Tuesday, January 12, 2010

எச்சங்கள்

எச்சங்கள்


மனிதமோ காகமோ
அமிர்தமே உண்டாலும்
மலங்கள் மாத்திரம்
அழிவதேயில்லை!

கடையோ குடையோ
எதை விரித்தாலும்...
மரணித்த போழ்து
குடம் உடைத்தாலும்...
எச்சங்கள் மாத்திரம்
ஒழிவதேயில்லை!

மனிதப் படைப்பா
மதிப்பேயில்லை
புனிதமா புடலங்காயா?
காகத்துக்குச் சிலை
புறாவுக்குக் கோபுரம்!

இரக்கப்படும்
இயற்கையின் கண்ணீரா?
எச்சத்தைக்
கழுவிச் செல்ல
எப்போதோ சிந்தும்
சில மழைத் துளிகள்...

***

10 comments:

  1. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

    ReplyDelete
  3. அருமை!!

    எச்சங்களின் எச்சமாக இக்கவிதை வரிகள் அழகு!!

    ReplyDelete
  4. நன்றிகள் நண்பர் கோழிப்பையன் அவர்களே...

    உங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர் கலையரசன் அவர்களே.

    உங்களுக்கும் எனது இதய பூர்வமான தமிழர் திருநாட்களாகிய போகி, வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சங்கராந்தி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பாராட்டிற்கு நன்றி முனைவர். இரா.குணசீலன் அவர்களே,

    உங்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நண்பர்கள், வாசகர்கள், வருகை புரிந்துள்ளோர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழர் திருநாளாகிய நல் பொங்கல் நாட்கள் வாழ்த்துக்கள். உங்களது வாழ்வில் எல்லாம் நலன்களும் பொங்கிப் பெருகட்டும். பொங்கலோ பொங்கல்.

    ReplyDelete
  8. நாட்டாமைJanuary 17, 2010 at 8:04 AM

    அவசரமாக எழுதியதோ

    மனிதமோ காகமோ
    அமிர்தமே உண்டாலும்
    மலமாய் மாறி
    நாறத்தான் செய்யும்.

    இப்படியா?


    கடையோ குடையோ
    எதை விரித்தாலும்...
    மரணித்த போழ்து
    குடம் உடைத்தாலும்...
    எச்சங்கள் மாத்திரம்
    ஒழிவதேயில்லை!

    இது எப்படி?

    ReplyDelete
  9. @நாட்டாமை
    முதலில் உங்கள் கருத்து பதிவிற்கு நன்றி. தாமதத்திற்கு வருத்தங்கள்.

    முதலில் அனைவருக்கும் நடந்த விவாதம் பற்றித் தெரிய அறியத் தருவது கடமையாகிறது. அதாவது இந்தக் கவிதை ஆர்குட் தமிழ் குழுமத்தில் நடந்த சிலை எனும் கவிதைக்கு நடந்த கருத்துப் பதிவுகளில் வைக்கப்பட்டது.
    விபரங்களுக்கு அந்த இழையை கீழ்க்கண்ட இணைப்பில் கானவும்.
    http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5424383552902158010&na=2&nst=34

    இப்போது பதில்:

    //அவசரமாக எழுதியதோ

    மனிதமோ காகமோ
    அமிர்தமே உண்டாலும்
    மலமாய் மாறி
    நாறத்தான் செய்யும்.

    இப்படியா? //

    இல்லை. பொருள் அவ்விதமாகக் கொள்ளலாம் என்றாலும் இல்லை.

    அதாவது அந்த இழையிலேயே நான் புதுக்கவிதைக்கு வக்காலத்து அல்ல, புதுக்கவிதைகளின் வீச்சு பல பரிமாணங்களில் இருக்கலாம் என்பதைக் காட்டவே, என் வாதத்தையே கவிதையாக வைத்தேன். இங்கே குறைந்தது மூன்று பரிமாணங்களைப் பார்ப்போம். முதலில் எச்சம் என்பதற்குப் பொருள்: உண்மை, எச்சில், காரியம், குறை, சந்ததி, சேடம், பிள்ளை, மரணசாதன ஈவு, பறவையின் கழிவு, மலம் என்பதாகும்.

    1. இங்கே சொல்ல வரும் விடயம் சிந்திக்க வேண்டிய உண்மை. எப்படிப் பட்ட உணவைத் தின்றாலும் அதிலும் மல ஜலம் வருவது எப்படி? அதில் நீங்கள் குறிப்பிடும் அசிங்கம் உட்பொதிந்தாலும், எப்படி என்கின்ற ஆச்சரியம் இங்கே முக்கியம்.

    பட்டினத்தார். கோயில் திருஅகவல். 1, 11-25
    அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்
    உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்
    என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்
    பிறந்தன பிறந்தன பிறவிகள் தோன்றும்
    கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன
    தின்றனை அனைத்தும், அனைத்து நினைத் தின்றன
    பெற்றனை அனைத்தும், அனைட்து நினைப் பெற்றன
    ...
    சுவர்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
    இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை

    இதில் உண்ட உணவிலே மலமும் இருந்தது என்கிறார் பட்டினத்தார். இதே பாடலில் உள்ள ‘தின்றனை...’ தான், இன்றைக்கு கவிப்பேரரசு சொல்லும், மனிதா நாற்பது வயது வரை உணவை நீ உண்பாய், பிறகு உணவை உன்னை உண்ணும்’ என்னும் என்பதற்கும் மூலம்.

    கோணம் 1ன் விடயம், இயற்கைத் தத்துவம்: உயிர்களுக்கு மலங்கள் இல்லாத உணவு இருக்கிறதா? அது என்ன?

    2. இது ஆன்மீகத் தத்துவம்:
    உயிர்களுக்கு மூன்று மலங்கள். 1. ஆணவம், 2.மாயை 3. கன்மம், இதுவே திரிமலம் என்றும் வழங்கப்படும். இது பெரிய தத்துவம். உதாரணம் ‘இருவினை ஒப்பு மலபரி பாகம்’ எனும் தத்துவம். விரிவுக்கு அஞ்சி இவை சம்பந்தமாக வெறும் இரண்டு குறிப்புக்கள் மாத்திரம் தருகிறேன். (குறள் 5க்கான விரிப்பில் இதுபற்றி கொஞ்சம் காணலாம்)

    திருமந்திரம்: 1501
    இருவினை யொப்பில் இன்னருட்சத்தி
    குருவெனவந்து குணம் பல நீக்கித்
    தருமெனு ஞானத்தால் தன் செய்லற்று
    திரிமலந் தீர்ந்து சிவன வனாமே.

    குருஞான சம்பந்த ஸ்வாமிகள்:
    எப்போது மும்மலம்விட் டேறுவேன்? பூரணமாய்
    எப்போதுன் இன்பசுகத் தெய்துவேன்? எப்போதும்
    நித்தியா! சுத்தா! நிராமயா! சொற்றவறாச்
    சத்தியா! சொக்கநா தா! 12

    மலம் விளைக்கு முன்பதத்தி னாளவைப்ப தல்லால்
    மலம்விளைக்குஞ் சோறருந்த வைந்தாய் - சலம் விளைக்கும்
    சென்னியா! மாமதுரைச் செல்வா! எல் லாம்வல்ல
    தன்னியா! சொக்க நாதா! 18

    3. மூன்றாவவது கோணம்.இது இடம் பொருள் ஏவல் என்ப்படும் விடயத்தைக் கொண்ட வினயம்; எனக்கும் சேர்த்துத்தான். அதாவது மனிதர்களின் படைப்பின் மேல் நாம் சாணி அடித்து, எச்சில்களைத் துப்பி எச்சங்களை எறிகிறோம் எதற்காக? குறை சொல்லும் வழக்கம் படைக்கப்பட்டது அமிழ்தமாகவே இருந்தாலும் கூட மனிதர்களிடம் மறையயப் போவதில்லையே எனும் ஆதங்கம்.

    மற்றவற்றிற்கு இவ்வாறு மூன்று பரிமாணங்களையும் கொள்ளலாம். ஆனால் அதை நீங்களே அறிவீர்கள் என நம்புகின்றேன். ஆனால் சொல்லப்படாத மூன்றாவது கோணத்தை மட்டும் அந்த இழையிலே பதித்ததற்கான காரணத்திற்காக விவரிக்கின்றேன்.

    ReplyDelete
  10. //கடையோ குடையோ
    எதை விரித்தாலும்...
    மரணித்த போழ்து
    குடம் உடைத்தாலும்...
    எச்சங்கள் மாத்திரம்
    ஒழிவதேயில்லை!

    இது எப்படி?///

    ஆகக் கடையென்ன, குடையென்ன அதிலும் எச்சங்கள் விழத்தான் செய்கின்றன. ‘குடம் உடைப்பது’ எதற்காக? வாரிசுகள் உண்டு என்பதைக் காட்டும் சடங்கா? இல்லை. ஆக்கிப் பார்த்த குடம், மீண்டும் மண்ணாகிறதாம். சுட்ட மண், இயற்கை மண்ணோடு மக்க நாட்கள் ஆகலாம். மண்ணே பொன்னாகும் போது, கற்களே வைரங்கள் ஆகும் போது காலம் மண் குடத்தையும், மண்ணோடு நிச்சயம் ஒன்றச் செய்து விடும் ஒரு நாளில். நம்புவோம்.

    ~~~

    மனிதனின் படைப்புக்களா? காரியமா? யார் மதிக்கிறார்கள்? சிலையென்றோ, கோபுரமென்றோ, கடையென்றோ பறவைகள் வித்தியாசம் பார்ப்பதே இல்லை. கழித்து விட்டுப் போகின்றன. மனைதர்கள்? இது கூறாத பொருள்.
    (மூன்றாவது பரிமாணம்). மனிதரின் குறைகள்தான் இங்கே எச்சங்கள்.
    குறள்: 190
    ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்,
    தீதுஉண்டோ, மன்னும் உயிர்க்கு?
    (மற்றையோர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தைக் காணத்தெரிந்த பிறகு, தீது தான் உண்டோ, உயர்வுடைய உயிருக்கு?)

    [பறவைகள் கழித்த] எச்சத்தைக் கண்டுதான் இயற்கையின் கண்ணீரா? மழை. கழுவுகின்றனவே சில துளிகள்.
    குப்பைகளாகவும் எச்சங்களாகவும் பதிக்கும் புதுக்கவிதைகளுக்கும், விமரிசனங்களுக்கும் விமோசனமாக மரபுக் கவிதைகள் சில துளிகளாய், மழையாய் சில சமயங்களில். இதுவே இக்கவிதையின் மறை முகக் கருத்து.

    மரபுக் கவிதைகள் கட்டப்பட்ட மாலைகள். புதுக்கவிதைகள் பூங்கொத்துக்கள் (பொக்கேக்கள்). மரபில் அனைத்தையும் விளக்க வேண்டும். சில சமயங்களில் எதுகை, மோனை வரம்புகளில் சொல்ல வந்த கருத்து திசை திருப்பப் படலாமாம். ஆனால் புதுக்கவிதைகளில் இவ்வாறு பல கோணங்களில் வரைந்தால், வாசகனாகப் புரிந்து கொள்ள இடத்தை விட்டு, வேறு தளத்திற்கு இட்டுச் செல்லலாம் என்பதைக் கண்டேன்.

    அந்த இழையின் வாதம் சிலகைளைச் செதுக்காமல், அம்மி கொத்துகிறார்களே என்பது. எனது கருத்து அம்மியையாவது கொத்துகிறார்களே. ஒரு நாள் சிலையும் வடிக்கக் கூடும் என்பது. அவ்வளவே.

    உங்களின் நேரத்திற்கு உண்மையில் நன்றி.

    ReplyDelete