Friday, November 20, 2009

உலகத்தொடு ஒன்றா மடமை...

இயற்கை ஒவ்வா; அறிவு பொருந்தா;
இணைவரு மனிதரும் இணங்காச் செயலால்
பழித்தவை கழித்தவை ஒளித்துச் சுகித்து
உதவா வழியினில் உருப்படாது ஏகி
உணர்வும் நலனும் இலாதாது ஆகி
இதமிலா விதண்டா வாதமும் பேசி........................1

காலம் பொருளைப் பாழென வாக்கி
கற்றவர் மற்றவர் உற்றவர் கரித்து
யாரும் போகா ஊரினைத் தேடி
தீதை ரசித்து; திகட்டலை ருசித்து
சிந்தனை குழம்பி; சோம்பரில் உழம்பி
ஒழுக்கம் கெடுத்து; உபத்திரம் கொடுத்து..............2

சுயநலம் பேணி; சொல்லினைப் புரட்டி;
தெய்வம் இகழ்ந்து; தீதினைப் புகழ்ந்து
அல்லவை எல்லாம் நல்லெனக் கூறி
அறிவு மழுங்கி; ஆணவம் பெருக்கி
அரை குறை அறிவை ஆனந்தித்து
அறிந்தன பகர அறிவிலி தேடி................................3

கலைகளைப் பழித்து; சிலைகளை அழித்து
அழகினைச் சிதைத்து; அழுக்கினை ரசித்து
கயமை உகந்து நிதியம் தேடி
சூட்சியில் ஆளும் மாட்சிமை காட்டி
விடியா இரவு; பொருந்தா உறவு;
இதயம் கறுத்து; சுதந்திரம் வெறுத்து......................4

கற்பைத் துப்பி; எச்சிலை நக்கி
தாயைத் தமிழைத் தரணியைத் தாழ்த்தி
கருமிப் பொருமி இலாவணி பாடி
தரித்திர விளக்கில் சரித்திரம் படித்து
குற்றப் பரம்பரைத் தொட்டுத் துலங்க
சாத்திரம் மருவி சூத்திரம் எழுதி..............................5

ஆத்திரம் மூத்திரம் அனைத்திலும் உழண்டு
அறிவும் அகமும் அறவே கழண்டு
சோத்துத் துருத்தியாய் நாற்றப் பிண்டமாய்
பகலில் இருளைத் தேடும் முண்டமாய்
வந்து விழுந்த சில்லறை கொண்டு
வருகிற சில்லறை மனிதரில் மருண்டு....................6

உருண்டு திரண்டு உள்ளம் பிரண்டு
உற்றவர் மற்றவர் கண்டு மிரண்டு
நெஞ்சம் புலம்பி, நெடுவழி நோக்கி
பொய்யும் புரட்டும் மொய்யென வைத்து
கைத்தடி ஏந்திக் கைத்தலம் பற்ற
வைதவர் நொய்தவர் வல்லமை கொள்ள...............7

விடலை இளைஞரின் வெற்றி வெறுத்து
வஞ்சப் புகழ்ச்சியில் நொந்து படுத்து
ஆப்பிடைக் குரங்காய் அரங்கம் பிதற்றி
காப்போம் பொருளெனக் கதறித் துடித்து
திரண்ட திரவியம் புரட்டிச் சுருட்டி
தேறிய வரையில் இலாபம் பார்த்து........................8

சுடலைப் பயத்தில் சுருண்டு படுத்து
சோகித்துச் சுகித்து சொந்தங்கள் சபித்து
கண்டவை கேட்டவை அனைத்தும் வெறுத்து
காண்பவை எல்லாம் கரித்து முடித்து
தீதையும் சூதையும் போதனை செய்து
தீராப் பிளவினை நெஞ்சினில் தேக்கி.........................9

மூத்த குடியை முத்தமிழ் மரபை;
அள்ளக் குறையா ஐம்பெரும் காவியம்
சொல்லும் அழகை; கன்னற் தமிழை;
கண்ணகி மாதவி கற்பின் திறத்தை
வள்ளுவச் சிறப்பை கம்பனின் அழகை
பண்டு சொன்ன பாரதி தீரத்தை.............................10

இன்னற் செய்து; இழிவு படுத்தி;
அரைகுறைப் பொதுமை நிறைவுறப் பேசி
கோணற் புத்தியில் கொள்கை வடித்து
நெஞ்சம் இருண்டு நீர்மேல் எழுத்தாய்
நேர்மை நில்லா பேதமை உரைத்து
கருமை நாடகம் மேலுறக் களித்து..........................11

ஒழுக்கிய நீரினில் மீன்வலை வீசி
ஒழுகிடும் வாழ்வினை உயர்வெனப் பேசி
இழவினைச் சுகிக்கும் இழிவுறு பிறப்பாய்
கழுகாய்ப் பருந்தாய் பிணத்தினை உவந்தே
புழுத்த நரகலைப் புசித்துக் கொழுக்கும்
விலங்காய் வாழ்வை விளங்கிடும் பிறப்பே!..........12

***

4 comments:

  1. நாட்டாமைDecember 23, 2009 at 8:58 PM

    ராமசாமியின் குணத்தை, வாழ்க்கையை பாராட்டி எழுதிய இந்த கவிதையால் தமிழ் தண்டித்து விட்டது, ஆனாலும் இதில் ஒரேஒரு வரி பொருந்தாமல் உள்ளது.

    ’உறவுகள் பேணி ஓயாது அழுது’ என்ற வரி எதிர்மறையாக உள்ளது

    ReplyDelete
  2. நன்றி நாட்டாமை.

    சம்பாத்தித்தவை தமது குடும்ப உறவுக்கு மட்டுமே; மற்றும் மொழிந்தவை அனைத்தும் ஒயாத அழுகையாகவே பார்த்தேன்.

    எனினும் தாங்கள் குறிப்பிட்டுளது போல் அந்த வரி கவிதை ஓட்டத்தில் எதிர்மறையாகவே தோன்றியது உண்மையே. நன்றாகக் கவனித்துள்ளீர்கள். தவறினைத் திருத்தி உள்ளேன். கவிதையைச் செழுமை செய்த தங்களின் உதவிக்கு என்றும் கடப்பாடு உடையவன் ஆனேன். நன்றி.

    ”சுயநலம் பேணி; சொல்வது புரட்டி;” என்று மாற்றி உள்ளேன். இப்போது பொருத்தமாக உள்ளதா என்று சொல்லவும்.

    ReplyDelete
  3. நாட்டாமைDecember 30, 2009 at 11:18 AM

    உங்களுடைய கவிதைகள் மற்றும் திருக்குறள் விளக்கம் ஆகியவற்றை தொடர்ந்து படிக்கிறேன் ஆனால் கருத்துக்களை பதிய எனக்கு நேரமில்லை.

    உங்கள் கவிதைகள் அற்புதம். சரியான வாய்ப்பு கிட்டினால் புகழ் பரவும். முயற்சி செய்யுங்கள்.

    புத்தகம் வெளியிட முய்ற்சி செய்யுங்கள்.NHM (New Horizon Media Pvt Ltd) பதிப்பாளரை அணுகுங்கள்.

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நாட்டாமை.

    இன்னும் கொஞ்சம் சேர்ந்த பிறகு முயற்சிக்கிறேன். நன்றி.

    ReplyDelete