Showing posts with label எதிர்பார்ப்புக்கள். Show all posts
Showing posts with label எதிர்பார்ப்புக்கள். Show all posts

Saturday, June 20, 2009

எதிர்பார்ப்புக்கள்...


(எண்பதுகளில் எழுதியது. 85ஆக இருக்கலாம்! நடு வரிகள் மறந்து போயிற்று... மறுபடியும் எப்படியோ ஒப்பேத்தி இருக்கேன்!)



எதிர்பார்ப்புக்கள்...

ஏடு எடுத்துப் படிச்சதில்ல
         எளச்சிப் போயி படுத்ததில்ல
மாடு பத்தித் திரிஞ்சவந்தாண்டி - என் மச்சான்
         மனசுக்குள்ள வெத வெதச்சாண்டி!

சீமைக்கும் போனது இல்ல
         செவத்த மேனி கருத்ததில்ல
பானக் கள்ளு குடிச்சவந்தாண்டி - என் மச்சான்
         பழைய கஞ்சி குடிச்சவந்தாண்டி!

மாடிவீட்டு மதுர சனம்
         யாழ்ப் பாணம் போறமுங்க
மச்சினியக் கூட்டிப் போனாக - என் மச்சான்
         மனசத்தானே கூட்டிப் போனாக!

ஊரு பாக்க போறமுன்னு
         போனமாசம் போன தங்கை
மாருகாட்டி மாண்டு போனாளாம் - ஐயோ
         மானத்துக்கே உயிர விட்டாளாம்!

சிங்கள ராணு வத்தான்
         சின்னவள செதற வைச்சு
நெஞ்சங்களப் பதற வைச்சானே! - எங்கள்
         நிம்மதியக் கொதறி வைச்சானே!

அன்னிய தேசம் தேடி
         அனியாயச் சாவுக்குத் தான்
ஆண்டவன் அனுப்பி வைச்சானா? - இல்ல அவுக
         அழியத்தான் தொடக்கி வைச்சானா?

எம்புட்டு அழுது என்ன
         எந்தச்சாமி தொழுது என்ன
செத்தவ வரவே இல்லியே! - என் மச்சான
         தேத்தத்தான் வார்த்தை வல்லியே!

சீவி வரும் வாளெடுத்து
         சிலம்பு சுத்தும் கம்பெடுத்து
சிங்கம் போல கெளம்பிப் போறாண்டி - என் மச்சான்
         சிங்களத்தை அழிக்கப் போறாண்டி!

மாரி அம்மன் படையலிட்டு
         மரிக் கொழுந்துப் பந்தலிட்டு
தெருவெல்லம் அலங்கரிப்பேண்டி! - என் மச்சான்
         திரும்பி வரக் காத்திருப்பேண்டி!

***