Tuesday, April 20, 2010

துன்பம் - ஐம்பது

துன்பம் - ஐம்பது


1. அன்பின்மை துன்பம்:
அன்பிலா மாந்தர் மண்ணில் துன்பம்;
     அவர்தம் கையால் உண்பதும் துன்பம்;
தெம்பிலா நெஞ்சால் தெளிவதும் துன்பம்;
     திடமிலா உடலால் விளைவதும் துன்பம்;
இன்பிலா வாழ்வும் வளமும் துன்பம்;
     இசைவிலாத் துணையும் மொழியும் துன்பம்;
முன்செலாத் தொழிலும் உழைப்பும் துன்பம்;
     முனைப்பிலா மனமும் தினமும் துன்பம்;

2. பொறாமை துன்பம்:
நம்பிக்கை சிதைக்கும் நண்பரும் துன்பம்;
     நன்றியை மறக்கும் அன்பரும் துன்பம்;
வம்பினை வளர்க்கும் வஞ்சகர் துன்பம்;
     வளத்தினைப் பொருமும் நெஞ்சகர் துன்பம்;
வெம்பியே கருக்கும் சொந்தம் துன்பம்;
     வேதனை பெருக்கும் பந்தம் துன்பம்;
தும்பினை விளைக்கும் போதனை துன்பம்;
     துடிப்பினைக் குலைக்கும் சோதனை துன்பம்;

(தும்பு = கறை, குற்றம்)

3. குறைகள் துன்பம்:
இங்கிதம் இல்லா மனிதரும் துன்பம்;
     இளமையில் வறுமை என்பதும் துன்பம்;
சங்கடப் படுத்தும் நிந்தனை துன்பம்;
     சஞ்சலப் படுத்தும் சிந்தனை துன்பம்;
பங்கிடை வைக்கும் பேதம் துன்பம்;
     பழமையை வைய்யும் வாதம் துன்பம்;
எங்கும் நிறைக்கும் மாசும் துன்பம்;
     எதிலும் தொலையாத் தூசும் துன்பம்;

4. விரிசல்கள் துன்பம்:
இம்சித்துத் தள்ளும் இல்லம் துன்பம்;
     இணக்கம் இல்லாச் சொல்லும் துன்பம்;
சம்மதம் இன்றிப் புணர்தலும் துன்பம்;
      சண்டை நிறைந்த இல்லறம் துன்பம்;
மமதை பெறுக்கும் மனையும் துன்பம்;
      மதிக்க மறுக்கும் துணையும் துன்பம்;
வமிசம் இல்லா வாழ்க்கை துன்பம்;
      வஞ்சகம் கொள்ளும் சேர்க்கை துன்பம்;

5. அழிவுகள் துன்பம்:
வழியினை அழித்து வாழுதல் துன்பம்;
     விழியினை இழந்து வீழுதல் துன்பம்;
இழிவினைக் கண்டு சகித்தல் துன்பம்;
     இழவினைக் கொண்டு சுகித்தல் துன்பம்;
அழிவினை பெருக்கும் யுத்தம் துன்பம்;
     அறவினை சருக்கும் சட்டம் துன்பம்;
மொழியினைப் பழிக்கும் மூடரும் துன்பம்;
      செழுவினை அழிக்கும் சீடரும் துன்பம்;

6. குழப்பம் துன்பம்:
அலையாய்ப் பரவும் அவலம் துன்பம்;
     மலையாய்த் தெரியும் கவலை துன்பம்;
தலையாய்க் கலங்கும் பிரிவும் துன்பம்;
     தொலையாய் மலங்கும் உறவும் துன்பம்;
கலையாய்த் திறம்பும் உளவும் துன்பம்;
     கருவாய் அரும்பும் களவும் துன்பம்;
நிலையாய் விளங்கும் களங்கம் துன்பம்;
      நிழலாய்த் தொடரும் கலக்கம் துன்பம்;

(திறம்பு=பிறழ், மாறுபடு)

7. வறட்சி துன்பம்:
மழையிலா மண்ணில் வாழ்பவை துன்பம்;
     கலையிலாக் கண்ணில் காண்பவை துன்பம்;
மொழியிலா ஊமையின் அழுகை துன்பம்;
     நிலையிலா வேலையில் உழல்கை துன்பம்;
அழிவிலாத் தீமையை உள்ளுதல் துன்பம்;
     தலையிலாச் சேனையைக் கொள்ளுதல் துன்பம்;
விழியிலாக் கண்ணில் அழகெலாம் துன்பம்;
     விலையிலா வாழ்வில் இழிவதே துன்பம்;

8. வினைகள் துன்பம்:
அச்சம் துன்பம்; அறிவால் கிட்டா
     உச்சம் துன்பம்; அடிமை கொள்ளும்
இச்சம் துன்பம்; அறிவை இழந்த
     குச்சம் துன்பம்; அணையா நெருப்பில்
மிச்சம் துன்பம்; அழியாக் கடனுள்
      சொச்சம் துன்பம்; அறிந்தும் மதியா
துச்சம் துன்பம்; அகந்தை மிகுத்த
     எச்சம் துன்பம்; ஒச்சம் துன்பம்;

(இச்சம் = விருப்பம்;, குச்சம் = புறங்கூறல், துச்சம் = சிறுமை, எச்சம் - வாரிசு, ஒச்சம் - பழுது)

9. விரோதம் துன்பம்:
அட்டம் துன்பம்; அடிமைப் படுத்தும்
     சட்டம் துன்பம்; அழிவைக் கொடுக்கும்
திட்டம் துன்பம்; அறவழி கெடுக்கும்
     நுட்பம் துன்பம்; அகந்தையில் ஆடும்
கொட்டம் துன்பம்; அற்ப எண்ணத்துத்
     திட்பம் துன்பம்; அறிவிலி மாந்தரின்
வட்டம் துன்பம்; ஆணவ மனிதரின்
      ஆட்டம் துன்பம்; நாட்டம் துன்பம்;

(அட்டம் = பகைமை, விரோதம்)

10. தொல்லை துன்பம்:
குடித்தல் துன்பம்; குழந்தையை மனைவியை
     அடித்தல் துன்பம்; கொடிய புகையினைப்
பிடித்தல் துன்பம்; குலைக்கும் பிணியால்
     துடித்தல் துன்பம்; குறைகள் நிறைந்து
நடித்தல் துன்பம்; பேணிய சொத்தைக்
     கெடுத்தல் துன்பம்; போலிக் கண்ணீர்
வடித்தல் துன்பம்; உரிமையை மறுத்தல்
     தடுத்தல் துன்பம்; படுத்தல் துன்பம்;

11. வஞ்சனை துன்பம்:
பழித்தல் துன்பம்; பகையோர் எனினும்
     இழித்தல் துன்பம்; பண்பைக் கொன்று
விழித்தல் துன்பம்; பாதையை அழித்து
     ஒழித்தல் துன்பம்; பதவியில் ஒதுக்கிச்
செழித்தல் துன்பம்; பாமர மக்களை
     மழித்தல் துன்பம்; பாவக் கணக்கில்
கொழித்தல் துன்பம்; பணியில் வீணாய்க்
     கழித்தல் துன்பம்; கிழித்தல் துன்பம்;

(இழித்தல் = இறக்குதல், கீழ்ப்படுத்துதல், விழித்தல் = அழைத்தல், மழித்தல் = மொட்டையாக்கல்)

12. வருத்துதல் துன்பம்:
பதைத்தல் துன்பம்; பதைக்கும் உயிரினை
     வதைத்தல் துன்பம்; பணியா மகவை
உதைத்தல் துன்பம்; படைத்த சிலைகளைச்
     சிதைத்தல் துன்பம்; பழியை முனைந்து
விதைத்தல் துன்பம்; பொருந்தார் புகழினைப்
     புதைத்தல் துன்பம்; புன்மை வளர்த்துக்
கதைத்தல் துன்பம்; புகையும் பகையினில்
     கொதித்தல் துன்பம்; மிதித்தல் துன்பம்;

13. அறியாமை துன்பம்:
வாடுதல் துன்பம்; வலி அறியாது
     நாடுதல் துன்பம்; திறமைகள் இன்றித்
தேடுதல் துன்பம்; தெய்வம் இகழ்ந்து
     சாடுதல் துன்பம்; திசை தெரியாது
ஓடுதல் துன்பம்; தெளிவே இலாது
     ஓதுதல் துன்பம்; விளையும் காதலை
மூடுதல் துன்பம்; பிழையாய்ப் பாடல்
     பாடுதல் துன்பம், ஆடுதல் துன்பம்;

14. சுகவீனம் துன்பம்:
சோகம் துன்பம்; சுவை இழிந்த
     மோகம் துன்பம்; சுதந்திரம் அழிந்த
போகம் துன்பம்; சுளுவில் ஒழியா
     ரோகம் துன்பம்; சுருதி குலைந்த
ராகம் துன்பம்; சுகித்தும் அழியாத்
     தாகம் துன்பம்; சுகத்தை இழந்த
வேகம் துன்பம்; சுபத்தை நல்கா
     ஊகம் துன்பம்; பாகம் துன்பம்;

15. ஒழுங்கீனம் துன்பம்:
மோதல் துன்பம்; முனைந்து அறியா
     ஓதல் துன்பம்; இணைந்து புரியாக்
காதல் துன்பம்; வாழத் தெரியாச்
     சாதல் துன்பம்; வகையும் அறியா
ஈதல் துன்பம்; வருத்திக் குலைக்கும்
     கூதல் துன்பம்; வாடைக் காற்றில்
ஊதல் துன்பம்; வளமை கெடுக்கும்
     வாதும் துன்பம்; சூதும் துன்பம்;

16. துர்பார்வை துன்பம்:
கோபம் துன்பம்; குறுகிய எண்ணக்
     கோடல் துன்பம்; குரவர் இட்ட
சாபம் துன்பம்; குட்டன் தவறைச்
     சாடல் துன்பம்; குன்றி மறையாத்
தாபம் துன்பம்; குறிக்கோள் அற்ற
     தேடல் துன்பம்; குற்றம் உற்ற
லாபம் துன்பம்; குறுகிக் குமுறும்
     வாடல் துன்பம்; மூடல் துன்பம்;

17. பழுதுகள் துன்பம்:
ஆசை துன்பம்; அற்ப குணத்தோர்
     நேசம் துன்பம்; அலறிக் கதறும்
ஓசை துன்பம்; அழிவை நல்கும்
     பாசம் துன்பம்; அகிம்சை அல்லாப்
பூசை துன்பம்; அறவழி பிறழ்ந்த
     காசும் துன்பம்; அழகு மடந்தை
மீசை துன்பம்; அழுக்கு நிறைந்த
     தேசம் துன்பம்; சேதம் துன்பம்;

18. தீயெண்ணம் துன்பம்:
வினைத்தல் துன்பம்; கண்களில் நீரினைப்
     பனித்தல் துன்பம்; கருத்தினைப் பிறர்பால்
திணித்தல் துன்பம்; கவனம் இல்லாக்
     கணித்தல் துன்பம்; கைகளைப் புறத்தே
பிணித்தல் துன்பம்; கௌரவம் அஞ்சாத்
     துணித்தல் துன்பம்; களங்கம் உற்றதை
நினைத்தல் துன்பம்; பொருத்தம் அற்றதைப்
     பிணைத்தல் துன்பம்; இணைத்தல் துன்பம்;

19. உழற்சி துன்பம்:
சிக்கல் துன்பம்; சிக்கா நீரால்
     விக்கல் துன்பம்; விலகா வலியால்
முக்கல் துன்பம்; முனைந்து தொடரா
     மக்கள் துன்பம்; விரைந்து உதவாச்
சுற்றம் துன்பம்; படுத்தும் சொத்தைப்
     பற்கள் துன்பம்; பயன்கள் அற்ற
சொற்கள் துன்பம்; பாதை முடக்கும்
     கற்கள் துன்பம்; முட்கள் துன்பம்;

20. ஏழ்மை துன்பம்:
உண்மை இல்லாத ஊரும் துன்பம்;
     உயர்வு இல்லாத பேரும் துன்பம்;
தண்மை இல்லாத தரையும் துன்பம்;
     தடுப்பாய் இல்லாத கரையும் துன்பம்;
திண்மை இல்லாத ஆண்மை துன்பம்;
     திடமாய் இல்லாத வண்மை துன்பம்;
மென்மை இல்லாத பெண்மை துன்பம்;
     மேன்மை இல்லாத எண்ணம் துன்பம்;

21. தீமைகள் துன்பம்:
இன்மையைப் பழிக்கும் இகழ்ச்சி துன்பம்;
     இயற்கையை அழிக்கும் முயற்சி துன்பம்;
நன்மையைக் கலைக்கும் வழக்கம் துன்பம்;
     நயத்தினைக் குலைக்கும் பழக்கம் துன்பம்;
தொன்மையை மறக்கும் நிலையும் துன்பம்;
     துயரினைப் பெருக்கும் கலையும் துன்பம்;
வன்மையை இழைக்கும் இயற்கை துன்பம்;
     வயத்தினை இழக்கும் செயற்கை துன்பம்;

22. பொய்கள் துன்பம்:
தாய்மை இழந்த சேய்மை துன்பம்;
     தலைமை இழந்த கைம்மை துன்பம்;
வாய்மை வழுக்கும் வாழ்த்தும் துன்பம்;
      வஞ்சிக் கொழுக்கும் வாழ்வும் துன்பம்;
பொய்மை செழிக்கும் நகலும் துன்பம்;
     போதை இழைக்கும் புகழும் துன்பம்;
தூய்மை தொலைக்கும் நியாயம் துன்பம்;
     துயரம் விளைக்கும் நேர்மை துன்பம்;

23. காலிகள் துன்பம்:
உரிமை மறுக்கும் ஆட்சி துன்பம்;
      உயர்வை அறுக்கும் வீழ்ச்சி துன்பம்;
கருணை தொலைக்கும் காட்சி துன்பம்;
      கருவைக் கலைக்கும் மாட்சி துன்பம்;
பொறுமை இழக்கும் மனமும் துன்பம்;
      புரிதல் இல்லாத் துணையும் துன்பம்;
சிறுமை புரியும் வீணர் துன்பம்;
      சிரிக்க மறந்த மாக்கள் துன்பம்;

24. மயக்கம் துன்பம்:
புகழ்ச்சிக்கு மயங்கும் மேதமை துன்பம்;
     இகழ்சிக்கு வருந்தும் பேதமை துன்பம்;
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும் துன்பம்;
     வரவுக்கு மிஞ்சிய செலவும் துன்பம்;
விழலுக்கு இறைத்த வெள்ளமும் துன்பம்;
     வேதனை நிறைத்த உள்ளமும் துன்பம்;
ஒழுக்கம் வழுவிய நடத்தையும் துன்பம்;
     உண்மை நழுவிய இடத்தேயும் துன்பம்;

25. குற்றங்கள் துன்பம்:
வீட்டை அழிக்கும் வேட்கை துன்பம்;
     நாட்டைப் பழிக்கும் நாக்கும் துன்பம்;
காட்டை ஒடுக்கும் வினையும் துன்பம்;
     காட்டிக் கொடுக்கும் கயமை துன்பம்;
சேட்டை படைக்கும் பகைமை துன்பம்;
     பூட்டை உடைக்கும் தகைமை துன்பம்;
மூட்டை கடிக்கும் அவையும் துன்பம்;
     மாட்டை அடிக்கும் சுவையும் துன்பம்;

26. அழுக்குகள் துன்பம்:
பொறாமை உறையும் மனசும் துன்பம்;
     புத்தியில் நிறையும் மாசும் துன்பம்;
வறுமையில் உழலும் வீடும் துன்பம்;
     வறட்சியில் எரியும் காடும் துன்பம்;
மாறும் உலகை மறுப்பதும் துன்பம்;
     மாநிலம் உழவை மறப்பதும் துன்பம்;
நாறும் சூழலில் வாழ்வதும் துன்பம்;
     நடை பாதையில் உமிழ்வதும் துன்பம்;

27. ஒவ்வாமை துன்பம்:
ஊளை இடுகிற நாய்கள் துன்பம்;
     ஓலம் இடுகிற கோட்டான் துன்பம்;
வேளை கெட்ட உணவும் துன்பம்;
     விபரம் கெட்ட துணையும் துன்பம்;
மூளை இல்லா ஆக்கம் துன்பம்;
     ;முயற்சியே இல்லாப் போக்கும் துன்பம்;
சாலை இல்லாப் பயணம் துன்பம்;
     சம்மதம் இல்லாக் குழுமம் துன்பம்;

28. உலோபம் துன்பம்:
ஈகை மறுக்கும் இதயம் துன்பம்;
     இன்மை விளைக்கும் உதயம் துன்பம்;
பகை வளர்க்கும் மனமும் துன்பம்;
     பண்பை இழக்கும் தினமும் துன்பம்;
சூது நிறைக்கும் எண்ணம் துன்பம்;
     சோர்வைப் பெருக்கும் உள்ளம் துன்பம்;
நீதி மறைக்கும் நெஞ்சம் துன்பம்;
     நேர்மை குலைக்கும் வஞ்சம் துன்பம்;

29. சகிப்பின்மை துன்பம்:
இன்னல் மன்னும் இல்லம் துன்பம்;
     இருமனம் ஒன்றாத் திருமணம் துன்பம்;
கன்னல் கசக்கும் சொல்லும் துன்பம்;
     கருவம் மிதக்கும் உள்ளம் துன்பம்;
முன்னர் பின்னர் முரணும் துன்பம்;
     மூடி மறைக்கும் குறையும் துன்பம்;
சன்னல் இல்லா அறையும் துன்பம்;
     சகிப்பைக் கொள்ளா உலகும் துன்பம்;

30. கழிவிரக்கம் துன்பம்:
வதுவையின் போது மடமை துன்பம்;
     முதுமையின் போது தனிமை துன்பம்;
கைதியின் தலையில் சிறைதான் துன்பம்;
     கையறு நிலையில் வையமும் துன்பம்;
கதைத்தவை எண்ணில் கசப்பின் துன்பம்;
     கடந்தவை மண்ணில் நிலைப்பின் துன்பம்;
உதவிகள் இல்லா உயிரும் துன்பம்;
     உறவுகள் இல்லா உலகும் துன்பம்;

31. பேராசை துன்பம்:
போலிகள் துன்பம்; காலிகள் துன்பம்;
     பொலிவை இழந்த மேனியும் துன்பம்;
வேலியே பயிரினை மேய்வதும் துன்பம்;
     வேதனை தருகிற சொத்தும் துன்பம்;
காளையர் ஆடும் ஆட்டம் துன்பம்;
     கடனில் மூழ்கும் ஓட்டம் துன்பம்;
தேவைகள் இன்றிக் கொள்வதும் துன்பம்;
     தேவைக்கு வாராத வசதியும் துன்பம்;

32. கொடுங்கோன்மை துன்பம்:
உருட்டலும் துன்பம்; கொள்ளை அடித்துச்
     சுருட்டலும் துன்பம்; கள்ளச் சந்தையில்
வெருட்டலும் துன்பம்; குதிரை பேரத்தில்
     விரட்டலும் துன்பம்; அவதூறு சொல்லி
அரட்டலும் துன்பம்; பணத்தால் ஆதரவு
     திரட்டலும் துன்பம்; கயமை வழிகளில்
புரட்டலும் துன்பம்; கால்களை வாரி
     மிரட்டலும் துன்பம்; மருட்டலும் துன்பம்;

33. கொடியரசு துன்பம்:
இரக்கம் இல்லா அரசும் துன்பம்;
     இரங்கல் பாடும் தலைமையும் துன்பம்;
வரிகளைப் பெருக்கும் அரசும் துன்பம்;
     வாரிசு அரசியல் தலைமையும் துன்பம்;
நரித்தனம் செய்யும் அரசும் துன்பம்;
     நாடகம் ஆடும் தலைமையும் துன்பம்;
பிரிவினை வளர்க்கும் அரசும் துன்பம்;
     பேச்சால் மழுப்பும் தலைமையும் துன்பம்;

34. தறுதலை துன்பம்:
கறுப்புப் பணத்துத் தலைமை துன்பம்;
     கருத்தைத் திருப்பும் கயமை துன்பம்;
பொறுப்பு இல்லாத் தலைமை துன்பம்;
     பொய்யில் வெல்லும் முறைமை துன்பம்;
தறுக்கிக் திகழும் தலையும் துன்பம்;
     தனக்கெனக் கொழுகும் சிலையும் துன்பம்;
பொறுக்கிப் பிழைக்கும் தலையும் துன்பம்;
     பொருண்மை இல்லா உரையும் துன்பம்;

35. பகைமை துன்பம்:
அண்டை நாட்டில் இராணுவம் துன்பம்;
     அடிப்படைப் பிழையால் தொடரும் துன்பம்;
சண்டையில் குளிரும் தந்திரம் துன்பம்;
     சந்தினில் முந்தலும் சிந்தலும் துன்பம்;
கொண்டையில் ஈரும் பேனும் துன்பம்;
     குடும்பத்துள் நாறும் போரும் துன்பம்;
பண்டையில் இருந்தே பகைதான் துன்பம்;
     பங்கெனில் ஊரும் நீரும் துன்பம்;

36. திறமையின்மை துன்பம்:
முன்னேற்றம் இல்லா அரசால் துன்பம்;
     மூடும் தொழில்வள ஆட்சியும் துன்பம்;
தன்னிறை அடையா நாடும் துன்பம்;
     தரத்தினில் முடைப்படும் வீடும் துன்பம்;
கற்பினைப் போற்றா மானுடம் துன்பம்;
     கல்வியை உயர்த்தா மாநிலம் துன்பம்;
வெளிப்படை இல்லா ஆட்சியும் துன்பம்;
     வெறுமையில் களிக்கும் சூட்சியும் துன்பம்;

37. பித்தர்கள் துன்பம்:
முழுவதும் அறியா மடமை துன்பம்;
     முனைப்பாய் ஒழுகாக் கடமை துன்பம்;
அழுவதும் குறையா நிலைமை துன்பம்;
     அணைத்துச் செல்லாத் தலைமை துன்பம்;
அழிவால் நிறையும் வெறுமை துன்பம்;
     அறிவால் பெருக்காத் திறமை துன்பம்;
பழியால் தொடரும் இடர்கள் துன்பம்;
     பலியால் அடையும் பயன்கள் துன்பம்;

38. எத்தர்கள் துன்பம்:
தானெனும் அகந்தை என்றுமே துன்பம்;
     தம்பியின் பணத்தில் தானம் துன்பம்;
பொதுநலம் கெடுக்கும் கொள்கை துன்பம்;
     சுயநலம் பெருக்கும் தன்மை துன்பம்;
ஒதுக்கலில் பதுக்கலில் என்றுமே துன்பம்;
      உறவுக்கே சலுகை என்பதும் துன்பம்;
பிதற்றலைக் காவியம் என்பது துன்பம்;
     கிறுக்கலை ஓவியம் என்பது துன்பம்;

39. நேர்மையின்மை துன்பம்:
சோற்றுக்குப் பாடும் புலமை துன்பம்;
     சுகத்துக்கு ஆடும் கயமை துன்பம்;
வேற்றுமை போற்றும் மனமும் துன்பம்;
     விவரத்தை மறைக்கும் குணமும் துன்பம்;
நாற்றுக்குச் செயற்கை உரமும் துன்பம்;
     நல்லதைக் கெடுக்கும் கரமும் துன்பம்;
தோற்றத்தைத் தருகிற பொய்மை துன்பம்;
     துரோகித்துப் பெறுகிற வளமை துன்பம்;

40. தகுதியின்மை துன்பம்:
குறைகளைக் களையும் குற்றம் துன்பம்;
     குதிருக்குள் மறையும் புதிர்களும் துன்பம்;
சிறைகளை நிறைக்கும் சீற்றம் துன்பம்;
     செய்ததை மறைக்கும் பேச்சும் துன்பம்;
நிறையினை மறுக்கும் போக்கும் துன்பம்;
     நிச்சயம் இல்லாத வாக்கும் துன்பம்;
வறுமையைக் களையாத வாழ்க்கை துன்பம்;
     வரன் அமையாத மாந்தரும் துன்பம்;

41. தரமின்மை துன்பம்:
திருத்தம் இல்லாச் செய்வினை துன்பம்;
     திரித்துப் பரப்பும் செய்திகள் துன்பம்;
பொருத்தம் இல்லாப் பெருமை துன்பம்;
     புரவல் நாடகச் சிறுமை துன்பம்;
கருத்தும் இல்லாக் கவிதை துன்பம்;
      கருணை இல்லா இதயம் துன்பம்;
கரித்தும் பழிக்கும் உரைகள் துன்பம்;
     கண்ணியம் இல்லா முறைகள் துன்பம்;

42. இழப்புகள் துன்பம்:
இலக்கை இழந்த இயக்கம் துன்பம்;
     இதயம் இழந்த காதல் துன்பம்;
இருக்கை இழந்த அலுவல் துன்பம்;
     இரவில் இழந்த தூக்கம் துன்பம்;
உடுக்கை இழந்த மேடை துன்பம்;
     உதவி இழந்த குழுமம் துன்பம்;
வாய்ப்பை இழந்த வாழ்க்கை துன்பம்;
     வருகை இழந்த சந்தை துன்பம்;

43. பித்தலாட்டம் துன்பம்:
அறமற்றுத் திரிபுகளை ஏற்றுதல் துன்பம்;
     அறிவற்று ஆண்டுகளை மாற்றுதல் துன்பம்;
முறையற்ற திட்டங்களைப் புகுத்துதல் துன்பம்;
     முடிவற்ற கடன்களைப் பெருக்குதல் துன்பம்;
திறனற்று உரிமைகளைச் சொதப்புதல் துன்பம்;
     திடமற்று வீரங்களை முழக்குதல் துன்பம்;
குறையுற்று இருளினில் புதைத்தல் துன்பம்;
     குளிரற்றுச் சிறுமையில் வதைத்தல் துன்பம்;

44. இயலாமை துன்பம்:
அல்லாமை, அறியாமை, அடங்காமை துன்பம்;
     ஆற்றாமை, தேற்றாமை, ஊற்றாமை துன்பம்;
இல்லாமை, பொல்லாமை, நில்லாமை துன்பம்;
     இயலாமை, முயலாமை, தள்ளாமை துன்பம்;
உள்ளாமை, உறங்காமை, உதவாமை துன்பம்;
     உன்னாமை, உண்ணாமை, உயராமை துன்பம்;
கல்லாமை, கொள்ளாமை, ஈயாமை துன்பம்;
     கனியாமை, இனியாமை, கதையாமை துன்பம்;

45. பொல்லாமை துன்பம்:
எண்ணாமை, எழுகாமை, எழுதாமை துன்பம்;
     திண்ணாமை, தெரியாமை, தொடராமை துன்பம்;
வல்லாமை, வளராமை, வறியாமை துன்பம்;
     வள்ளாமை, வருகாமை, புலராமை துன்பம்;
பொல்லாமை, பொறாமை, புரியாமை துன்பம்;
     பற்றாமை, படராமை, பெருகாமை துன்பம்;
துள்ளாமை, துடிக்காமை, பிடிக்காமை துன்பம்;
     படிக்காமை, நடக்காமை, நடவாமை துன்பம்;

46. கேடுகள் துன்பம்:
கொலையும் களவும் புலையும் துன்பம்;
     குறையும் தனமும் அழகும் துன்பம்;
அலையும் மனமும் தினமும் துன்பம்;
     அலறும் பதறும் குணமும் துன்பம்;
அழுகும் காயும் கனியும் துன்பம்;
     அழியும் கலையும் சிலையும் துன்பம்;
உலரும் கருகும் மலரும் துன்பம்;
     உதிரும் சருகும் கனவும் துன்பம்;

47. புகைச்சல் துன்பம்:
சினமும் செருக்கும் பகையும் துன்பம்;
     சிகையும் சடையும் புகையும் துன்பம்;
எரியும் வனமும் பிணமும் துன்பம்;
     எகிரும் பணமும் குணமும் துன்பம்;
பிளிறும் களிரும் விடையும் துன்பம்;
     பிடியும் தளரும் நடையும் துன்பம்;
அகமும் புறமும் அழுக்கே துன்பம்;
     அறிவில் நிறையும் பழுதே துன்பம்;

48. சுமைகள் துன்பம்:
எண்ணில் எதிர் பார்ப்பும் துன்பம்;
     ஏலாச் சுமை சேர்ப்பும் துன்பம்;
பொன்னும் பெண்ணும் மண்ணும் துன்பம்;
     பொருளும் அறியா வாழ்வும் துன்பம்;
இன்மை விலகாத் தன்மையும் துன்பம்;
     இன்னா செய்யும் எண்ணமும் துன்பம்;
நன்மை அறியாப் பார்வையும் துன்பம்;
     நல்லவை புரியா வாழ்க்கையும் துன்பம்;

49. தெளிவின்மை துன்பம்:
துணிவு இல்லா முயற்சியே துன்பம்;
     பணிவு இல்லாப் பயிற்சியே துன்பம்;
கனிவு இல்லாச் சொல்லே துன்பம்;
     இனிமை இல்லா வாழ்வே துன்பம்;
தெளிவு இல்லா அறிவே துன்பம்;
     திறமை இல்லாக் குறையே துன்பம்;
முழுமை இல்லா எதுவுமே துன்பம்;
     முறைமை இல்லா மனமே துன்பம்;

50. விடையின்மை துன்பம்:
படிதல் இல்லா மகவே துன்பம்;
     பக்குவம் இல்லா மூப்பே துன்பம்;
பிடிதல் இல்லா விடுப்பே துன்பம்;
     விடுதல் இல்லாப் பிடிப்பே துன்பம்;
விடிவும் இல்லா வினையே துன்பம்;
     விடையும் இல்லா வினாவே துன்பம்;
முடிவும் இல்லாக் காதையே துன்பம்;
     முக்தியும் இல்லாப் பாதையே துன்பம்;

***

33 comments:

  1. சிறந்த ஆக்கம் தொடருங்கள்,வாழ்த்துகள்.......

    ReplyDelete
  2. @இராஜ ப்ரியன்

    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  3. Kai kodukka kaigal kodukkavum..
    Kai kodukka kaathirikkum kaigal..

    ReplyDelete
  4. மிக மிக உண்மையான துன்பங்கள்...இது இயற்கையின் ஒருவித இன்பங்கள்...


    முடிவும் இல்லாக் காதையே துன்பம்;

    புரியாத வரிகள் ...
    முடிவில்லா கதையா?
    முடிவில்லா காதையா?
    [மன்னிக்கவும் நக்கீரியாக மாற முயற்சித்ததற்கு]

    ReplyDelete
  5. எளிமையாய் துன்பம்
    வலிமையாய் இன்பம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @Krshi
    உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

    காதை என்பது கதைக்கான இன்னோரு வார்த்தை. அதற்கு கதையின் பாகம் என்னும் அர்த்தமும் உண்டு. எனவே முடிவே இல்லாத அத்தியாயம் என்பதும் துன்பம் தானே. உதாரணம்: ஈழம்.

    ReplyDelete
  7. @தமிழ் யாளி

    உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  8. மன்னிக்கவும் நண்பரே!
    வார்த்தையில் தவறிவிட்டேன்!
    மிக அமைதியான பதிலுக்கு நன்றிகள் பல!
    மனமார்ந்த வாழ்த்துக்கள் பல!

    ReplyDelete
  9. @krshi

    மன்னிக்க எந்தத் தவறும் செய்யவில்லை. சந்தேகம் எனும் போது கேட்பதில் தவறு ஏதும் இல்லை. அதைத் தீர்த்து வைக்க வேண்டியது எனது கடமை.

    தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள் நிச்சயம் உற்சாகம் அளிக்கிறது. அதாவது இவை படிக்கப் படுகின்றன எனும் உணர்வையாவது தருவதால்.

    நன்றி.

    ReplyDelete
  10. உண்மையில் உங்க வார்த்தைகள்,அதாவது கவிதைகள் போற்றபடவேண்டியவை!
    யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என சொல்வாங்க, நான் பொன் என சொல்ல வில்லை பொன்னினும் மேன்மையானவை! உங்களை போன்றோர் படைக்கும் படைப்புகள்!
    வார்த்தைகளில் துள்ளி விளையாடும் மொழிகள்! அழகாக அல்லி நடைபோடும் மொழிகள்!
    எம்மொழியிலும் உள்ள வார்த்தைகள் அழகாக இணையும் போது ஆண்களுக்கு பதுமையாவும் ,பெண்களுக்கு புதுமையாவும் ரசிக்க தோணுவது, உங்களை போன்ற புலவர்கள் படைக்கும் இத்தகைய படைப்புகள் தானே! --

    ReplyDelete
  11. @V. Rajalakshmi

    தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல தோழி.

    எல்லாப் புகழும் இறைவனுக்கும் அன்னைத் தமிழுக்குமே.

    ReplyDelete
  12. தமிழின் புதல்வருக்கு நன்றிகள் பல
    மதித்து வாய் மொழிந்ததற்க்கு!

    என்னை போன்ற ரசிகர்களுக்காக கொஞ்சம் புகழ் உங்களுக்கும் வைத்துகொள்ளுங்களேன்.

    ReplyDelete
  13. சொல்ல வார்த்தைகள் இல்லை...
    நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை..

    அருமை. !

    ReplyDelete
  14. @yohannayalini

    தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல தோழி.

    இன்னும் கொஞ்சம் சீர் படுத்த வேண்டும் எனும் எண்ணத்திலுள்ளேன். விரைவில் செய்கிறேன். கவனித்து வாருங்கள். அதாவது குறைந்து பட்ச மாற்றம், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைப்பு; அப்போது சிந்தனைக்கோ, எடுத்துக்காட்டவோ ஏதுவாக இருக்கும் என்பது சில் நல்ல உள்ளங்களின் பரிந்துரை.

    தங்களைப் போன்ற வாசக நல் உள்ளங்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் உற்சாகமளிக்கின்றன.

    நன்றிகள்.

    ReplyDelete
  15. 50. விடையின்மை துன்பம்:
    படிதல் இல்லா மகவே துன்பம்;
    பக்குவம் இல்லா மூப்பே துன்பம்;
    பிடிதல் இல்லா விடுப்பே துன்பம்;
    விடுதல் இல்லாப் பிடிப்பே துன்பம்;
    விடிவும் இல்லா வினையே துன்பம்;
    விடையும் இல்லா வினாவே துன்பம்;
    முடிவும் இல்லாக் காதையே துன்பம்;
    முக்தியும் இல்லாப் பாதையே துன்பம்

    “இயிம்பதாவது படைப்பு மட்டும் 1000 மதிபெண்கள் பெறுகிறது”

    Miga Unmaiyaana thunbam! "vidai illa vina"

    ReplyDelete
  16. @Anonymous

    1000 மதிப்பெண்களுக்கும் நன்றிகள். :)

    தேடுதலை முனைப்பாகக் கொண்ட இதயங்களுக்கு, மிக உண்மையான துன்பம் விடையில்லா வினாக்களாக இருப்பினும் அவையே ஒருவேளை இரகசியம் நிறைந்த வாழ்க்கையின் எஞ்சும் மிச்சங்களாகவும் இருக்கக் கூடும். என்னமோ தோணிற்று...

    ReplyDelete
  17. May be! May not be!

    ReplyDelete
  18. எஞ்சும் மிச்சமென்றால் இன்னும் தீர்க்கப்படாத வினாக்கள் நிச்சயமாக இருக்கும். அவை துன்பமா அல்லது தெரியாமலே போன இன்னொரு இரகசியமா என்பதில் துன்பத்தைக் காட்டிலும் ஆவல்தான் மிஞ்சி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ஆவல்கள் தொக்கி நிற்கையில் மீண்டும் பிறவிகள் உண்டு. எனவே அதுவும் பிறவிச் சுழற்சியில் விழுகின்ற துன்பமே. ஆதலின் ஒரு வழியில் விடையில்லாக் கேள்விகள் துன்பமே. (ஆக ஒரு வழியாக எழுதியதை உண்மையென்று சொல்லித் தப்பித்தேன்!)

    ReplyDelete
  19. May be:-இரகசியம் [தேடல் இருக்கும் வரைதான் அது இரகசியம்]ஒருவரின் அறியாமையை ஆவல் என கொள்வதும் ஒருவகை துன்பம்,ஆவல்கள் அதாவது தேடல்களால் மீண்டும் பிறவி எனில் ஆவல்களையும்,தேடல்களையும் சாதலில் சேர்ப்பது உத்தமம்..

    ReplyDelete
  20. இரகசியம் நிறைந்த வாழ்க்கை என்பதைவிட, இனிமையான நினைவுகள் எனலாம் [நினைவுகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என வாதாடுவீர்கள்]

    ReplyDelete
  21. @Anonymous
    ///ஒருவரின் அறியாமையை ஆவல் என கொள்வதும் ஒருவகை துன்பம்,
    உண்மைதான்.
    ///ஆவல்கள் அதாவது தேடல்களால் மீண்டும் பிறவி எனில் ஆவல்களையும்,தேடல்களையும் சாதலில் சேர்ப்பது உத்தமம்..
    அதாவது தீராத ஆவல்களே, மறைமுகமாகத் தீராத் தேடல்களே மறுபிறவிக்கு வித்தாகிவிடுகின்றனவாம். மறுபிறவி என்றாலே அஃது மோட்சமற்ற நிலையில் துன்பம் தானே. ஆனால் அவற்றை நேரடியாகச் சாதலில் சேர்ப்பது நியாயமாகத் தெரியவில்லை. :)

    ReplyDelete
  22. @Anonymous
    //இரகசியம் நிறைந்த வாழ்க்கை என்பதைவிட, இனிமையான நினைவுகள் எனலாம் [நினைவுகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என வாதாடுவீர்கள்///

    அதாவது தீர்க்கப்படாத தேடல்கள் விடை தெரியாத இரகசியங்கள் தானே. அஃது எப்படி இனிமையான நினைவுகள் என்று விளங்கவில்லை. விளக்குங்களேன். வாதத்திற்காக அல்ல உண்மையில் உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ளத்தான்.

    ReplyDelete
  23. ஓ ஒருவேளை தேடலுக்கான எண்ணங்களை நீங்கள் இனிமையான நினைவுகள் என்கிறீர்களோ?

    ReplyDelete
  24. நினைவுகள் எப்போதுமே இனிமைதான் ஏன் என்றால் அது மீண்டும் மீண்டும் இனிமைதான் [How is?]

    ReplyDelete
  25. ஆவல்கள், தேடல்களை நிறுத்திவிட்டால்...சாதலில் தானே அர்த்தம் ஆகும்

    ReplyDelete
  26. தேடல்கள் இல்லாதா மனிதன் இருக்கானா? [நீங்க யெதும் தேடுவதில்லையா? ]

    ReplyDelete
  27. ’நினைவுகள் எப்போதுமே இனிமைதான்’ என்பது பிரச்சினை அல்ல. உங்களுக்கு மேலே சொல்லி இருக்கும் கேள்வி புரியவில்லை போல் தெரிகிறது. இனிமைகளை நாம் ஏன் துன்பம் ஐம்பதில் பேசப் போகிறோம்? :)

    ReplyDelete
  28. ///ஆவல்கள், தேடல்களை நிறுத்திவிட்டால்...சாதலில் தானே அர்த்தம் ஆகும்
    ///தேடல்கள் இல்லாதா மனிதன் இருக்கானா? [நீங்க யெதும் தேடுவதில்லையா? ]

    புரிதல்கள் அற்ற பதிவுகள் என்று நினைக்கிறேன்.

    முதலில் ஆவல்களையோ, தேடல்களையோ நிறுத்த வேண்டுமென்பது குறிப்பும் அல்ல; அது பற்றிப் பேசப்படவும் இல்லையே.

    தேடல்கள் அற்ற மனிதர்கள் பற்றியப் பேச்சும் பொருத்தம் அற்றதாகக் கருதுகின்றேன்.

    பேசப்படும் பொருளில் இருந்து அதிகம் விலகிச் சென்றுவிட்ட கருத்துக்களால் யாருக்கும் பயன் ஏதும் விளையாது. எனவே பொருத்தம் அற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  29. ///நினைவுகள் எப்போதுமே இனிமைதான் ஏன் என்றால் அது மீண்டும் மீண்டும் இனிமைதான் [How is?]

    உண்மைதான். இன்பம் ஐம்பதில் இதைக் காணலாமே:
    நெஞ்சினில் பிறக்கும் நினைவுகள் இன்பம்;

    ReplyDelete
  30. ONE STAGE OF LIFE IS PLEASURE AND ANOTHER STAGE IS SORROW.

    ReplyDelete