
         வினையால் வருகிற நிலைதானே...
பாழும் உலகில் மோகம் கொண்டு
         காதல்; ஆசை; வளர்க்காதே
பழைய பாக்கியைத் தீர்க்கவே வந்தோம்
         புதிய பாவத்தைச் சேர்க்காதே...
                                                                               (வெயிலின்...)
ஆசை என்பது ஆட்டம் தொடர
         ஆண்டவன் வைத்த தூண்டிலடா...
அனுபவம் என்பது நிகழ்கிற வரையில்
         அடுத்தும் பிறவிகள் தோன்றுமடா...
கொடுத்த வாழ்வை வாழ்ந்து முடித்தால்
         கடக்கும் தூரம் குறையுமடா...
குறுக்கு வழியில் பறக்க நினைத்தால்
         மீண்டும் குருவி பிறக்குமடா...
                                                                               (வெயிலின்...)
எதிரே வருகிற இன்னலைக் கண்டு
         அழுது துடிப்பது மடமையடா...
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
         வாழ்ந்து முடிப்பது கடமையடா...
இல்லை என்றே அறிந்த பிறகும்
         ஏங்கித் தவிப்பது துன்பமடா...
இருப்பதைப் பகிர்ந்து அன்பினில் திளைத்தால்
         எல்லா நாளும் இன்பமடா...
                                                                               (வெயிலின்...)
தேவையைச் சுருக்கி ஆசையை விடுத்தால்
         பின்வினைப் பாவம் ஓடுமடா...
புலன்களை அடக்கி இறைவனைத் தொழுதால்
         புத்தியில் ஞானம் கூடுமடா...
பெற்றதைக் கொண்டே வென்றிட வேண்டும்
         வாழ்வின் நோக்கம் முக்தியடா...
பிறவிச் சுழற்சி மறுமை அறுத்தால்
         பெறுவோம் மோட்சச் சித்தியடா...
                                                                               (வெயிலின்...)











***

Friday, December 11, 2009

எதிர்வினைப் பலன்கள் ஏன்?

(மகாகவி பாரதிக்குச் சமர்ப்பணம்)

எதிர்வினைப் பலன்கள் ஏன்?

கொள்ளை அடிப்போர் வள்ளல்கள் போலவும்
கோவிலை இடிப்போர் சாமியைப் போலவும்
காட்டிக் கொடுப்போர் வீரர்கள் போலவும்
கூட்டிக் கொடுப்போர் தொண்டர்கள் போலவும்
தமிழே அல்லாதோர் தமிழர்கள் போலவும்
தன்னலம் மிக்கோர் தலைவர்கள் போலவும்

பிள்ளைகள் அற்றோர் தந்தைகள் போலவும்
பேதலி யெல்லாம் மேதைகள் போலவும்
அறிவிலி மண்டுகள் அறிஞர்கள் போலவும்
ஆற்றல் அற்றவர் கவிஞர்கள் போலவும்
கொலைதனைச் செய்வோர் கலைஞர்கள் போலவும்
குடும்பம் நடத்துவோர் துறவிகள் போலவும்

காமத் தேடிகள் அர்ச்சகர் போலவும்
கயமை உடையோர் நேர்மையர் போலவும்
குற்றம் இழைப்பவர் நீதியர் போலவும்
குறைகள் அற்றவர் கைதிகள் போலவும்
பிழைக்க வந்தோர் மன்னர்கள் போலவும்
பெருமைச் சந்ததி அகதிகள் போலவும்

சுயநலப் பேதைகள் அரசினை ஆள்வதும்
சொந்தமும் பந்தமும் மந்திரி ஆவதும்
பதவியில் இருப்போர் போதையில் ஆழ்வதும்
கோழையர் கூட தேர்தலில் ’வெல்வதும்’
லஞ்சம் பெறுவோர் சஞ்சலம் அறுப்பதும்
வஞ்சனை செய்வோர் கொஞ்சி மகிழ்வதும்

பாதணி ஆண்ட பாரதம் என்பதும்
பாதச் செருப்பாய் உழைப்பேன் என்பதும்
வாக்கை ’வாங்கி’ வெற்றி என்பதும்
’வாரிசே’ ’மக்கள் ஆட்சி’ என்பதும்
தம்மைப் போற்றின் பேரரசு என்பதும்
தமக்கும் வேண்டும் பரிசில்கள் என்பதும்

’நோ-பல்’லைக் கோரிப் பல்லை இளிப்பதும்
’சா’கித்தியம் நாடிச் சாடை உரைப்பதும்
கிட்டிய வரையில் இலாபம் பார்ப்பதும்
திட்டம் தீட்டியே திருடிச் சேர்பதும்
சங்கதி எதுவும் இல்லை எனினும்
சாதித்தோம் என்றே சத்தியம் செய்வதும்

சந்தியில் நிற்போர் சாவினை ஏகினும்
சாகச நாடகம் நடத்தி முடிப்பதும்
சந்திலே புகுந்து சிந்து படிப்பதும்
சமயம் பார்த்து நொந்து நடிப்பதும்
முதலைக் கண்ணீர் அழுகை விடுப்பதும்
முத்தமிழ்ச் சொத்தை முழுவதும் அடிப்பதும்

உதவா திட்டத்தை அமல் படுத்துவதும்
உலக வங்கிக்கே அடகு வைப்பதும்
ஊழலே வாழ்வாய் பிழைத்துக் கிடப்பதும்
ஊரை அடித்து உலையில் வைப்பதும்
ஆட்சியில் அமர்ந்தால் ’ஆண்டவன்’ என்பதும்
ஆணவம் கொண்டு ஆடித் திளைப்பதும்

துன்புறு மாந்தரைப் பங்கு வைப்பதும்
தொட்டவர் எல்லாம் சுயநலம் பார்ப்பதும்
தூங்குவோர் விழித்தால் திசை திருப்புவதும்
துணிந்தோர் மனதில் மடமை வளர்ப்பதும்
தொடரும் நாடகம் நியாயம் என்பதும்
நிகழ்ந்தவை எல்லாம் நல்லன என்பதும்

பத்தினியர் எல்லாம் பரத்தையர் ஆவதும்
உத்தமர் எல்லாம் உரிமை இழப்பதும்
தீங்கிற்குத் தீங்கே தீர்வு என்பதும்
தீவிர வாதத்திற்கு மருந்ததே என்பதும்
தேசப் பிதாவை கேலி செய்வதும்
தேசத்தை ’நடிகர்’ வசமே விடுப்பதும்

வேலையும் அற்றுச் சாலையில் இருப்பதும்
விதியெனெ நொந்து வீழ்ந்து கிடப்பதும்
மதுவினில் மயங்கி மானம் இழப்பதும்
’மதத்தினை’ வளர்த்து மானுடம் கெடுப்பதும்
பழமை வினையின் பழியே என்பதா?
பாமர மனிதரின் பேதமை என்பதா?

வானமும் பூமியும் நிச்சயம் என்றால்
வளர்பிறை கதிரும் சத்தியம் என்றால்
அரசியல் பிழையை அறந்தான் விடுமா?
அடுக்கிய பாவம் அதுவாய்க் கெடுமா?
முன்வினை பின்வினை என்பது மெய்யா?
முதுமொழிக் கூற்று அனைத்தும் பொய்யா?

பொய்யும் புரட்டும் உயர்நிலை பெறுமா?
பொருளினைச் சுருட்டின் புகழ்தான் வருமா?
அழுதே நின்றால் கருணை வருமா?
அனுதாபம் ஒன்றே வாழ்வைத் தருமா?
வஞ்சித்து வாழ்ந்தால் வாழ்க்கை ஆகுமா?
வாடித் துடித்தால் துன்பம் போகுமா?

நெஞ்சின் அயர்ச்சி நிலையைத் தீர்க்குமா?
நினைவுத் தளர்ச்சி கவலை போக்குமா?
வேடிக்கை கண்டால் உணவு தேறுமா?
வேதனை எல்லாம் தானாய் மாறுமா?
முயற்சியே இன்றி வெற்றி கிட்டுமா?
முடங்கிப் படுத்தால் மேன்மை எட்டுமா?

சந்ததி என்பது சுயமாய் வருமா?
சங்கடம் என்றால் சஞ்சலம் விடுமா?
இயங்காது இருத்தல் இயற்கை ஆகுமா?
இறந்து போவதே பொறுமை ஆகுமா?
திருந்தா அறிவால் பொறுப்புத் தீருமா?
தெய்வம் இகழ்ந்தால் விருப்பங் கூடுமா?

தீமை வளர்த்தல் தெளிவுடைப் பொருளா?
தீராத் துயரம் தெய்வத்தின் அருளா?
எதிர்மறைப் பலனே இயற்கையின் விதியா?
இரவும் பகலும் இறைவனின் சதியா?
வாய்மை என்பது ஊமையின் மொழியா?
வாய்ப்பினை இழப்பது அறிவுடைச் செயலா?

உழைத்தவர் இனத்தே பட்டினிச் சாவா?
உலுத்தர் கூட்டம் கோட்டையில் வாழ்வா?
கோட்டை என்பது கொள்ளையர் அறையா?
கூடித் திருடும் கூட்டணிக் கடையா?
தூய்மை என்பது தொலைந்த சரக்கா?
துயரம் என்பது தொடரும் கிறுக்கா?

இதயம் இருப்பது மனிதரின் பிழையா?
இல்லை என்பதே இருப்பவர் தொழிலா?
வாழ்க்கை என்பது அனுபவச் சிறையா?
வாழ்வது என்பதே சாகசக் கலையா?
நெஞ்சு பொறுக்கு தில்லையே இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...


***


English Translation:

Why opposite results?
(Dedicated to Mahakavai Subramanya Bharathy)

The robbers looking like the philanthropist
The temple demolishers looking like the God
The betrayers looking like the fighters
The pimps looking like the volunteers
The non-Tamilians looking like the Tamils
The selfish mongers looking like the leaders

The childless looking like the fathers
The perplexed looking like the geniuses
The mindless fools looking like the experts
The no prowess looking like the poets
The murderers looking like the artists
Those who run domestic life looking like the ascetics

The sex maniacs looking like the priests
The meanies looking like righteous
The offenders looking like the judges
The righteous looking like the convicts
The immigrants looking like the kings
The great lineage looking like the refugees

The selfish naives running the government
The kin and kith becoming the ministers
Those in power drowning in intoxication
Even the cowards 'winning' the elections
That who take bribes getting unperturbed
The cunning ones fondling and enjoying

Calling the Bharath as the sandals ruled
Telling that I would serve as the slippers
Buying the 'Vote' and declaring as the winnings
Saying 'Heirs' are the democracy
Declaring 'The Big King' for the boot-lickers
Insisting 'Prizes' for the self too

Wishing the 'Nobel' (/No-teeth) and smiling sheepishly
Wanting the 'Sahithyam' (/Death) and talking indirectly
Making the profit to the extent possible
Planning cunningly and stealing to save
Though nothing is the real stuff
Promising that as the great accomplishments

Though they in crossroads met with the death
Pretending and ending though high dramas
Singing the tunes in the available gaps
Then shedding the crocodile tears
Looting the tri-Tamil properties

Forcing the useless schemes and plans
Mortgaging only at the World Bank
Making the life only through corruption
Cooking by plundering through places
Terming the power chance as 'the God ruled'
Playing through the haughtiness

Dividing to share the afflicted people
Contacted all seeking self gain
Diverting the attention if at all awakened
Growing stupidity to those show bravery
Justifying the drama that continuing
Saying all well as what happened

Chaste ladies turning as whores
Nobles losing all their rights
Telling ill as the just for all the ills
Saying terrorism as the solution for itself
Ridiculing the father of the nation
Handing over the nation to the 'Actor's

Staying jobless in the streets
Calling as fate and falling in distress
Boozing with the liquors to doze & lose dignity
Growing the 'Religion /rut' and spoiling the humanity
Is it the revenge of previous deeds?
Is it the ignorance of the laymen?

If the sky and earth is certain
If the growing moon and sun is promise
Will the virtues ignore political mistakes?
Will the accumulated sins destroy by themselves?
Prior and later deeds are they true?
Are the old sayings just the lies?


Will the lies and twists ever go heights?
Will stealing the properties fetch ever the fame?
Will the kindness come for always crying?
Will sympathy alone make up the life?
Will living by deceits be the life?
Will withering and suffering remove the agony?

Will hearty depression give away the discretion?
Will the wearing memory remove the worries?
Will the fun watching fill the stomach?
Will all the distress change by themselves?
Will there be victory without any effort?
Will the lame sleep ever touch the eminence?

Will the lineage come automatically?
Will the perturbation leave by discomfort?
Will it be natural to stay inactive?
Will the dying alone mean the patience?
Will the irreparable mind ends the responsibility?
Will the despising the God attain the wishes?

Is that clear affair to fostering the evil?
Is that Gods grace the endless agony?
Is that natural law the opposite results?
Is that Gods deceit the day and night?
Is that the Truth the language of dumb?
Is that sensible to miss any opportunity?

Is the death of starving for the toiled?
Is the life at forts for the looting folks?
Is the fort the room for the plunderer?
Is that the office for the robbing front?
Is cleanliness a gone away stock?
Is misery the continuing madness of blocks?

Is the heart the mistake of humanity?
Is the empty hand the duty of riches?
Is the life the prison for experiences?
Is the living itself an extraordinary art?
The heart is unable to bear on these…
Unstable human beings ever could think of…

***

Friday, November 20, 2009

உலகத்தொடு ஒன்றா மடமை...

இயற்கை ஒவ்வா; அறிவு பொருந்தா;
இணைவரு மனிதரும் இணங்காச் செயலால்
பழித்தவை கழித்தவை ஒளித்துச் சுகித்து
உதவா வழியினில் உருப்படாது ஏகி
உணர்வும் நலனும் இலாதாது ஆகி
இதமிலா விதண்டா வாதமும் பேசி........................1

காலம் பொருளைப் பாழென வாக்கி
கற்றவர் மற்றவர் உற்றவர் கரித்து
யாரும் போகா ஊரினைத் தேடி
தீதை ரசித்து; திகட்டலை ருசித்து
சிந்தனை குழம்பி; சோம்பரில் உழம்பி
ஒழுக்கம் கெடுத்து; உபத்திரம் கொடுத்து..............2

சுயநலம் பேணி; சொல்லினைப் புரட்டி;
தெய்வம் இகழ்ந்து; தீதினைப் புகழ்ந்து
அல்லவை எல்லாம் நல்லெனக் கூறி
அறிவு மழுங்கி; ஆணவம் பெருக்கி
அரை குறை அறிவை ஆனந்தித்து
அறிந்தன பகர அறிவிலி தேடி................................3

கலைகளைப் பழித்து; சிலைகளை அழித்து
அழகினைச் சிதைத்து; அழுக்கினை ரசித்து
கயமை உகந்து நிதியம் தேடி
சூட்சியில் ஆளும் மாட்சிமை காட்டி
விடியா இரவு; பொருந்தா உறவு;
இதயம் கறுத்து; சுதந்திரம் வெறுத்து......................4

கற்பைத் துப்பி; எச்சிலை நக்கி
தாயைத் தமிழைத் தரணியைத் தாழ்த்தி
கருமிப் பொருமி இலாவணி பாடி
தரித்திர விளக்கில் சரித்திரம் படித்து
குற்றப் பரம்பரைத் தொட்டுத் துலங்க
சாத்திரம் மருவி சூத்திரம் எழுதி..............................5

ஆத்திரம் மூத்திரம் அனைத்திலும் உழண்டு
அறிவும் அகமும் அறவே கழண்டு
சோத்துத் துருத்தியாய் நாற்றப் பிண்டமாய்
பகலில் இருளைத் தேடும் முண்டமாய்
வந்து விழுந்த சில்லறை கொண்டு
வருகிற சில்லறை மனிதரில் மருண்டு....................6

உருண்டு திரண்டு உள்ளம் பிரண்டு
உற்றவர் மற்றவர் கண்டு மிரண்டு
நெஞ்சம் புலம்பி, நெடுவழி நோக்கி
பொய்யும் புரட்டும் மொய்யென வைத்து
கைத்தடி ஏந்திக் கைத்தலம் பற்ற
வைதவர் நொய்தவர் வல்லமை கொள்ள...............7

விடலை இளைஞரின் வெற்றி வெறுத்து
வஞ்சப் புகழ்ச்சியில் நொந்து படுத்து
ஆப்பிடைக் குரங்காய் அரங்கம் பிதற்றி
காப்போம் பொருளெனக் கதறித் துடித்து
திரண்ட திரவியம் புரட்டிச் சுருட்டி
தேறிய வரையில் இலாபம் பார்த்து........................8

சுடலைப் பயத்தில் சுருண்டு படுத்து
சோகித்துச் சுகித்து சொந்தங்கள் சபித்து
கண்டவை கேட்டவை அனைத்தும் வெறுத்து
காண்பவை எல்லாம் கரித்து முடித்து
தீதையும் சூதையும் போதனை செய்து
தீராப் பிளவினை நெஞ்சினில் தேக்கி.........................9

மூத்த குடியை முத்தமிழ் மரபை;
அள்ளக் குறையா ஐம்பெரும் காவியம்
சொல்லும் அழகை; கன்னற் தமிழை;
கண்ணகி மாதவி கற்பின் திறத்தை
வள்ளுவச் சிறப்பை கம்பனின் அழகை
பண்டு சொன்ன பாரதி தீரத்தை.............................10

இன்னற் செய்து; இழிவு படுத்தி;
அரைகுறைப் பொதுமை நிறைவுறப் பேசி
கோணற் புத்தியில் கொள்கை வடித்து
நெஞ்சம் இருண்டு நீர்மேல் எழுத்தாய்
நேர்மை நில்லா பேதமை உரைத்து
கருமை நாடகம் மேலுறக் களித்து..........................11

ஒழுக்கிய நீரினில் மீன்வலை வீசி
ஒழுகிடும் வாழ்வினை உயர்வெனப் பேசி
இழவினைச் சுகிக்கும் இழிவுறு பிறப்பாய்
கழுகாய்ப் பருந்தாய் பிணத்தினை உவந்தே
புழுத்த நரகலைப் புசித்துக் கொழுக்கும்
விலங்காய் வாழ்வை விளங்கிடும் பிறப்பே!..........12

***

Thursday, November 19, 2009

அன்பை அறிவோம்!

அன்பை அறிவோம்!


வலியவரும் எளியவர்முன்
         மண்டியிடும் மந்திரமும்
வீழ்த்தவரும் வேங்கையரும்
         தாழ்ந்துவிடும் தந்திரமும்
அறிவுடை மேதையரும்
         அண்டிவரும் விந்தையதும்

இன்பமுற இன்னுயிர்கள்
         ஈண்டுதமை நாடுவதும்
அன்புநெறி மாந்தர்பெரு
         வாழ்வுநிலை கூடுவதும்
அன்புதரு இன்பநிலை!
         இயற்கையது ஐயமிலை!

யாவரையும் அன்புநிறை
         ஆதரவில் பேணிவரின்
கோபமும் அற்றுவிடும்
         குறைகளும் இற்றுவிடும்
பைத்தியம் தெளிவாகும்
         பார்வைகள் விரிவாகும்

கல்லும் கரைந்துவிடும்
         காளையும் மடிதுயிலும்
நல்லவழிச் சாலைதேடி
         அல்லவையும் ஓடிவரும்
முள்ளும் மலராகும்
         முடிநாரும் மணமாகும்!

மண்ணில் பிறக்கையில்
         யாவரும் கேடில்லை;
அன்பைப் பெருக்கிவிடின்
         யாவதும் கேடில்லை;
அன்பே இறையாகும்
         அறிவோம் நலமாகும்!

இன்பமும் துன்பமும்
         அன்பின் விளைச்சலே
உள்ளம் சுரக்கும்
         உணர்வுக் கரைசலே
அன்பேநம் அறிவும்;
         அனைத்தும் அஃதே!

***

Wednesday, June 24, 2009

சுழற்சி

சுழற்சி


தன்னை விடச் சிறிய
மீனை விழுங்கிக்
கொண்டிருக்கும் மீன்
இன்னும்
உணரவே இல்லை
தான் நீந்திக் கொண்டிருப்பது
இன்னொரு
மீனின் வாயில் என்பதை...

என் கண்ணின்
மணியில் நீ
உன் கண்ணின்
மணியில் நான்
மீண்டும் உள்ளே
உள்ளே மீண்டும் ...

புகைப்படக் கருவியை
வைத்துக் கொண்டு
ரகசியமாய் நான்
அவனைப் படம் பிடிக்க
எனக்குப் பின்னால்
இன்னொருவன் என்னை
அவனுக்குப் பின்னால்
இன்னொருவன் அவனை...
அட நான் படம் பிடிப்பவனும்
யாரையோ படம்பிடிக்க..
அடச்சே கடைசியில்தான்
தெரிந்தது அந்த
அவன் தான் அவன்...

யாரையோ,
எதையோ தேடி
ஓடுகையில்
ஒருவன் அல்லது எதுவோ
துரத்துவதும்
இது தானோ...

பூமி
சூரியனைச் சுற்றி
சுழன்று கொண்டே
இருக்கிறது தன்
நீள் வட்டப் பாதையில்
சந்திரன் பூமியை...
எதைத் தேடி?

***



நம் தமிழ் நாடு

நம் தமிழ் நாடு

  
அரசின் இலச்சினை கோயில் கோபுரம்;
ஆட்சியர் மட்டும் நாத்திகர் கூட்டம்!
வந்தவர்க்கு எல்லாம் வாழ்வு நிச்சயம்;
சென்றவர் மாத்திரம் பிச்சைப் பாத்திரம்!

ஆலயம் கூட்டம்; ஆத்திகம் கூட்டம்;
குதர்க்கர் கூட்டம்; கூத்தியர் கூட்டம்;
ஆட்டம் பாட்டம்; அனைத்திலும் நாட்டம்;
கூடுவது ஒன்றே குறைவிலா இன்பம்!?

சித்தர் சைவர் புத்தர் வைணவர்
சாக்கியச் சமணர் இயேசு அல்லா
எல்லாம் இங்கே ஒன்றாய் நிற்கும்;
கோயில் நாடு நம்தமிழ் நாடு!

வடவன் மொழியை வாழ வைத்ததும்;
பரங்கி ஆட்சியை அழகு பார்த்ததும்;
தமிழன் அன்றேல் தலைமை தருவதும்;
தமிழ் என்றாலே உயிரைத் தருவதும்;

"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
உரைத்த பொய்க்கே வாக்கைத் தருவதும்;
தலையைத் தடவி மொட்டை அடிக்கும்
ஆள்வோர் கூட்டம் வாழ்க்கை பெறுவதும்;

உதிரம் விற்று உடலை வளர்க்கும்
கலையிது வென்றே காட்டிய நாடு!
தொலைக் காட்சியாலே உறவை அறுத்து
உணர்வை மறந்த நம்தமிழ் நாடு!

நங்கையர் அழகில் பல்லை இளிக்கவும்
மங்கையர் நடிகையர் கோயில் செய்யவும்;
இலவசம் கொண்டு இன்பம் உய்யவும்;
இரப்பவர் கண்டு ஈகை செய்யவும்;

நாட்டைக் காக்க வீட்டைத் துறக்கவும்;
உடமை காக்க படையைச் சாரவும்
உழைத்தே உண்ணவும்; உறுதி கொள்ளவும்;
உயிரைப் பிறர்க்கே தியாகம் செய்யவும்;

அகமும் புறமும் ஒருங்கே பேசி
அழகை அறிவை பழங்கதை ஆக்கி
நடக்கும் வாழ்வை கடத்தும் ஆற்றலை
படைத்தே சிறக்கும் நம்தமிழ் நாடு!

பிச்சைக் காரரும் பெருந்தனக் காரரும்;
கொடைதருங் கடைஏழ் வள்ளரும்; அல்லரும்;
கொள்ளை அடித்தே பிள்ளை வளர்க்கும்
அருமை அரசும்; கருணை நிதியும்;

அறிவில் முதிர்ந்த அறிஞர் பலரும்;
அரைவேக் காட்டில் தன் உணர்வன்றி
தத்துவம் உதிர்க்கும் எத்தரும் பித்தரும்
கைகளைத் தட்டும் மடையரும் மாக்களும்;

குறைகள் மறந்து நிறைந்த நெஞ்சில்
கூடியே வாழும் மாந்தர்தம் கூட்டம்;
குறையோ நிறையோ; மாறு பாடுகளின்
மொத்த உச்சமே நம்தமிழ் நாடு!
 
***

சந்தேகம்


சந்தேகம்



தக்‌ஷிணா மூர்த்தி
நஞ்சுண்ட கண்டன்
தென்னாடுடைய சிவனாய்
என்னாளும் இருக்கிறார்...
அமிர்தம் உண்ட
தேவர்களெல்லாம் எங்கே?
மண்ணுலகை விடுத்து
விண்ணுலகில் தான்
சாவாமல் வாழ்கிறார்களோ?


கொல்வதும் நானே
கொல்லப்படுவதும் நானே
என்னை நம்பி
”அம்பைத் தொடு, அடி”
என்று சொன்ன
கண்ணனும் ஒருநாள்
செத்தே போனான்;
கதை கேட்ட
பக்கத்து வீட்டு
அலமு கேட்டாள்
மாமா
ஒரு சந்தேகம்
செத்துப்போன கண்ணனுக்கு
சொர்க்கமா, நரகமா?

***

அப்பா

அப்பா


அப்பா...
அண்ணனுக்கும் நீதான்
அப்பாவாம்
ஆனால் அவன் ஒரிஜினலாம்
நான் மட்டும் டூப்ளிகேட்டாம்
ஏன் அப்பா
அம்மாவை நீ கல்யாணம்
பண்ணிக் கொள்ளவில்லை?
அம்மாவுக்கு வேணும்னா ஓகே
எனக்கு எல்லா இடத்துலயும்
அவமானமா இருந்தாலும் கூட
உங்க மகள்னு சொல்லிக்க மட்டும்
நான் வெட்கப்பட்டதே இல்லை
அப்பா...

நீங்கள்
ஸ்விஸ்ல பணம் போட்டாலும்
எனக்கு MP சீட் வாங்கித்
தந்தாலும்
"அம்மாவின்” மகள்ங்கிறது
மட்டும் போகவே போகாது ...
அதுக்காகத்தான்
நான்
என் புள்ளைய
அப்பனே தெரியாம
வளர்க்கப் போறேம் பா!

***

Monday, June 22, 2009

குருவிக் கூடு


குருவிக் கூடு


குருவி ஒன்று வீடு கட்டிக்
கொண்டிருந்தது
கூடத்துச மேல் சாளரத்தில்...

தேடிப் பிடித்து ஒரு
மூங்கில் கழியாலதைக் கலைத்துவிட
இளசு ஒன்று எத்தனிக்க

வீட்டுப் பெரிசு சொன்னார்
குருவிக் கூட்டைக் கலைக்காதே
உனக்கு வாரிசு இல்லாமல்
போய்விடும்...

விட்டுவிட்டது இளசு...

வாரிசுப் பயமா? மனித நேயமா?
இளசா? பெருசா?
எதுவோ ஒன்று... இல்லை எல்லாம்...

அங்கே இன்று
குருவிக்கூடு
அங்கீகரிக்கப் பட்டு விட்டது...

எதையும் அறியாக் குருவி மட்டும்
இன்னும் சிரத்தையாய்
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது

நெஞ்சுக்குள்ளே ஒரு புதுச் சொந்தம்
சுவாசித்த காற்றில் சுதந்திரம்
இன்றைய இளங்காலை
ஓர் இனிமை மிக்க ஆரம்பம்...


***


Saturday, June 20, 2009

எதிர்பார்ப்புக்கள்...


(எண்பதுகளில் எழுதியது. 85ஆக இருக்கலாம்! நடு வரிகள் மறந்து போயிற்று... மறுபடியும் எப்படியோ ஒப்பேத்தி இருக்கேன்!)



எதிர்பார்ப்புக்கள்...

ஏடு எடுத்துப் படிச்சதில்ல
         எளச்சிப் போயி படுத்ததில்ல
மாடு பத்தித் திரிஞ்சவந்தாண்டி - என் மச்சான்
         மனசுக்குள்ள வெத வெதச்சாண்டி!

சீமைக்கும் போனது இல்ல
         செவத்த மேனி கருத்ததில்ல
பானக் கள்ளு குடிச்சவந்தாண்டி - என் மச்சான்
         பழைய கஞ்சி குடிச்சவந்தாண்டி!

மாடிவீட்டு மதுர சனம்
         யாழ்ப் பாணம் போறமுங்க
மச்சினியக் கூட்டிப் போனாக - என் மச்சான்
         மனசத்தானே கூட்டிப் போனாக!

ஊரு பாக்க போறமுன்னு
         போனமாசம் போன தங்கை
மாருகாட்டி மாண்டு போனாளாம் - ஐயோ
         மானத்துக்கே உயிர விட்டாளாம்!

சிங்கள ராணு வத்தான்
         சின்னவள செதற வைச்சு
நெஞ்சங்களப் பதற வைச்சானே! - எங்கள்
         நிம்மதியக் கொதறி வைச்சானே!

அன்னிய தேசம் தேடி
         அனியாயச் சாவுக்குத் தான்
ஆண்டவன் அனுப்பி வைச்சானா? - இல்ல அவுக
         அழியத்தான் தொடக்கி வைச்சானா?

எம்புட்டு அழுது என்ன
         எந்தச்சாமி தொழுது என்ன
செத்தவ வரவே இல்லியே! - என் மச்சான
         தேத்தத்தான் வார்த்தை வல்லியே!

சீவி வரும் வாளெடுத்து
         சிலம்பு சுத்தும் கம்பெடுத்து
சிங்கம் போல கெளம்பிப் போறாண்டி - என் மச்சான்
         சிங்களத்தை அழிக்கப் போறாண்டி!

மாரி அம்மன் படையலிட்டு
         மரிக் கொழுந்துப் பந்தலிட்டு
தெருவெல்லம் அலங்கரிப்பேண்டி! - என் மச்சான்
         திரும்பி வரக் காத்திருப்பேண்டி!

***

Friday, June 19, 2009

ஐவருக்கும் காதலன்

ஐவருக்கும் காதலன்


நிலம்:
பச்சைப் பட்டுடுத்திப்
பாதிக் கண்மூடி
நாணித் தலை குனிந்தாய்
நங்கையே
எந்த
நிலம் நோக்கி?


நீர்:
வெள்ளை உள்ளத்தை
வெள்ளமே நீ காட்டுகின்றாய்
உன்னையே பார்த்தாலும்
என்னையே நீ காட்டுகின்றாய்
தண்மை அன்பை
தரணிக்கே நீ ஊட்டுகின்றாய்!
தண்ணீரே அறிவாயா
நீரின்றி நானில்லை...


நெருப்பு:
உலகுக்கு நீ வேண்டும்
உணவுக்கு நீ வேண்டும்
உயிராக நீ வேண்டும்
உளத்தே நீ வேண்டும்
மழையாக்க நீ வேண்டும்
ஒளியாக்க நீ வேண்டும்
குளிரோட்ட நீ வேண்டும்
எரியூட்ட நீ வேண்டும்

மயக்கத்தைத் தோலுரிக்க
இணக்கமாய் நீ வேண்டும்
தயக்கத்தை வேறருக்க
இயக்கமாய் நீ வேண்டும்!
நெஞ்சத்தில் நீ இருந்தால்
அஞ்சாதோ எதிரணியும்
மஞ்சத்தில் வந்தமர்ந்தால்
பற்றாதோ மனமிரண்டும்

ஆன்ம ஜோதியாய்
அகத்தே இருளகற்றி
பொருப்பாக இருப்பாயா?
நெருப்பான என்கண்ணே?


காற்று:
தேகத்தே உயிர்தரிக்க
தேவை திடப்பொருள்(?) நீ...
தென்றல் என்றாலும்
தேகமே உன்பொருள் காண்!

ஆனவை ஏதிருந்தும்
அத்தனையும் வீணே காண்
சுவாசமிலாதே நான்
சுகிப்பது ஏதும் உண்டோ?

ஒலியென நீ அல்லால்
உரைத்திட மொழி ஏது?
அலையென நீ அல்லால்
அழைத்திட வழி ஏது?

ஆகாயம்:
நெஞ்சில் சிறகடித்து உன்
நினைவாய் இருக்கையிலே
பஞ்சாய் பறக்குதடி மனம்
பரிவட்டம் கொள்ளுதடி...

அண்ட வெளியிடையே மனம்
ஆனந்தக் களிப்பிடையே
வண்டாய் பறக்கையிலே வானம்
வசப்பட்டு இனிக்குதடி...

துள்ளிக் குதிக்குதடி தோழி
தொடரும் பெருவெளியில்
எல்லை காணாதே மனம்
ஏகிக் களிக்குதடி...

***

கலைமகள் என்ன விலைமகளா?

கருணாநிதிக்கு நோபல் பரிசு...

செய்தி: /////தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.

இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:
1. கவிப்பேரரசு வைரமுத்து
2. அகத்தியலிங்கம்
3. மருதநாயகம்
4. வி.முருகன்
5. பி.கே.பழனிச்சாமி
6. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
7. ரமணி
8. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
9. கயல் விழி
10. எம்.ரவிச்சந்திரன்
11. சி.சிவசண்முகம்
கருணாநிதியின் எழுத்துகளை (கவிதைகள், கட்டுரைகள், [முரசொலிக்?] கடிதங்கள்) பாரதியார் பல்கலைக்கழகம் மொழிமாற்றி வெளியிடுமாம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/07/07/stories/2008070759541000.htm
///////////////

கருணாநிதிக்கு நோபல் பரிசு….

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்
கிழவனைத் தூக்கி
மணையிலே வைன்னாங்களாம்…. :) :) :)

அதற்காக:



கலைமகள் என்ன விலைமகளா?


தத்தென்று பித்தென்று
       தமிழிலே எழுதினால்
              தத்துவம் ஆகி விடுமா?

பத்து இலட்சத்தில்
        பலர்கூடிப் பிதற்றினால்
               முத்தாக மாறி விடுமா?


சத்தில்லா சொற்றொடரும்
        தரமற்ற கவிதையும்
               சங்கத்தமிழ் ஆகி விடுமா?

பித்தளை ஈயம்
        பெருங்காயப் பாத்திரம்
               தங்கமென்று தேறி விடுமா?


எத்தனை காலத்து
        இலக்கிய மரபுகள்
               முத்தமிழ் கற்றுத் தருமா?

இத்ததும் பீத்ததும்
        இன்றையச் சொத்தென்று
               செந்தமிழ் செத்து விடுமா?


நயமற்ற கவிதையை
        மொழிமாற்றுச் செய்தாலே
               நல்லவை ஆகி விடுமா?

சுயமற்ற உளரலைச்
        சுகமான பொருளென்று
               சொன்னாலே விற்று விடுமா?


பாவாடை மேலாடை
        தூக்கியே பார்த்திட
               ஆங்கிலம் பொருள் தருமா?

பதைக்கின்ற செயலெலாம்
        பரவசம் எனக்கூற
               பாவலற்கு மனம் வருமா?


சுவையற்ற இயம்பலும்
        சொதப்பிய பிதற்றலும்
               தமிழ் கொல்லும் தரித்திரமே!

கலையற்ற பொருளினைத்
        தமிழின் அழகென்றால்
               பழி சொல்லும் சரித்திரமே!


பண்கெட்ட பாட்டினை
        பைத்தியக் கூத்தினை
              பாருக்குத் தமிழ் தருமா?

கண்கெட்ட குருடர்கள்
        கலையது என்பார்கள்
               கலைமாது விலைக்கு ஆகுமா?


காசுக்கு நோபலை
        யாரேனும் விற்றாலே
               கருணா நிதிக்குக் கிட்டும்!

கலைமகள் வாயின்றி
        கதறி அழும்போது
               கண்ணீரில் இரத்தம் கொட்டும்!


பாகம்: 2

ஏதுக்கும் தேறாத
        கூவத்துக் குப்பையை
               இலக்கியம் என்று மொழியவோ?

இதுவரை தாழாத
        தமிழன்னைக் குடில்மீது
               எல்லாரும் வந்து உமிழவோ?


யாசித்த பொருளதை
        யாருக்கும் தெரியாமல்
               நோபலுக்குப் பரிந்து உரைக்கவோ?

யோசிக்கத் திறமின்றி
        இருளிலே சுட்டதை
               பாருக்குத் திரிந்து உரைக்கவோ?


கன்னலே செந்தமிழே
        கற்கண்டே தேன்பாகே
               கருணைக்கு அளவு இல்லையோ?

கருத்தையே திருடினும்
        கருப்பையைச் சுருட்டினும்
               பொறுமைக்கு எல்லை இல்லையோ?


இதுவரைப் படைத்திட்ட
        இலக்கியம் யாதுக்கும்
               பரிசுக்குத் தகுதி இல்லையோ?

இவரன்றித் தமிழிலே
        இதுகாறும் பரிசிலுக்கு
               யாரேனும் பிறக்க வில்லையோ?


சூதுக்கும் வாதுக்கும்
        சூலாகிப் பெற்றதெலாம்
               சூத்திரம் சொல்லுதே அங்கே...

யாதுக்கும் தேறாத
        சாத்திரம் ஈதென்று
               சத்தியம் செய்வோம் இங்கே...


கற்பனை எல்லாம்
        விற்பனைக்கு என்றே
               கடைதனில் கிடைப்பதே போல்

கலைக்கான நோபலும்
        காவியப் பரிசிலும்
               காசுக்குச் சிக்கி விடுமோ?


மாசிலா மொழியென
        மாணிக்கச் சிலையென
               மாதவ மங்கை நல்லாள்;

ஏதமிலா மாதவள்
        இலக்கியக் கலைமகள்
               இதயத்தே ஏதோ சொன்னாள்...


இன்னும் உயிரோடு
        இருப்பது எதற்கென்று
               இயம்புக என மொழிந்தாள்!

இறந்திடத் துணிந்தேன்
        இஃதொன்றே போதும்
               என்றே தான் பொழிந்தாள்!

***


இருளில் ஒளி?


இருளில் ஒளி?


மீண்டும்
ஒரு
தீக்குச்சியைப் பற்ற வைத்து
என் இருண்ட வீட்டிற்குள்…
தேடிய போதுதான்
தெரிந்தது
எஞ்சியிருந்த
எனது
ஒரே ஒரு
மெழுகுவர்த்தியையும்
யாரோ
திருடி விட்டார்கள்…
தீர்மானித்து விட்டேன்
இனி தீக்குச்சிகளே
தேவையில்லை என்று…
ஆம்
எரிவதற்கு என்னிடம்
இனி
என்ன இருக்கிறது?
என்னைத் தவிர…

இருளைப் பழகிய கண்கள்
உடைந்து போன
உடல் பாகங்களுக்கு
உத்தேசமாகத் தடவிக்
கொடுக்க
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னும்…

இப்போது உயிருக்கென்ன
உணவா தேவை?
கண்களை மூடினாலும்
கனவுகள் உறங்கவில்லை…
உலகமே ஒருங்கி உடைத்தது
என் உடலை மட்டுந்தானே?
உளத்துக்குள் இன்னும்
ஒளி தெரிகிறதே…
மரணம் தூரமாம்
மனது சொன்னது
ரணங்கள் ஆறட்டும்…

எங்கோ தெரியும்
வெளிச்சப் புள்ளி
விடியலைச் சத்தியம் என்றது…

தூங்கும்போதும்
இன்னும்
நான்
சுவாசித்துக் கொண்டுதான்
இருக்கிறேன்…


***

நிலமகள்

நிலமகள்!

பச்சைப் பட்டு உடுத்தி
     பாதிக் கண் மூடி
இச்சை தரும் எழிலாய்
     இயற்கை நகை செய்வாய்!

வானிற் கோலந் தன்னை
     வளைந்தே வரைவது போல்
நாணித் தலை குனிந்தாய்
     நங்கையே எந்தநிலம் நோக்கி?

சுட்டும் கதிரவனைத் தினம்
     சுழன்று தனை மறந்தே
வட்டம் போடுவது ஏன்
     வருடம் கழிவதும் ஏன்?

எட்டும் தூரத்திலே நிலவு
     ஏங்கித் தவிக்கிறதே! நின்னை
வட்டம் அடித்தேயது தன்
     வாழ்வைக் களிப்பதும் ஏன்?

திங்கள் ஓர் முறையில்
     தேய்ந்து வளரும் மதி
பொங்கும் முழு அமுதாய்
     பொழிந்துபின் உருக் கரையும்...

ஏதுக்குக் காலம் எல்லாம்
     ஏகவழிப் பாதை யதில்
தூதுக்கும் யாரும் இன்றி
     தொடர்ந்தே காதல் செய்வீர்

மேதினி முழுவதுமே கொட்டி
     மின்னிடும் வைரங்கள் போல்
மேகத்து வெளியிலெலாம் வெள்ளி
     மீன்களின் கண் அடிப்போ?

கடலில் அலை காற்றில்
     கதிர் கனலொடு புனலுமதில்
நடனமே ஆடுகிறாய் நங்கை
     நாளும் பொழுது எல்லாம்!

வெம்மை ஆகுதியோ மேனி
     வேகும் வேள்விப் போதினிலே?
தம்மைத் தழுவிச் சீரமைக்க
     தாரை மழை பெய்குவதோ?

தெய்வத் தீர்த்தமதோ இரவில்
     தெளிக்கும் பனித் துளிகள்?
மெய்யைத் துலக்கவோ அருகில்
     மேகப் பஞ்சுத் திரள்?

அண்டப் பெரு வழியே
     ஆடும் நாயகியே; உந்தன்
கண்டக் குரல் ஒலிதான்
     கனிந்த பிரணவஓ மதுவாம்!

உடலும் எமக்குத் தந்து
     உயிர் அதிலே பொதிந்து
கடமையில் உணவு ஈந்து
     கருணையில் வாழ்வு வைத்தாய்!

ஆக்கி ஆட்டுவித்து எம்மை
     அன்பில் அரவணைத்தே, நித்தம்
தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
     தூங்கவும் வைக்கின்றாய்; அம்மா!

நாடகம் முடிந்தபின் தன்னுள்
     நலமுடன் ஒடுங்கவைத்தே எமக்கு
பாடமும் புகட்டுகின்றாய்; தாயே
     பரம ஞானமும் ஊட்டுகின்றாய்!

அறிவுத் திருமகளே! எங்கள்
     அன்புப் புவி மகளே!
அருமைத் தலைமகளே! எங்கள்
     அன்னை நில மகளே!
 
***