Wednesday, June 24, 2009

நம் தமிழ் நாடு

நம் தமிழ் நாடு

  
அரசின் இலச்சினை கோயில் கோபுரம்;
ஆட்சியர் மட்டும் நாத்திகர் கூட்டம்!
வந்தவர்க்கு எல்லாம் வாழ்வு நிச்சயம்;
சென்றவர் மாத்திரம் பிச்சைப் பாத்திரம்!

ஆலயம் கூட்டம்; ஆத்திகம் கூட்டம்;
குதர்க்கர் கூட்டம்; கூத்தியர் கூட்டம்;
ஆட்டம் பாட்டம்; அனைத்திலும் நாட்டம்;
கூடுவது ஒன்றே குறைவிலா இன்பம்!?

சித்தர் சைவர் புத்தர் வைணவர்
சாக்கியச் சமணர் இயேசு அல்லா
எல்லாம் இங்கே ஒன்றாய் நிற்கும்;
கோயில் நாடு நம்தமிழ் நாடு!

வடவன் மொழியை வாழ வைத்ததும்;
பரங்கி ஆட்சியை அழகு பார்த்ததும்;
தமிழன் அன்றேல் தலைமை தருவதும்;
தமிழ் என்றாலே உயிரைத் தருவதும்;

"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
உரைத்த பொய்க்கே வாக்கைத் தருவதும்;
தலையைத் தடவி மொட்டை அடிக்கும்
ஆள்வோர் கூட்டம் வாழ்க்கை பெறுவதும்;

உதிரம் விற்று உடலை வளர்க்கும்
கலையிது வென்றே காட்டிய நாடு!
தொலைக் காட்சியாலே உறவை அறுத்து
உணர்வை மறந்த நம்தமிழ் நாடு!

நங்கையர் அழகில் பல்லை இளிக்கவும்
மங்கையர் நடிகையர் கோயில் செய்யவும்;
இலவசம் கொண்டு இன்பம் உய்யவும்;
இரப்பவர் கண்டு ஈகை செய்யவும்;

நாட்டைக் காக்க வீட்டைத் துறக்கவும்;
உடமை காக்க படையைச் சாரவும்
உழைத்தே உண்ணவும்; உறுதி கொள்ளவும்;
உயிரைப் பிறர்க்கே தியாகம் செய்யவும்;

அகமும் புறமும் ஒருங்கே பேசி
அழகை அறிவை பழங்கதை ஆக்கி
நடக்கும் வாழ்வை கடத்தும் ஆற்றலை
படைத்தே சிறக்கும் நம்தமிழ் நாடு!

பிச்சைக் காரரும் பெருந்தனக் காரரும்;
கொடைதருங் கடைஏழ் வள்ளரும்; அல்லரும்;
கொள்ளை அடித்தே பிள்ளை வளர்க்கும்
அருமை அரசும்; கருணை நிதியும்;

அறிவில் முதிர்ந்த அறிஞர் பலரும்;
அரைவேக் காட்டில் தன் உணர்வன்றி
தத்துவம் உதிர்க்கும் எத்தரும் பித்தரும்
கைகளைத் தட்டும் மடையரும் மாக்களும்;

குறைகள் மறந்து நிறைந்த நெஞ்சில்
கூடியே வாழும் மாந்தர்தம் கூட்டம்;
குறையோ நிறையோ; மாறு பாடுகளின்
மொத்த உச்சமே நம்தமிழ் நாடு!
 
***

No comments:

Post a Comment